பில்லா (2007 திரைப்படம்)
2007 விஷ்ணுவர்தன் எழுதியது From Wikipedia, the free encyclopedia
Remove ads
பில்லா (Billa) அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
Remove ads
கதைச் சுருக்கம்
டேவிட் பில்லா என்பவர் கொடுங்குற்ற கூட்டத்தின் தலைவர். இவர் மலேசியாவில் மறைந்திருந்து செயல்படுபவர். இவர் பன்னாட்டுக் காவலகத்தால் மிகவும் தேடப்படும் உலக குற்றவாளி. இந்திய துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயப்பிரகாஷ் மலேசியாயில் கடந்த சில ஆண்டுகளாக பில்லாவைத் தேடிக்கொண்டிருக்கிறார். காவல்துறையுடனான துரத்துதலின் போது, பில்லா ஒரு விபத்தில் கடுமையாக காயமடைந்து ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் இறந்துவிடுகிறார். ஜெயப்பிரகாஷ் பில்லாவிற்கு ரகசியமாக இறுதிச்சடங்கு செய்கிறார். பில்லாவின் மரணம் யாருக்கும் தெரியாததால், பன்னாட்டுக் காவலக அதிகாரி கோகுல்நாத், பில்லாவைப் பிடிக்க ஜெயப்பிரகாஷுடன் பணியாற்ற நியமிக்கப்படுகிறார். ஜெயப்பிரகாஷ் பில்லாவின் மரணத்தை தனது சக அதிகாரிகளிடமிருந்தும் ரகசியமாக வைத்திருக்கிறார். சரவணன் வேலு என்ற பில்லாவின் உருவ ஒற்றுமையுள்ள உணவக பணியாளரை கண்டுபிடிக்கிறார். சரவண வேலு சிறு சிறு குற்றங்கள் செய்து தற்பொழுது திருந்தி வாழ்பவர். வேலுவிடம் பில்லாவைப் போல பாசாங்கு செய்து பில்லாவின் கும்பலில் ஊடுருவுமாறு கேட்டுக்கொள்கிறார் ஜெயப்பிரகாஷ். பதிலுக்கு, வேலு தத்தெடுத்த குழந்தை கரனுக்கு சரியான கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதாக கூறுகிறார்.
ஜெயப்பிரகாஷ் வேலுவுக்கு பயிற்சி அளித்து, நினைவிழந்த பில்லாவாக பாவனை செய்து, காயங்களுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்திருப்பதாக தகவலை வெளியே கசியவிடுகிறார். பில்லாவின் கும்பல் வேலுவை பில்லா என்று நம்பி அவரை மீட்டுச் செல்கின்றனர். வேலு மெதுவாக பில்லாவின் கும்பலைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்குகிறார். தொலைபேசியில் பில்லாவின் தலைவர் ஜெகதீஷிடமும் பேசுகிறார். வேலு குற்ற வலைப்பின்னலின் ரகசிய தகவல்களுடன் கூடிய பேனாச் சேமிப்பகத்தை ஜெயப்பிரகாஷிடம் வழங்குகிறார். இதற்கிடையில் சாஷா பில்லாவை வேலு என்று நினைத்து அவரைக் கொல்ல முயல்கிறார். இதற்கு காரணம் சாஷாவின் அண்ணா ராஜேஷ் மற்றும் அண்ணாவின் காதலி ரியா முன்பு பில்லாவால் கொல்லப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில், ஜெயப்பிரகாஷ் வந்து அவர் பில்லா அல்ல, வேலு என்று அவளிடம் கூறுகிறார். பின்னர் ஒரு விருந்துக்கு முன், வேலு பில்லாவின் வலைப்பின்னல் கூட்டம் பற்றிய தகவலை ஜெயப்பிரகாஷிடம் ரகசியமாக கொடுக்கிறார். ஆனால் பில்லாவின் காதலி சி.ஜே அவரது உரையாடலைக் கேட்கிறாள். அவள் வேலுவை எதிர்கொள்கிறாள். அப்பொழுது ஏற்படும் போராட்டத்தில், அவன் தற்செயலாக சி.ஜேவை கொன்றுவிடுகிறான்.
விருந்தில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ஜெயப்பிரகாஷ்யை ஜெகதீஷ் சுட்டு, அந்த துப்பாக்கியை அங்கேயே விட்டுச் செல்கிறார். வேலு ஜெயப்பிரகாஷை இறந்த நிலையில் கண்டு துப்பாக்கியை எடுக்கிறார். அப்போது கோகுல்நாத் தலைமையிலான காவல்துறை வேலுவை கைது செய்கிறது. விசாரணையின் போது தான் பில்லா அல்ல, வேலு என்று கோகுல்நாதிடம் வாதிடுகிறார். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கக் கூடிய ஆதாரமான பேனாச் சேமிப்பகத்தைப் பற்றி வேலு குறிப்பிடுகிறார். ஆனால் பேனாச் சேமிப்பகம் எங்கும் காணப்படவில்லை. தான் அப்பாவி என்று நிரூபிக்க முடியாமல், வேலு காவல்துறை வாகனத்திலிருந்து தப்பித்து கோகுல்நாத்துக்கு தொலைபேசியில் அழைத்து ஒரு பாலத்தில் சந்திக்கச் சொல்கிறார். அங்கு கோகுல்நாத் வேறு யாருமல்ல ஜெகதீஷ் தான் என்பதும், ஜெயப்பிரகாஷைக் கொன்றவரும் அவரே என்பதும் தெரியவருகிறது. காவல் அதிகாரி அனில் மேனனிடம் பேனாச் சேமிப்பகம் கிடைக்கிறது. ஜெகதீஷை பிடிக்க வேலுவுடன் ஒரு திட்டம் தீட்டுகிறார்.
இதற்கிடையில், சாஷாவும் கரனும் ஜெகதீஷால் கடத்தப்படுகின்றனர். அவர்களை விடுவிக்க பேனாச் சேமிப்பகத்தை கேட்கிறார். வேலு ரஞ்சித்தை சந்தித்து அதே தரவுகளைக் கொண்ட ஆனால் சேதமடைந்த இரண்டாவது பேனாச் சேமிப்பகத்தை அவருக்கு கொடுக்கிறார். ரஞ்சித் வேலுவைக் கொல்ல முயற்சிக்கும்போது, ஒரு சண்டை ஏற்படுகிறது, இதனால் ரஞ்சித் மேலிருந்து கீழே விழுகிறார். இறுதி மோதலில், ஜெகதீஷ் வேலுவுடன் சண்டையிடுகிறார். கோகுல்நாத்தாக நடித்த ஜெகதீஷ், வேலுவை பில்லாவாக கைது செய்யுமாறு காவல்துறையிடம் கேட்கிறார். காவல்துறை ஜெகதீஷுக்கும் வேலுவுக்கும் இடையேயான முழு உரையாடலையும் கேட்டதால், ஜெகதீஷை சுடுகின்றனர். வேலு அப்பாவி என்பது தெரியவருகிறது. வேலு இறுதியாக உண்மையான பேனாச் சேமிப்பகத்தை காவல் அதிகாரி மேனனிடம் ஒப்படைத்து, சாஷா மற்றும் கரனுடன் இணைகிறார்.
