குசராத்தின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
குஜராத்தின் வரலாறு (History of Gujarat), கி மு 5,000 ஆண்டிற்கு முந்தைய உலகின் பழமையான சிந்துவெளி நாகரீகத்தின் ஹரப்பா குடியிருப்பு பகுதிகளான லோத்தல் மற்றும் தோலாவிரா (கட்ச் மாவட்டம்), குஜராத்தில் கண்டெடுக்கப்பட்டன. மௌரியர்கள், சாதவாகனர்கள் குப்தர்கள், மைத்திரகர்கள் மற்றும் மேற்கு சத்ரபதிகள் காலத்தில் குஜராத்தின் தொன்மையான பரூச் துறைமுகமும், வணிக மையமும் சிறப்புடன் விளங்கியது. குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் குப்தப் பேரரசின் படைத்தலைவர், வல்லபி நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மைத்திரகப் பேரரசை நிறுவி, குஜராத்தை கி பி 6 - 8ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். கி பி 7ஆம் நூற்றாண்டில் சில காலம் குஜராத் பகுதி ஹர்ஷவர்தனர் ஆட்சியில் இருந்தது. சிந்துப் பகுதியின் அரேபிய ஆளுநர் கி பி 770இல் வல்லபி நகரத்தை வீழ்த்தி மைத்திரகப் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தார். பின்னர் வந்த கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு குஜராத்தை கி. பி 650 –1036 முடிய ஆண்டனர். குஜராத்தின் சில பகுதிகள் இராஷ்டிரகூடர் மற்றும் பாலர்களின் பேரரசில் சில காலம் இருந்தன. 775இல் சரத்துஸ்திர சமயத்தை பின்பற்றும் பார்சி இன மக்கள் பாரசீகத்திலிருந்து அகதிகளாக குஜராத்தில் குடியேறினர்.[1]
பத்தாம் நூற்றாண்டில் சோலாங்கிப் பேரரசு வலிமையுடன் குஜராத்தை ஆட்சி செய்தது. 30 சனவரி 1025 அன்று கஜினி முகமது குஜராத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள சோமநாதர் கோயிலை இடித்துப் பின் அதன் சொத்துக்களை கொள்ளையடித்து, 50,000 அப்பாவி மக்களின் உயிரை மாய்த்துச் சென்றார். .[2]
கி பி 14ஆம் நூற்றாண்டின் முடிவில் (1297 -1300) தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகள் பதான் மாவட்டத்தின் அங்கில்வாரா நகரத்தை சீரழித்தும், சோமநாதர் கோயிலை இடித்தும், குஜராத்தை தில்லி சுல்தானகத்தில் இணைத்தார். இராஜபுத்திர இசுலாமிய ஆளுநர் அகமது ஷா அகமதாபாத் நகரை நிறுவி, 1411 முதல் 1442 முடிய குஜராத்தை ஆண்டார். பின்னர் 1576 முடிய தன்னாட்சியுடன் விளங்கிய குஜராத் சுல்தானகம், அக்பர் காலத்தில் மொகாலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது. சூரத் துறைமுகம் மொகலாயர் காலத்தில் சிறப்புடன் விளங்கியது. பின்னர் குஜராத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளை மராத்தியர்கள் கைப்பற்றி 18ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். சௌராட்டிர தீபகற்பம், கட்ச் பகுதிகளை உள்ளூர் சுதேச சமஸ்தான பிரித்துக் கொண்டு ஆண்டனர். மராத்தியர்களுக்கும், கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் தோற்ற மராத்தியப் பேரரசின் படைத்தலைவர்களான பேஷ்வாக்கள், மராத்தியப் பேரரசின் குஜராத் பகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தன்னாட்சியுடன் ஆண்டனர். பரோடா அரசு மற்றும் பவநகர் அரசுகள், இந்தியப் பிரிவினை முடிய குஜராத்தின் பெரும் பகுதிகளை ஆண்டனர்.
குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மகாத்மா காந்தி, பிரித்தானிய காலனி ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி, இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தார்.[3]
மும்பை மாகாணத்தில் இருந்த குஜராத், 1960இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் பொழுது, குஜராத் தனி மாநில உரிமை பெற்றது.
1960 முதல் 1995 முடிய குஜராத் மாநிலத்தை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. பின்னர் 1995 முதல் பாரதிய ஜனதா கட்சி குசராத்து மாநிலத்தின் ஆளும் சக்தியாக மாறியது.