திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் (Tirunallar Dharbaranyeswarar Temple) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.[1] சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமான இது திருநள்ளாறு என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1]

இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.
Remove ads
சன்னதிகள்

இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி.
மூலவர் தர்ப்பாரண்யேசுவரர்.[1] இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
இடையனார் கோயில்
கோயிலின் நிர்வாகத்திற்காக அரசர்கள் பசுக்களை கோயில்களுக்கு தானம் தந்து, அவற்றை மேய்த்து வழிநடத்த இடையர் குலத்திலிருந்து ஒருவரை நியமனம் செய்தனர். அதன்படி இடையன் அப்பசுகளை மேய்த்து பாலைப் பெற்று கோயிலுக்குத் தர வேண்டிய பங்கினை தர வேண்டும். இதனால் இடையனின் வாழ்வும், நிர்வாகமும் சீராய் நடைபெறும். இத்தலத்திலும் இடையர் ஒருவர் இப்பொறுப்பில் இருந்தார். கணக்கர் அப்பாலைப் பெற்று தன் வீட்டுக்குத் தந்து கோயிலுக்குப் பொய்க்கணக்கு எழுதி வந்தார். அதனால் இறைவன் கணக்கரை சூலம் எய்தி கொன்றார். அத்துடன் இடையருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடமிருந்து எரியப்பட்ட சூலம் கணக்கரைக் கொல்ல வந்த போது, நந்தியும், பலிபீடமும் விலகிக் கொண்டன. அதனால் இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளது.
கோயிலின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனி பகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும். சப்த விடங்கத் திருத்தலங்களில் ஒன்றான தலம்.[1]
தல வரலாறு
தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
விழாக்கள்
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம், பிரதோசம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடத்தப்பெறுகின்ற விழாக்களாகும்.
குடமுழுக்கு
இக்கோயிலின் குடமுழுக்கு 11 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்றது.[2]
அருகிலுள்ள திருத்தலம்
இவ்வூரின் அருகிலுள்ள தக்களூரில் தேவார வைப்புத் தலம் அமைந்துள்ளது. இங்கு மூலவர் திருலோகநாதர், அம்பிகை தர்ம சம்வர்த்தினி.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads