காத்மாண்டு நகரச் சதுக்கம்
From Wikipedia, the free encyclopedia
அனுமன் தோகா நகரச் சதுக்கம் அல்லது காத்மாண்டு நகரச் சதுக்கம் அல்லது வசந்தபூர் நகரச் சதுக்கம் (Kathmandu Durbar Square) (நேபாளம்); वसन्तपुर दरवार क्षेत्र), Basantapur Darbar Kshetra) நேபாளத்தின் காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகரச் சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகரச் சதுக்கங்களும் யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரியக்களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.[1][2].மற்ற இரண்டு நகரச் சதுக்கங்கள் பாதன் நகரச் சதுக்கம், பக்தபூர் நகரச் சதுக்கம் ஆகும்.
2015, நேபாள நிலநடுக்கத்தில் இச்சதுக்கத்தில் இருந்த பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து விட்டன. காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைச் சுற்றிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அழகிய நேவார் கலைஞர்களாலும், கைவினைஞர்களாலும், கட்டப்பட்ட பௌத்தக் கட்டிடக்கலையுடன் கூடிய கட்டிடங்கள், கோயில்கள், தூபிகள் அமைந்துள்ளன.[3]
காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்த லிச்சாவி, மல்லர் மற்றும் ஷா வம்சத்து கோர்க்கா மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோயில்கள், நகர வணிக வளாகங்கள், காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ளன. அரண்மனையை ஒட்டி, நகர மைய வணிக வளாகங்கள் எனப்படும் தர்பார் சதுக்கங்களும், முற்றவெளிகளும், கோயில்களும் அமைந்துள்ளன. அரண்மனையின் நுழைவு வாயில் முன், இராமனின் பக்தரான அனுமனின் உருவச்சிலையும், அனுமன் நகரச் சதுக்கமும் அமைந்துள்ளன.