திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்குழம்பியம் கோழம்பநாதர் கோயில் அல்லது திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஒரு சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 35ஆவது சிவத்தலமாகும்.
Remove ads
அமைவிடம்
இது தஞ்சாவூர் மாவட்டத்தில்[1] திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ். புதூர் வந்து, அங்கிருந்து கோவிலுக்கு வரலாம். கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை வந்து, தரங்கம்பாடி செல்லும் சாலை மார்க்கத்தில் சாத்தனூர் என்ற கிராமம் வழியாகவும் திருக்குழம்பியம் வரலாம் (ஆடுதுறையிலிருந்து திருக்குழம்பியம் 5 கி.மீ. தொலைவில் உள்ளது)
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் கோழம்பநாதர், இறைவி சௌந்தரநாயகி. இத்தல மூர்த்தி, பசுவின் கால் குளம்பு இடறியபோது வெளிப்பட்டார் என்பது வரலாறு. சந்தன் என்பான் இந்திர சாபத்தினால் குயில் உரு அடைந்து எங்கும் பறந்து திரிய, இவ்விடம் வந்து பூசித்த போது சுய உருவம் அடைந்தான்.
அமைப்பு
நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கோயிலின் இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. சன்னதியின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர். எதிரே நந்தி, பலிபீடம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தை அடுத்துள்ள திருச்சுற்றில் பைரவர், சூரியன் உள்ளனர்.மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் கோஷ்ட விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சுப்ரமணியர், சோழலிங்கம், வீரலட்சுமி உள்ளிட்டோர் உள்ளனர்.
சிறப்பு
இது அம்பிகை சிவபெருமானை வழிபட்ட தலம்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்
புகைப்படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads