அன்னி பெசண்ட்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை From Wikipedia, the free encyclopedia

அன்னி பெசண்ட்
Remove ads

அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.

விரைவான உண்மைகள் அன்னி வூட் பெசண்ட்Annie Wood Besant, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கணவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து 1873 இல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.

Thumb
1880களில் அன்னி பெசண்ட்

கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னியின் அரசியல் போக்குகணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார்[1].

Remove ads

சீர்திருத்தவாதி

"நியூமால் தூசியன் அமைப்பு" என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

Thumb
ஒல்கொட் (இடது), லெட்பீட்டர் ஆகியோருடன் அன்னி பெசண்ட்
Remove ads

பிரம்மஞான சங்கம்

The Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். இதனை அடுத்து மார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.

1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் அமெரிக்கக் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது.

Thumb
1874 லண்டனில் (Colby Road, London SE19) அன்னி பெசண்ட் வாழ்ந்த வீடு

இந்தியாவில் அன்னி பெசண்ட்

இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துபல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைவு

அன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1914 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1915 சூன் 14 இல் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைமைப் பதவி

1907-ஆம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.

அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917, ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.

டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் 1929 இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை. இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929 இல் "பொதுநலவாய இந்தியா" என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்[2].

Remove ads

இறுதிக் காலம்

தனது எண்பத்தியோராவது அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான தனது வளர்ப்பு மகன் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். எண்பத்தேழாம் அகவையில் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் "ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தார்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக "பெசண்ட் ஹில் பாடசாலை" எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.

அன்னி பெசண்ட் அம்மையாரை கௌரவிக்கும் விதமாக சென்னையின் அம்பத்தூர், தண்டையார் பேட்டை பகுதிகளில் உள்ள ஒரு சாலைக்கு அன்னி பெசண்ட் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3] மேலும் சென்னையில் உள்ள ஒரு பூங்காவுக்கு அன்னி பெசன்ட் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads