நானிங்
மலாக்கா மாநிலத்தின் முன்னாள் குறுநிலத் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நானிங் (ஆங்கிலம், மலாய் மொழி: Naning; சீனம்: 南宁) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு வரலாற்று நகரமாகும். மலாக்கா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் முன்னாள் குறுநிலத் தலைநகரமாகும்.
தாபோ நானிங் என்று அழைக்கப் படும் அந்தக் குறுநிலப் பகுதி, தற்சமயம் ஒரு கிராமப்புற நகரமாகத் தடம் பதிக்கிறது. மஸ்ஜித் தானா (Masjid Tanah) தொகுதியின் ஒரு பகுதியாகவும்; மற்றும் புலாவ் செபாங்கிற்கு (Pulau Sebang) அருகிலும் உள்ளது. இது ஒரு சின்ன கிராமமாக இருந்தாலும், 16-ஆம் நூற்றாண்டில் ஒரு மாநிலமாக இருந்து உள்ளது.
மலாக்கா நகரத்தில் இருந்து சுமார் 19 மைல் (31 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள நானிங், ஏறக்குறைய 200 சதுர மைல் (520 கி.மீ.2) கொண்ட ஒரு சிறிய உள்நாட்டு மலாய் குறுநிலமாக இருந்தது. இப்போது அலோர் காஜா மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது
Remove ads
பொது
1370-ஆம் ஆண்டில் மினாங்கபாவ் இளவரசர் சுல்தான் சத்தாங் பாலுன் (Sutan Jatang Balun) என்பவரால் நிறுவப்பட்டது. இவர் டத்தோ பெர்பாத்தே நன் செபத்தாங் (Datuk Parpatih Nan Sebatang) என்றும் அறியப்படுகிறார்.
நெகிரி செம்பிலான் மாநிலம் உருவாவதற்கு இந்தக் குறுநிலம் ஒரு காரணமாக இருந்தது என்றும் அறியப் படுகிறது. இந்த நானிங் பகுதியில் 1831-இல் இருந்து 1834 வரை, பிரித்தானியர்களுக்கு எதிரான ஒரு நிலவுரிமைப் போர் நடந்தது. [1]
Remove ads
வரலாறு
நானிங் குறுநிலம் முன்பு காலத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனாலும் 1832-ஆம் ஆண்டில் நடந்த நானிங் போர் (Naning War) மூலமாக ஆங்கிலேயர்களால் மலாக்காவுடன் இணைக்கப்பட்டது.
1831-இல் பிரித்தானியர்களின் ஆட்சியை எதிர்த்து டத்தோ டோல் சாயிட் (Dol Said) என்பவர் கிளர்ச்சி செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு நானிங் போர் என்று பெயர். அப்போது அலோர் காஜாவில் இருந்த தாபோ நானிங் கிராமத்தின் தலைவராக டோல் சாயிட் இருந்தார்.
1829-ஆம் ஆண்டில் தாபோ நானிங் பகுதியில் வாழ்ந்த கிராமவாசிகளிடம், அதிகமான வரியைப் பிரித்தானியர்கள் வசூல் செய்தனர். அவர்கள் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. அப்போது மலாக்காவின் ஆளுநராக புல்லர்டன் (Robert Fullerton) என்பவர் இருந்தார்.[2]
ஏற்கனவே, உற்பத்தி வரிகள் அமலில் இருந்தாலும், புதிய வரிகள் மக்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தின. அத்துடன் மலாய் அரசர்களையும் பிரித்தானியர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.[3].
பிரித்தானியர்களின் தோல்வி
இந்த இரு காரணங்கள்தான் நானிங் கிளர்ச்சிக்கு மூலகாரணங்களாய் அமைந்தன. 1770-களில் தாபோ நானிங் மக்கள் டச்சுக்காரர்களை எதிர்த்து ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். ஆகவே, நானிங் மக்களை எதிர்த்துப் போக வேண்டாம் என்று பிரித்தானியர்களுக்கு டச்சுக்காரர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
இருந்தாலும் தாபோ நானிங் மக்களை எதிர்த்து பிரித்தானியர்கள் 150 வீரர்களை அனுப்பி வைத்தனர். கேப்டன் வில்லி என்பவர் தலைமை தாங்கினார்.[4]
நானிங் மக்கள் ஒன்றுகூடி சண்டை போட்டனர். அதில் அந்த 40 பிரித்தானியர்கள் இறந்தனர். சினம் அடைந்த மலாக்காவின் பிரித்தானிய அரசாங்கம் 1200 பேர் கொண்ட ஒரு பீரங்கிப் படையை அனுப்பி வைத்தது. ஐந்து மாதங்கள் கடுமையான சண்டை நடைபெற்றது. இறுதியில் நானிங் வீழ்ச்சி அடைந்தது.[5]
டத்தோ டோல் சாயிட் தப்பித்துச் சென்றார். 1849-இல் வயது மூப்பின் காரணமாக டோல் சாயிட் காலமானார். அவருடைய கல்லறை தாபோ நானிங் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கிறது. பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி, பிரித்தானிய மலாயா வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப் படுகிறது.[6]
Remove ads
மேற்கோள்கள்
சான்றுகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads