பஞ்சாங்கம்

இந்திய பாரம்பரிய வானியல் கணக்கீட்டு அட்டவணை From Wikipedia, the free encyclopedia

பஞ்சாங்கம்
Remove ads

பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின்படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், ஜோதிடக்கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.

Thumb
வாக்கிய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.[1][2]

Remove ads

பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள்

பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:

  1. வாரம்
  2. திதி
  3. கரணம்
  4. நட்சத்திரம்
  5. யோகம்

என்பனவாகும்.

வாரம்

இங்கே வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:

  1. ஞாயிற்றுக்கிழமை
  2. திங்கட்கிழமை
  3. செவ்வாய்க்கிழமை
  4. புதன்கிழமை
  5. வியாழக்கிழமை
  6. வெள்ளிக்கிழமை
  7. சனிக்கிழமை

என்னும் ஏழுமாகும்.

ஒவ்வொரு நாளும் மேற் குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைக் கொண்டிருக்கும். இங்கே காட்டப்பட்ட ஒழுங்கின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் கிழமைப் பெயர்கள் சனிக்கிழமைக்குப் பின் மீண்டும் ஞாயிற்றில் தொடங்கிச் சுழற்சி முறையில் வரும்.

திதி

திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு:

1. அமாவாசை16. பூரணை
2. பிரதமை17. பிரதமை
3. துதியை18. துதியை
4. திருதியை19. திருதியை
5. சதுர்த்தி20. சதுர்த்தி
6. பஞ்சமி21. பஞ்சமி
7. சஷ்டி22. சஷ்டி
8. சப்தமி23. சப்தமி
9. அட்டமி24. அட்டமி
10. நவமி25. நவமி
11. தசமி26. தசமி
12. ஏகாதசி27. ஏகாதசி
13. துவாதசி28. துவாதசி
14. திரயோதசி29. திரயோதசி
15. சதுர்த்தசி30. சதுர்த்தசி

கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

11 கரணப் பெயர்களும் வருமாறு:

  1. பவம்
  2. பாலவம்
  3. கௌலவம்
  4. சைதுளை
  5. கரசை
  6. வனசை
  7. பத்திரை
  8. சகுனி
  9. சதுஷ்பாதம்
  10. நாகவம்
  11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம்

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:

1. அச்சுவினி10. மகம்19. மூலம்
2. பரணி11. பூரம்20. பூராடம்
3. கார்த்திகை12. உத்தரம்21. உத்திராடம்
4. ரோகிணி13. அத்தம்22. திருவோணம்
5. மிருகசீரிடம்14. சித்திரை23. அவிட்டம்
6. திருவாதிரை15. சுவாதி24. சதயம்
7. புனர்பூசம்16. விசாகம்25. பூரட்டாதி
8. பூசம்17. அனுஷம்26. உத்திரட்டாதி
9. ஆயிலியம்18. கேட்டை27. ரேவதி

யோகம்

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.[3] எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

1. விஷ்கம்பம்10. கண்டம்19. பரிகம்
2. பிரீதி11. விருதி20. சிவம்
3. ஆயுஷ்மான்12. துருவம்21. சித்தம்
4. சௌபாக்கியம்13. வியாகதம்22. சாத்தீயம்
5. சோபனம்14. அரிசணம்23. சுபம்
6. அதிகண்டம்15. வச்சிரம்24. சுப்பிரம்
7. சுகர்மம்16. சித்தி25. பிராமியம்
8. திருதி17. வியாதிபாதம்26. ஐந்திரம்
9. சூலம்18. வரியான்27. வைதிருதி

யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது:

(சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20'

இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும்.

நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். தற்காலத்தில் இணையத்திலும், சோதிடம் சார்ந்த பல தளங்களில் குறித்த ஒரு நேரத்தின் யோகத்தை அறிந்து கொள்வதற்கான வசதிகள் உள்ளன.

Remove ads

இராசி

  1. மேடம் (மேஷம்)
  2. இடபம் (ரிஷபம்)ரிஷபம்
  3. மிதுனம்
  4. கர்க்கடகம் (கடகம்)
  5. சிங்கம் (சிம்மம்)
  6. கன்னி
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனு (தனுசு)
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்

கோள்கள்

  1. சூரியன் (ஞாயிறு Sun)
  2. சந்திரன் (திங்கள் Moon)
  3. செவ்வாய் (Mars)
  4. புதன் (அறிவன் Mercury)
  5. குரு (வியாழன் Jupiter)
  6. சுக்கிரன் (வெள்ளி Venus)
  7. சனி (காரி Saturn)
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)

பட்டியல்

மேலதிகத் தகவல்கள் விண்மீன் குழு, இராசி ...
Remove ads

வருஷம் மாதம் கணக்கிடும் பஞ்சாங்க முறைகள்

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு முற்றிலும் வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 1 சௌரமான முறை 2 சந்திரமான முறை

சௌரமான முறை

இம்முறை சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை

சௌர ஆண்டு கணக்கீடு முறை

ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேஷ ராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஓராண்டு என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, மேற்கு வங்கம்

சாயன ஆண்டு கணக்கீடு முறை

சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: கேரளா (பஞ்சாங்கம்: கொல்லம் ஆண்டு)

சந்திரமான முறை

இம்முறை சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஓராண்டு என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது. பூர்வப்க்ஷ பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகள் சந்திர மாதங்களாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு பஞ்சாங்கம்), கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் (கார்த்திக ஷுக்லாதி பஞ்சாங்கம்)

பிற ஐந்திறன் முறைகள்

  • திருவள்ளுவர் ஆண்டு

திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது.

  • சக வருட பஞ்சாங்கம்:

இந்திய அரசாங்கம் சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் கடைப்பிடிக்கும் பஞ்சாங்க முறை. ஆண்டு என்பது மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்த மார்ச்சு மாதம் 23 ஆம் தேதி வரை.

  • பசலி வருஷ பஞ்சாங்கம்:

வட இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆண்டுக் கணக்கு. முகலாயர் காலத்தில் அரசாங்க வரவு செலவுக் கணக்குகளை நிர்வகிக்க ஏதுவாகத் தோற்றுவிக்கப்பட்டது.

  • கலியுகாப்தம் பஞ்சாங்கம்

கலியுகம் தோன்றிய நாள் முதல் கணக்கிட்டு வரப்படுகிறது.

  • விக்கிரம வருஷம்
  • மகா வீரர் வருஷம்
Remove ads

ஐந்திறன் வகைகள்

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

திருக்கணித ஐந்திறன் (பஞ்சாங்கம்)

சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனைத் தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.

தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.

இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads