கரௌலி மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரௌலி மாவட்டம் (Karauli District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் கரௌலி ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் பரத்பூர் கோட்டத்தில் உள்ளது.
இம்மாவட்டம் சிவப்பு கற்களுக்கு பெயர் பெற்றது. கரௌலி நகரம் ஆக்ராவிலிருந்து 114 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூரிலிருந்து 158 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
Remove ads
வரலாறு
11-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் கரௌலி மாவட்டம், மத்ஸ்ய தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும்; 995-இல் இராஜா விஜய் பால் எனும் இராஜ புத்திர மன்னர் கரௌலி இராச்சியத்தை நிறுவினார் என்றும் அறியப்படுகிறது. பின்னர் 1348-இல் அர்ஜுன் தேவ் யாதவ் என்பவரால் மீள நிறுவப்பட்ட கரௌலி சமஸ்தானம், 19-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இராஜபுதனம் முகமையின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அமைவிடம்
கரௌலி மாவட்டத்தின் கிழக்கில் தோல்பூர் மாவட்டம், வடகிழக்கில் பரத்பூர் மாவட்டம், வடக்கில் தௌசா மாவட்டம், மேற்கில் சவாய் மாதோபூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது.
புவியியல்
கரௌலி மாவட்டம் விந்திய மலைத்தொடர்களாலும், ஆரவல்லி மலைத்தொடர்களாலும் சூழப்பெற்றது. சம்பல் ஆறு இம்மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 668.86 மிமீ ஆகும். இம்மாவட்டத்தின் கோடைக்கால அதிகூடிய வெப்ப நிலை 49° செல்சியஸ் ஆகவும்; குளிர்காலத்தில் குறைந்த பட்ச வெப்ப நிலை 2° செல்சியஸ் ஆகவும் உள்ளது.
கனிமங்கள்
மணற்கற்கள், சிலிக்கா மணல், சோப்பு மணல், வெள்ளைக் களிமண் போன்ற கனிமங்கள் கரௌலி மாவட்டத்தில் நிறைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கற்களை வெட்டும் மற்றும் மெருகூட்டும் சிறு தொழிற்சாலைகள் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
கரௌலி மாவட்டம் ஹிந்தௌன், கரௌலி, மந்தரயில், நாடோடி, சபோத்திரா, தோடாபீம் என ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டது. மேலும் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களும்; 223 ஊராட்சி மன்றங்களும்; 883 கிராமங்களும் இரண்டு நகராட்சி மன்றங்களும்; ஒரு நகரப்பஞ்சாயத்து மன்றமும் கொண்டுள்ளது.
மாவட்டப் பிரிப்பு
இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய கங்காபூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[1]
அரசியல்
இம்மாவட்டம் ஹிந்தௌன், கரௌலி, சபோத்திரா, தோடாபீம் என நான்கு சட்டமன்ற தொகுதிகளையும்; கரௌலி-தோல்பூர் என ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக கரௌலி மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது.[2]
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,458,248 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.04% மக்களும்; நகரப்புறங்களில் 14.96% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.55% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 783,639 ஆண்களும்; 674,609 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 861 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 5,524 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 264 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 81.41 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.41 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.61 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 241,357 ஆக உள்ளது. [3]
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,370,977 (94.02 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 81,553 (5.59 %) ஆகவும்; சமண சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.
மொழிகள்
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads