நீலாவணன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலாவணன் (மே 31, 1931 - சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். இவரது இயற்பெயர் சின்னத்துரை.[1] இவர் நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலாவண்ணன், எழில்காந்தன், *இராமபாணம், மானாபாணன், சின்னான் கவிராயர், எறிகுண்டுக் கவிராயர், சங்கு சக்கரன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.[2]
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் முன்னர் மட்டக்களப்பு மாவட்டம், பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்த வைத்தியர் கேசகப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் மூத்த புதல்வர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் எழுதி வந்தார்.
எழுத்துலகில்
இவர் 1948 இல் இருந்து எழுதத் தொடங்கினார். 1952 இல் இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளியானது. கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953 இல் சுதந்திரனில் வெளியான ‘ஓடி வருவதென்னேரமோ?’ எனும் கவிதை மூலம் கவிஞராக அறிமுகம் ஆனார். 1963 இல் எழுதிய ‘மழைக்கை’ கவிதை நாடகம் முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். ‘மழைக்கை’ 1964 இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.
மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை. இவரது இறுதிக் கவிதை ‘பொய்மை பொசுங்கிற்று’ என்பதாகும்.
Remove ads
இலக்கிய இதழ்
1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார். இரண்டு இதழ்களே வெளி வந்தது.
குடும்பம்
இவரது துணைவியார் அழகேஸ்வரி (அழகம்மா) சின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர்.
வெளிவந்துள்ள நூல்கள்
- வழி (கவிதைத் தொகுதி - சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது),
- வேளாண்மை (காவியம்)
- ஒத்திகை (கவிதைத் தொகுதி)
- ஒட்டுறவு (கதைத் தொகுதி)
- நீலாவணன் பா நாடகங்கள் (பா நாடகங்கள்)
- நீலாவணன் காவியங்கள் (காவியங்கள்)
நீலாவணன் பற்றிய நூல்கள்
- கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும் (ஆசிரியர்: கலாநிதி சி. மௌனகுரு, மார்ச் 1994)
- நீலாவணன் - எஸ். பொ. நினைவுகள் (ஆசிரியர்: எஸ். பொ, செப்ரெம்பர் 1994)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads