வித்து
தாவர அங்கம் / From Wikipedia, the free encyclopedia
வித்து அல்லது விதை (Seed) என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும். விதைகள் பொதுவாகத் தம்முள்ளே உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கும் முளையத் தாவரமாகும். பூக்கும் தாவரங்கள் மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, அதைத் தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறைகளின் பின்னர் முதிர்ச்சியுறும் சூலகமே விதையாக விருத்தியடைகின்றது. இவ்வகைத் தாவரங்கள், விதைகளின் துணையுடனேயே தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அத்துடன் விதைகள் பலவகை சூழ்நிலைகளைத் தாங்கி வாழக்கூடிய இயல்பினைக் கொண்டிருப்பதனால், பல சூழ்நிலைகளிலும் இத்தகைய தாவரங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது.
விதைகள் நீர், காற்று மற்றும் அளவான வெப்பநிலை போன்ற தமக்கு சாதகமான சூழல் வழங்கப்படுகையில் முளைத்தல் செயல்முறைமூலம் நாற்றாக உருவாகும். பின்னர் அந்த நாற்று விருத்தியடைந்து புதிய தாவரமாக வளரும். முளைத்தல் செயல்முறைக்குச் சூரிய ஒளி அவசியமில்லை. சில விதைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வித்து உறங்குநிலை என அழைக்கப்படும் ஒரு நிலையில் இருந்த பின்னரே முளைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.
பலவகையான விதைகள் உள்ளன. சில தாவரங்கள் ஒரே ஒரு விதையை உருவாக்கும்; வேறு சில பன்மடங்கு விதைகளை உருவாக்குகின்றன; இன்னும் சில மிகக் குறைவான விதைகளை உருவாக்குகின்றன, மற்றும் சில அளவில் பெரிய விதைகளை உருவாக்குகின்றன. விதைகள் பொதுவாகக் கடினமான மேலுறை கொண்டும் அளவில் சிறியதாகவும் இருக்கும். ஆனால் அளவில் பெரிய தேங்காயும் ஓர் விதையே. விதைகளின் பருப்புப் பகுதியில் அவை வளர்வதற்குத் தேவையான உணவு சேமிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய விதைகள் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோருக்கு நல்ல உணவாக அமைகிறது.
பூக்கும் தாவரங்களில் விதைகள் தாவரங்களின் பழங்களின் உள்ளே இருக்கின்றன. வித்துமூடியிலித் தாவரங்களில் விதையானது பழம் போன்ற அமைப்பினுள்ளே மூடி வைக்கப்படாமல் வெறுமையாக இருக்கும். மக்கள் விவசாயம் செய்யும் நெல்,கோதுமை,கம்பு,சோளம் முதலிய பலவகை தானியங்களும் விதைகளே. விதையின் வெளிப்புறம் பாதுகாப்பிற்காக உறை ஒன்றால் சூழப்பட்டுள்ளது. இது வித்துறை அல்லது உமி என அழைக்கப்படுகிறது.
சில சமயங்களில் இந்த விதை என்ற பதம் வேறு சில பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சூரியகாந்தி விதை எனப்படுவது உண்மையில் சூரியகாந்தியின் பழமேயாகும். அதேபோல் உருளைக்கிழங்கில் "விதைக் கிழங்கு" எனப்படுவது உண்மையில் உருளைக்கிழங்கில் கலவியற்ற இனப்பெருக்கத்திற்கு உதவும் தண்டுக்கிழங்காகும். இவை புதிய தாவர உருவாக்கத்திற்காக விதைக்கப்படுவதனாலேயே "விதை" என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. தென்னையிலும் புதிய தாவர உருவாக்கத்திற்கு தென்னையின் பழமான தேங்காயே பயன்படுத்தப்படுகின்றது. தேங்காயில் உள்ளாக இருக்கும் சிரட்டை/கொட்டாங்கச்சியும் அதன் உள்ளான பகுதிகளுமே வித்தாகும்.