Remove ads
நடிகர்கள்
- அஜித் குமார் இரட்டை வேடத்தில் :
- டேவிட் பில்லா, கொடுங்குற்றக் கூட்டத்தின் தலைவன்
- சரவணன் வேலு, உணவகத்தில் பணிபுரிபவர் அவ்வபோது திருட்டுகளில் ஈடுபடுபவர்
- பிரபு - துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ்
- ரகுமான் - ஜகதீஷ்/ கோகுல்நாத் (போலி)
- நயன்தாரா - சாஷா (குரல் சவிதா ஜெ)
- நமிதா கபூர் - சி. ஜே., பில்லாவை காதலிப்பவர்
- சந்தானம் - கிருஷ்ணா
- ஆதித்யா - அணில் மேனன்
- ஜான் விஜய் - ஜான்
- யோக் ஜேபி - இரஞ்சித்
- சிறுவன் அவினாஷ் - கரன்
Remove ads
பாடல்
இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 1980இல் வெளிவந்த பில்லா திரைப்படத்தில் இருந்து "மை நேம் இஸ் பில்லா" மற்றும் "வெத்தலய போட்டேன்டி" பாடல்கள் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பாடல்களை அப்பொழுது எழுதியவர் கண்ணதாசன். அவ்வரிகள் அப்படியே வைக்கப்பட்டது. பிற பாடல்கள் புதிதாக இசையமைக்கப்பட்டது. அதற்கு வரிகளை பா. விஜய் எழுதினார்.[2]
தயாரிப்பு
1980இல் வெளியான பில்லாவின் கதை சென்னையில் நடப்பது போல் இருக்கும். ஒரு மாற்றம் வேண்டும் என்பதால் இப்படத்தின் கதை மலேசியாவில் நடப்பது போல் எடுத்திருந்தனர்.[3]
விமர்சனம்
படத்திற்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன் குழுவினர் "ஓப்பனிங் ஷாட் முதல் கடைசி ப்ரேம் வரை ‘பாண்ட்’ பட பீலிங்கைக் கொண்டுவந்த விஷ்ணுவர்தனின் டீமுக்கு செம ஸ்டைல் சல்யூட்!" என்று எழுதினர்.[4] பிலிம்மி பீட் இணையதளம் "படத்தின் உண்மையான ஹீரோக்களாக யுவன் ஷங்கர் ராஜாவும், கேமராமேன் நீரவ் ஷாவும்தான் உள்ளனர். இசையில் அசத்தியிருக்கிறார் யுவன். ஆனால் ரஜினி ரசிகர்களின் வேத மந்திரமாக விளங்கும் மை நேம் இஸ் பில்லா பாடலின் ரீமிக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். மொத்தத்தில், ஒரிஜினல் பில்லாவில் இருந்த பல கேர்கடர்கள், நல்ல அம்சங்கள், விசேஷங்கள் அஜீத்தின் பில்லாவில் இல்லை. இருந்திருந்தால் ஒரு வேளை நன்றாக இருந்திருக்கும்" என்று எதிர்மறை விமர்சனம் எழுதினர்.[5] வெப்துனியா இணையதளம் எழுதிய விமர்சனத்தில் "அஜீத்தின் தோற்றம் பேச்சு தோரணை பாவனை எல்லாவற்றிலும் ஸ்டைல். அந்த ரஜினியை துளிக்கூட நகலெடுக்காமல் அசலாக அசத்தலாக நடித்திருப்பது சிறப்பு" என்று எழுதினர்.[6]
Remove ads
முற்தொடர்ச்சி
இப்படத்தின் கதை நடைபெறுவதற்கு முன்னால் பில்லா எவ்வாறு கொடுங்குற்ற கூட்டத்தின் தலைவன் ஆகிறான் என்பது பற்றிய முற்தொடர்ச்சி கதையாக பில்லா 2 திரைப்படம் 2012 வெளிவந்தது. பில்லா 2 திரைப்படத்தை முதலில் விஷ்ணுவரதன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் சக்ரி டொலெட்டி வேரொறு திரைக்கதையுடன் பில்லா 2 படத்தை இயக்கினார்.[7][8]
துணை நூல் பட்டியல்
- Dhananjayan, G. (2014). Pride of Tamil Cinema: 1931 to 2013. Blue Ocean Publishers. [தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads