சீ லயன் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீ லயன் நடவடிக்கை (ஆங்கிலம்: Operation Sea Lion; ஜெர்மன்: Unternehmen Seelöwe) இரண்டாம் உலகப் போரில் கைவிடப்பட்ட ஒரு தாக்குதலின் குறிப்பெயர். 1940ல் நாசி ஜெர்மனி பிரிட்டனைத் தாக்கி கைப்பற்ற உருவாக்கிய திட்டத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டது. பிரித்தானியச் சண்டையில் ஜெர்மனி தோல்வியடைந்ததால் இத்தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டது.
Remove ads
திட்டம்
1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி விட்டன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் நாசி போர் எந்திரத்தின் வலிமையின் முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக சரணடைந்தன. ஜூன் 1940ல் பிரான்சு சண்டை முடிந்து பிரான்சும் ஜெர்மனியிடம் சரணடைந்தது. மேற்கு ஐரோப்பாவில் நாசிகளுக்கு மீதமிருந்த ஒரே எதிரி பிரிட்டன் மட்டுமே. பிரிட்டனின் படை பிரான்சு போர்க்களத்தில் படுதோல்வியடைந்து ஜெர்மனி படைகளால் சிறைபிடிக்கப் படுவதிலிருந்து மையிரிழையில்தான் தப்பியிருந்தன. வீரர்கள் தப்பினாலும், பிரிட்டனின் பீரங்கிகள், டாங்குகள், தளவாடங்கள் ஆகியவற்றில் மிகப்பெரும்பகுதி ஜெர்மன் படையின் கையில் சிக்கிக் கொண்டது. இதனால் மனமுடைந்த பிரிட்டன் விரைவில் அமைதிகோரி பேச்சுவார்த்தைக்கு இணங்கிவிடும் என்று ஹிட்லர் நம்பினார். சோவியத் யூனியன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று அவசரப்பட்டார். ஆனால் பிரிட்டனில் பிரதமர் நெவில் சாம்பர்லேனின் ஆட்சி கவிழ்ந்து வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமரானதால், அந்நாடு சமாதானப் பேச்சுக்கு வரமறுத்து விட்டது. இதனால் பிரிட்டன் மீதான படையெடுப்புப் பற்றி ஜெர்மன் போர்த் தலைமையகம் திட்டமிடத் தொடங்கியது.
ஜெர்மன் கடற்படை முந்தைய போர்களில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருந்ததாலும், பிரித்தானிய கடற்படை வலிமையுடன் இருந்த காரணத்தாலும் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த ஜெர்மன் விமானப்படைக்கு வான் ஆளுமை நிலை அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக பிரிட்ட்ஷ் விமானப்படையை அழிக்க பிரித்தானியச் சண்டையை தொடங்க ஹிட்லர் உத்தரவிட்டார். இருநாட்டு விமானப்படைகளுக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. படைகளைத் தாங்கிச் செல்ல தரையிறங்கும் படகுகள், விசைப் படகுகள், இழுபடகுகள் என பல்லாயிரக்கணக்கான படகுகளை ஜெர்மனி கடற்படை சேகரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஜெர்மன் முதன்மை படைத்தலைமையகம் (ஓகேடபிள்யூ) ஒரு பரந்த களத்தில் இங்கிலாந்து கடற்கரையில் தரையிறங்கத் திட்டமிட்டது. ஆனால் ஜெர்மன் கடற்படையிடம் அதற்கு தேவையான துருப்புகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு தரையிறங்கும் படகுகள் இல்லையென்பதால் குறுகிய களத்தில் தரையிறங்கும்படி திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. முதல் தாக்குதல் அலைக்கு ஒன்பது ராணுவ டிவிஷன்கள் தேர்வு செய்யப்பட்டன. தரைவழித் தாக்குதலுக்குமுன் வான்குடை வீரர்கள் களத்தின் முக்கிய இடங்களில் குதித்து பாலங்கள், சாலைகள் ஆகியவற்றை கைப்பற்றவும் திட்டமிடப்பட்டது. ஆனால் எந்த இடத்தில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க வேண்டும் என்பது இறுதிவரை முடிவு செய்யப்படவில்லை. 52வது நிலநேர்க்கோடு வரையுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டாலே பிரிட்டனின் மற்ற பகுதிகள் சரணடைந்துவிடுமென ஜெர்மன் தலைமையகம் எதிர்பார்த்ததால் நீட்டித்த போருக்கான திட்டங்களை அவர்கள் வகுக்கவில்லை.
Remove ads
தோல்வியும் ஒத்திவைப்பும்
பிரித்தானியச் சண்டை ஹிட்லரின் திட்டப்படி நடக்கவில்லை. பிரித்தானிய விமானப்படையை அழிப்பதற்காக தொடங்கப்பட்ட அந்தப் போர் நடவடிக்கை நடுவில் திசைமாறி அதன் நோக்கம் பிரிட்டனின் நகரங்களை அழிப்பதற்காக என்று மாற்றப்பட்டது. இப்படிப்பட்ட குழப்பமான போரியல் உபாயத்தால் பிரித்தானியச் சண்டையில் ஜெர்மனி விமானப்படை தோல்வியடைந்தது. வான் ஆளுமை நிலையை அடையாமல் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பது சாத்தியமற்றதென்பதால் செப்டம்பர் 17, 1940ல் ஹிட்லர் சீ லயன் நடவடிக்கையை ஒத்தி வைத்தார். அதன் பின்பு அவரது கவனம் கிழக்கு நோக்கி திரும்பிவிட்டதால் சீ லயனுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜெர்மன் படைகள் பர்பரோசா நடவடிக்கையில் பங்கேற்க அனுப்பப்பட்டன.
Remove ads
படங்கள்
- சீ லயனுக்காக ஜெர்மனியின் வில்லம்ஸ்ஹாவன் துறைமுகத்தில் சேகரிக்கப்படும் பரிசல்கள்
- சீ லயனுக்காக ஒத்திகை பார்க்கும் ஒரு பான்சர் 3 நீர்நில டாங்கி
அடிக்குறிப்புகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads