From Wikipedia, the free encyclopedia
எகிப்தியக் கோவில்கள் பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களினதும், எகிப்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்த மக்களினதும் வழிபாட்டுக்கெனக் கட்டப்பட்டவையாகும். இக்கோவில்கள் அதில் குடியிருந்த மன்னர்களினது அல்லது தெய்வங்களினது இல்லமாகக் கருதப்பட்டது. இங்கு எகிப்தியர்கள் பலியிடல், விழாக்கள் போன்ற தமது சமயச் சடங்குகளை மேற்கொண்டனர். இக்கோவில்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பாரோக்களின் கடைமையாகக் காணப்பட்டது. இதற்காக பாரோக்கள் குறிப்பிடத்தக்களவு வளங்களை கோவிலின் கட்டுமானத்துக்கும் பராமரிப்புக்கும் ஒதுக்கினர். பெரும்பாலான சடங்குகள் பாரோக்களால் நியமிக்கப்பட்ட பூசகர்களினால் நடத்தப்பட்டன. தேவையான போது பாரோக்கள் பெரும்பாலான சடங்குகளை மேற்கொள்ள பூசகர்களை அனுமதித்தனர். எனினும் மக்களுக்கு இவ்வாறான சடங்குகளில் நேரடியாகக் கலந்துகொள்ளவோ கோவிலின் மிகவும் புனிதமான இடங்களில் நுழையவோ அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கோவிலானது எகிப்திலிருந்த எல்லா வகுப்பு மக்களுக்கும் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்தது. அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்யவும், காணிக்கைகளைச் செலுத்தவும், அங்கிருந்த தெய்வத்திடம் அறிவுரைகளைக் கேட்பதற்கும் சென்றனர்.
கோவிலின் முக்கியப் பகுதி கருவறையாகும். இங்கு அக்கோவிலிலுள்ள தெய்வத்தின் உருவச்சிலை காணப்பட்டது. கருவறைக்கு வெளியே இருந்த அறைகள் மிகப் பிரமாண்டமாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டன. எனவே, கி.மு.4000இல் சிறியவையாக இருந்த இந்தக் கோயில்கள் கி.மு. 1550-1070 காலப்பகுதியில் எகிப்திய ராச்சியத்தின் கீழ் பிரமாண்டமான மாளிகைகளாக வளர்ந்தன. இம் மாளிகைகளே பண்டைய எகிப்தியக் கட்டடக்கலையின் மாபெரும் உதாரணமாகவும், நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் கட்டடமாகவும் காணப்படுகின்றன. அவர்களது வடிவமைப்பில் மூடப்பட்ட மண்டபங்கள், திறந்தவெளி அரங்குகள், விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பாதையில் அமைக்கப்பட்ட பாரிய நுழைவாயில்கள் என்பன காணப்பட்டன. இவைதவிர, கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வெளிமதிலின் உள்ளே பல்வேறு இரண்டாம் நிலைக் கட்டடங்களும் காணப்பட்டன.
இவ்வாறான கோவில்கள் பாரியளவிலான நிலங்களையும் கொண்டிருந்தன. அந்நிலங்களைப் பராமரிப்பதற்கென ஆயிரக்கணக்கான வேலையாட்களையும் அது கொண்டிருந்தது. இதனால் கோவில்கள் சமய நிலையங்களாக மட்டுமன்றி முக்கிய பொருளாதார மையங்களாகவும் திகழ்ந்தன. இத்தகைய கோவில்களை நிர்வகித்த பூசாரிகள் ஆட்சியதிகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பிரயோகித்தனர். மேலும் சிலவேளைகளில் மன்னர்களின் அதிகாரத்துக்கு சவால் விடுமளவுக்கும் அவர்கள் முன்னேறியிருந்தனர்.
எகிப்தில் கோவில் கட்டும் பணி எகிப்தின் வீழ்ச்சி மற்றும் ரோமப் பேரரசுக்கு அடிமைப்படும் வரையில் தொடர்ந்தது. கிறித்தவ மதத்தின் வருகையைத் தொடர்ந்து எகிப்திய சமயம் பாரிய இடைஞ்சல்களை எதிர்நோக்கியது. அதன் கடைசிக் கோவில் கி.பி.550ல் மூடப்பட்டது.பல நூற்றாண்டு காலமாக இக் கட்டடங்கள் அழிவையும் தொடர் புறக்கணிப்பையும் எதிர்நோக்கின. ஆயினும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பண்டைய எகிப்தைப் பற்றிய ஆர்வம் ஐரோப்பாவில் பரவியது. இதனால் எகிப்தியவியல் எனும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சியியலும் தோன்றியது. எகிப்திய நாகரிகத்தின் சிதிலங்களைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளும் இங்கு வரத்தொடங்கினர்.அதிகளவிலான கோவில்கள் இன்று தப்பியுள்ளன. இவற்றுட் சில, உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களாகவும் மாறியுள்ளன. நவீன எகிப்தின் பொருளாதாரத்துக்கு இவை பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. எகிப்தியவியலாளர்கள் தப்பிய கோவில்கள் மற்றும் அழிந்த கோவில்களின் எச்சங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். ஏனெனில் இவை பண்டைய எகிப்திய சமூகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான மிக இன்றியமையாத ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
பண்டைய எகிப்தியக் கோவில்கள் பூமியில் கடவுள்கள் வாழ்வதற்கான இடங்களாக கருதப்பட்டன. இதனால், கோவிலை குறிப்பதற்கு எகிப்தியர்கள் பயன்படுத்திய ḥwt-nṯr எனும் சொல் "கடவுளின் மாளிகை" எனும் பொருளைத் தருவதாகும்.[1] கோவிலில் கடவுளின் பிரசன்னம், மனிதனையும் கடவுளையும் தொடர்புபடுத்தியதோடு, சடங்குகளினூடாக கடவுளுடன் மனிதன் தொடர்பாடவும் வழிவகுத்தது. இச் சடங்குகள், கடவுளை கோவிலில் தொடர்ந்து இருப்பதற்கும், இயற்கையின் மீது சரியான முறையில் ஆட்சி செலுத்தவும் உதவுவதாக நம்பப்பட்டது. இதனால், அவை எகிப்திய நம்பிக்கையின்படி மனித சமுதாயத்தினதும் இயற்கையினதும் விதிக்கப்பட்ட கடமையின் சீரான போக்குக்கு வழியமைத்தது.[2] இக் கடமையை சீராகப் பேணுவதே எகிப்திய சமயத்தினதும்,[3] கோவிலினதும் முக்கிய நடவடிக்கையாக இருந்தது.[4]
பாரோக்கள் கடவுள் தன்மையைக் கொண்டிருப்பதாக கருதப்பட்டதால்,[Note 1] ஒரு புனிதமான அரசராக பாரோக்கள், எகிப்தின் கடவுளுக்கான பிரதிநிதியாகவும், விதிக்கப்பட்ட கடமைகளுக்கான ஆதரவாளராகவும் கருதப்பட்டனர்.[6] எனவே, கொள்கை ரீதியில், கோவிலில் சமயச் சடங்குகளை மேற்கொள்வது அவனது கடமையாக இருந்தது. ஒரு பாரோ உண்மையிலேயே தவறாது சடங்குகளில் கலந்துகொண்டானா என்பது சந்தேகத்துக்கிடமானதே. மேலும், எகிப்து முழுவதிலும் கோவில்கள் பரந்து காணப்பட்டமையால் நிச்சயமாக அவனால் எல்லாக் கோவில்களுக்கும் சமுகமளிக்க முடிந்திருக்காது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடமைகள் பூசாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் ஒரு பாரோ தனது ஆட்சிக்குட்பட்ட கோவில்களைப் பராமரிப்பதற்கும், அவற்றை விரிவாக்குவதற்கும் உதவி வழங்கியுள்ளான்.[7]
பாரோ தனது சடங்கு மேற்கொள்ளும் உரிமையை வேறொருவருக்கு வழங்கியிருந்தாலும், சடங்குகள் செய்யும் உரிமை கட்டாயமாக உயர் நிலை பூசாரிகளுக்கே வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகளில், பொதுமக்கள் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகள் கோவில்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்த தனியான மடங்களில் நடைபெற்றன. எவ்வாறாயினும், மனிதருக்கும் கடவுளர்க்குமான பிரதான இணைப்பு என்ற வகையில், இக்கோவில்கள் சாதாரண பொதுமக்களின் மதிப்பை பெற்றிருந்தது.[8]
ஒவ்வொரு கோவிலும் ஒரு முதன்மைக் கடவுளைக் கொண்டிருந்ததுடன் பெரும்பாலான கோவில்கள் ஏனைய தெய்வங்களையும் உள்ளடக்கியிருந்தன.[9] எவ்வாறாயினும் எல்லாத் தெய்வங்களுக்கும் கோவில்கள் காணப்படவில்லை. பெரும்பாலான பேய்களும் வீட்டுத் தெய்வங்களும் முதன்மையாக மாய மற்றும் தனிப்பட்ட சமய நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்ததோடு, கோவில் விழாக்களில் இவற்றின் பிரசன்னம் குறைவாகவே இருந்தது. மேலும் சில தெய்வங்கள் பிரபஞ்ச இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருந்தபோதும், அவற்றுக்கு கோவில்கள் கட்டப்படவில்லை. இதற்கான காரணமும் அறியப்படவில்லை.[10] தமக்கெனத் தனிப்பட்ட கோவில்களை கொண்டிருந்த தெய்வங்களில் பல குறிப்பாக எகிப்தின் சில பகுதிகளில் மதிப்பு பெற்றிருந்தன. எனினும், உள்ளூர் தொடர்புகளைக் கொண்டிருந்த பல தெய்வங்களும் நாடளாவிய ரீதியில் முக்கியம் பெற்றிருந்தன.[11] நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வழிபடப்பட்ட தெய்வங்கள் கூட தமது முதன்மைக் கோவில்கள் அமைந்துள்ள நகரங்களுடன் தொடர்பு பட்டிருந்தன. எகிப்திய படைப்புப் புனைகதைகளில், முதலாவது கோவிலானது ஒரு தெய்வத்தின் புகலிடமாக உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறித்த தெய்வம் (ஒவ்வொரு நகரிலும் இத் தெய்வத்தின் பெயர் மாறுபடுகிறது.) படைப்பு ஆரம்பமான மணல் திட்டு ஒன்றின்மீது நின்றிருந்ததாகவும், அவ்விடமே முதல் கோவிலாக மாறியதாகவும் அது குறிப்பிடுகிறது.[12] தெய்வத்தின் முதலாவது வீடு என்றவகையிலும், ஒரு நகரின் கற்பனை ரீதியிலான உருவாக்கப் புள்ளி என்ற வகையிலும், கோவிலானது குறித்தவொரு பகுதியின் மைய நிலையமாகக் கருதப்பட்டதோடு, அந்நகரின் காவல் தெய்வம் ஆட்சிபுரியும் இடமாகவும் போற்றப்பட்டது.[13]
பாரோக்கள் இறப்புக்குப் பின்னான வாழ்வில் தமது ஆவிகளை நீடித்திருக்கச் செய்யும் பொருட்டு காணிக்கைகள் செலுத்துமுகமாகவும் கோவில்களைக் கட்டினர். இவை பெரும்பாலும் அவர்களது கல்லறைகளின் அருகிலேயே அமைந்திருந்தன. இக் கோவில்கள் வழிவழியாக "கல்லறைக் கோவில்கள்" என அழைக்கப்பட்டு வந்ததோடு, திருக்கோவில்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. எனினும், அண்மைய காலங்களில், செரார்ட் கேனி போன்ற எகிப்தியவியலாளர்கள் இப்பிரிவினை தெளிவற்றுக் காணப்படுவதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எகிப்தியர்கள் கல்லறைக் கோவில்களை வேறு பெயர் கொண்டு அழைத்திருக்கவில்லை.[14][Note 2] இறந்தோருக்கான சடங்குகளும், தெய்வங்களுக்கான சடங்குகளும் பிரித்தறிய முடியாதவை; இறப்பைச் சூழ்ந்த குறியீட்டியல் அனைத்து எகிப்தியக் கோவில்களிலும் காணக்கிடைக்கிறது.[16] கல்லறைக் கோவில்களில் குறிப்பிட்டளவு கடவுள் வழிபாடும் காணப்பட்டுள்ளது. எகிப்தியவியலாளரான இசுடீபன் குயிர்க்கின் கூற்றுப்படி, "எல்லாக் காலப்பகுதியிலும் அரச சடங்குகள் கடவுளுடன் தொடர்பு பட்டிருந்தன. அதேபோல்.... கடவுள் தொடர்பான சடங்குகளும் மன்னருடன் தொடர்பு பட்டிருந்தன".[17] எவ்வாறாயினும், சில கோவில்கள் இறந்த மன்னர்களை நினைவு கூரவும், அவர்களது ஆவிகளுக்கு காணிக்கை செலுத்தவும் பயன்படுத்தப்பட்டமை தெளிவாகின்றது. இவற்றின் சரியான நோக்கம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இவை மன்னர்களையும் கடவுளர்களையும் ஒருங்கிணைத்து, மன்னனின் நிலையை சாதாரண மன்னர் நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குப் பயன்பட்டிருக்கலாம்.[18] எச் சந்தர்ப்பத்திலும், கல்லறைக் கோவில்களையும் திருக் கோவில்களையும் பிரித்தறிவதில் ஏற்படும் சிரமம், எகிப்திய நம்பிக்கையில் அரசுரிமையும், கடவுள்நிலையும் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பிரதிபலித்து நிற்கின்றது.[19]
கோவில்கள் பொருளியற் செயற்பாடுகளின் இன்றியமையாத மையங்களாகச் செயற்பட்டன. இவற்றுள் மிகப் பெரிய கோவிலைப் பராமரிக்கப் பாரியளவான வளங்களும், ஆயிரக்கணக்கான பூசாரிகள், கைவினைஞர்கள் மற்றும் வேலையாட்கள் ஆகியோரும் தேவைப்பட்டனர்.[20] கோவிலின் பொருளியற் செயற்பாடுகள் ஒரு பெரிய எகிப்திய வீட்டின் செயற்பாட்டை ஒத்திருந்தன. ஒரு பெரிய பண்ணையாரின் தொழிலாளர்களைப் போல் கோவிலுக்கென்றே ஒதுக்கப்பட்ட வேலையாட்கள் இருந்தனர். கோவில் நிலங்கள் மற்றும் அதன் நிர்வாகத்தைக் குறிக்கும் எகிப்தியச் சொல்லான, "வீடு" அல்லது "பண்ணைத் தோட்டம்" எனும் பொருளுடைய ப்ர் எனும் சொல்லிலிருந்து இவ்வொப்புமையை அறிய முடிகிறது.[21]
கோவிலின் சில விநியோகங்கள் மன்னனால் வழங்கப்படும் நேரடி நன்கொடைகள் மூலம் பெறப்பட்டன. எகிப்து ஒரு பேரரசாக விளங்கிய புதிய அரசின் காலத்தில், ராணுவ நடவடிக்கைகளின் போது சூறையாடப்பட்ட செல்வத்தின் மூலமாகவோ அல்லது தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளினால் வழங்கப்பட்ட கப்பத் தொகையின் மூலமாகவோ இந் நன்கொடைகள் வழங்கப்பட்டன.[22] மன்னன் விதிக்கும் பல்வேறு வரிகள் மூலம் ஈட்டப்பட்ட வருமானமும் சிலவேளைகளில் நேரடியாகக் கோவில் பராமரிப்புக்கென வழங்கப்பட்டன.[23] தனி நபர்கள் மூலம் நிலம், அடிமைகள் அல்லது பொருட்கள் வடிவிலும் கோயிலுக்கு வருமானம் பெறப்பட்டது. இவர்கள் இறப்புக்குப் பின்னான வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதன் பொருட்டு ஒரு நன்கொடையாக அல்லது பூசாரிகளுக்கான சேவைக் கட்டணமாக இவற்றை வழங்கினர்.[24]
கோவிலின் பொருளியல் ஆதாரங்களில் பெரும்பாலானவை அதன் சொந்த வளவசதிகளிலிருந்தே பெறப்பட்டன. இவற்றில் கோவில் எல்லைக்கு வெளியிலிருந்த பாரியளவிலான நிலங்களும் அடங்கும். சிலவேளைகளில் இந்நிலங்கள் கோவில் அமைந்திருந்த பகுதியிலிருந்து வேறு பகுதிகளிலும் அமைந்திருந்தன. கோவிலின் மிகவும் இன்றியமையாத சொத்துக்களாக விவசாய நிலங்கள் காணப்பட்டன. இவ்விவசாய நிலங்கள் தானியங்கள், பழங்கள், அல்லது வைன் போன்றவற்றின் உற்பத்திக்கோ அல்லது கால்நடை வளர்ப்புக்கோ பயன்பட்டன. இந்நிலங்களை விவசாயிகளுக்குக் குத்தகையாக வழங்கி விளைச்சலில் ஒரு பகுதியை வருமானமாகப் பெற்று, கோவில்களே நேரடியாகவோ அல்லது அரச நிர்வாகத்துடன் இணைந்தோ நிலங்கள் முகாமைத்துவம் செய்யப்பட்டன. மேலும், கோவில்கள் பாலைவனப் பகுதிகளுக்குப் படைகளை அனுப்பி உப்பு, தேன், வேட்டைப் பொருட்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த கனிமங்கள் போன்ற மூலப்பொருட்களைச் சேகரித்தன.[26] சில கோவில்கள் கப்பற் படைகளைக் கொண்டிருந்ததோடு, இவற்றின் மூலமாக நாடுமுழுவதிலுமோ அல்லது அயல்நாடுகளுடனோ கூட வாணிபம் செய்தும் வந்தன. ரிச்சர்ட் H. வில்கின்சனின் கூற்றுப்படி, கோவிலின் பகுதிகள் "எகிப்தின் ஒரு பகுதியையே பிரதிநிதித்துவப்படுத்தின".[27] ஒரு பாரிய பொருளியல் மையம் மற்றும் உள்ளூர் மக்கள்தொகையில் ஒரு பாரிய பங்கினருக்கு வேலையளிக்கும் நிறுவனம் என்ற வகையில், அக்கோவில் அமைந்திருந்த நகரத்தின் முக்கிய பகுதியாக கோவில் விளங்கியது. மறுதலையாக, எப்போதெல்லாம் ஒரு வெற்று நிலத்தில் கோவிலொன்று அமைக்கப்பட்டதோ, அதனைப் பராமரிக்கும் வகையில் ஒரு புதிய நகரும் அதனருகிலேயே உருவாக்கப்பட்டது.[28]
இவ்வனைத்துப் பொருளியற் சக்தியும் இறுதியாக பாரோவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருந்தது. மேலும், கோவிலின் உற்பத்திகள் மற்றும் சொத்துக்கள்மீது பெரும்பாலும் வரிகள் விதிக்கப்பட்டன. பூசாரிகள் உட்பட கோவிலின் பணியாளர்கள், அரசுப் பணித்திட்டங்களுக்கான கட்டாய வேலை ஆட்சேர்ப்புக்குப் பயன்படுத்தப்படும், அரசு ஊழியக் கடமை முறைமையின் (corvée system) கீழ்ப் பணியாற்றினர்.[29] மேலும், சில குறிப்பிட்ட தேவைகளுக்கான வழங்கல்களைத் தருமாறும் இவை பணிக்கப்படலாம். ஆறாம் அரசமரபுக் காலத்தில் (அண். பொ.ஊ.மு. 2255–2246), ஆர்குஃப் என்பவனால் வழிநடத்தப்பட்ட ஒரு வாணிபப் பயணத்துக்காக, அவர்கள் விரும்பிய எந்தக் கோவிலிலிருந்தும் வழங்கலைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.[29] மேலும், தேபன் நெக்ரோபோலிசில் அமைந்திருந்த புதிய அரசுக் காலத்துக் கல்லறைக் கோவில்கள், தெய்ர் எல்-மெதினாவில் கல்லறைக் கட்டுமானத்துக்கு அரசினால் நியமிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை மேற்பார்வை செய்தன.[30] கோவில்கள் அல்லது குறிப்பிட்ட மக்கள் வகுப்பினருக்கு வரிவிதிப்பு மற்றும் கட்டாயப் பணி ஆகியவற்றிலிருந்து மன்னர்கள் விலக்களிக்கலாம்.[29]
அரச நிர்வாகம் தான் விரும்பிய ஏதேனுமொரு கோவிலின் செல்வாக்கைக் கூட்டும் பொருட்டு இன்னொரு கோவிலின் வளங்களை அக்குறிப்பிட்ட கோவிலுக்கு மாற்றலாம். எனவே, ஒரு மன்னன் தான் விரும்பிய கடவுளின் கோவில்களுக்கான வருவாயைக் கூட்டக்கூடியதாயிருந்தது. மேலும், அண்மைய ஆட்சியாளர்களின் கல்லறைக் கோவில்கள் நீண்டகாலத்துக்கு முன் இறந்த பாரோக்களுக்கான கல்லறைக் கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களை உள்ளீர்த்துக்கொள்ளவும் முயற்சித்தன.[31] கோவில் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் உச்சபட்ச வழிமுறையாக, குறித்த கோவிலுக்கு நாடெங்கும் காணப்பட்ட சொத்துக்களை மீளாய்வு செய்து மீள்பிரிப்பும் செய்யப்பட்டது. இதன் மூலமாக சிலவேளைகளில் சில கோவில்கள் முழுமையாக மூடப்பட்டன. இவ்வாறான மாற்றங்கள் எகிப்தின் பொருளியற் தரைத்தோற்றத்தைக் குறிப்பிடத்தக்களவில் மாற்றக்கூடியனவாகவும் இருந்தன.[32] எனவே, மன்னன் தனது நாட்டின் வளங்களையும் மக்களையும் முகாமைத்துவம் செய்வதில் கோவில்கள் முக்கிய கருவிகளாக விளங்கின.[33] தனது சொந்தப் பொருளியல் மண்டலத்தின் நேரடி மேற்பார்வையாளர்கள் என்ற வகையில், பாரிய கோவிலின் நிர்வாகங்கள் பாரோவின் மீது குறிப்பிடத்தக்களவு செல்வாக்குச் செலுத்தியதோடு, ஒரு பலவீனமான பாரோவின் அதிகாரத்துக்குப் போட்டியாகவும் விளங்கியிருக்கக் கூடும்.[34] எனினும், இவை எந்தளவுக்குத் தற்சார்புடையனவாக விளங்கின என்பது தெளிவாகத் தெரியவில்லை.[35]
எகிப்து ரோமின் ஒரு மாகாணமாக மாறியதன் பின்னர், ரோம ஆட்சியாளர்கள் தமது துவக்க நடவடிக்கைகளில் ஒன்றாக, நிலவுடைமை மற்றும் வரிவிதிப்பில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தினர். ஒரு முக்கிய நிலவுடைமையாளர்கள் எனும் வகையில் எகிப்தியக் கோவில்கள் தாம் சொந்தமாக வைத்திருந்த நிலங்களுக்காக அரசுக்கு வாடகை செலுத்தவோ அல்லது அரசு வழங்கும் ஒரு தொகைக்கு மாற்றாகத் தமது நிலங்களை அரசிடம் கையளிக்கவோ பணிக்கப்பட்டன.[36] எனினும், ரோம ஆட்சியின் கீழ், கோவில்களும் பூசாரிகளும் வரிவிதிப்பு மற்றும் கட்டாயப் பணி ஆகியவற்றிலிருந்தான விலக்கு போன்ற சலுகைகளைத் தொடர்ந்து அனுபவித்தன. அரசு மட்டத்தில், கோவிலின் தலைமை அலுவலர்கள் ரோம அரசுப் பொறிமுறையில் பங்குபெற்றனர். எடுத்துக்காட்டாக, இவர்கள் வரி சேகரிப்பு மற்றும் பூசாரிகள் புனிதச் சட்டங்களை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.[37]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.