மாஸ்கோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாசுகோ (Moscow, (உருசிய மொழி: Москва́, [mɐˈskva]) உருசியா நாட்டின் தலைநகரமாகும். இது மசுகுவா ஆற்றுக்கரையில் அமைந்துள்ளது. உருசிய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரம் உருசியாவிலும் ஐரோப்பாவிலும் முதன்மையான அரசியல், பொருளியல், பண்பாடு, அறிவியல் மையமாக விளங்குகிறது. இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாசுகோ உருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. உருசிய பேரரசர்கள் அல்லது சார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்சுபேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் 1918 ல் உருசியாவின் தலைநகராக்கப்பட்டது. 1922 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் தலைநகராகவும் மாசுகோவே விளங்கியது.

ஃபோர்ப்சு இதழ் வெளியிடும் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் 2012இல் மிகக் கூடுதலான பில்லியனர்களைக் கொண்ட இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ளது. புவியின் மிகவும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெருநகரமாகவும் ஐரோப்பாவிலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும்[8][9][10] உலகின் ஆறாவது மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகிறது. 1960 ல் மாசுகோவின் பரப்பளவு 885 சதுர கிலோமீற்றராக அதிகரிக்கப்பட்டது. 1980 களில் மீண்டும் புறநகர் பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது. 2012இல் தென்மேற்கில் மேலும் விரிவாக்கப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு 2,511 சதுர கிலோமீட்டர்கள் (970 sq mi)ஆக மேலும் 2.5 மடங்கு கூடியுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு மாசுகோவின் மக்கள்தொகை 233,000 ஆக உள்ளது.[11][12]
வரலாற்றுச் சுவட்டில் பல இராச்சியங்களின் தலைநகராக மாசுகோ விளங்கியுள்ளது. நடுக்காலத்தில் மாசுகோ குறுநில மன்னராட்சிக்கும் தொடர்ந்து சார் மன்னர்களாட்சிக்கும் பின்னர் எழுந்த சோவியத் ஒன்றியத்திற்கும் தலைநகரமாக விளங்கியது. மாசுகோவில்தான் நடுக்காலத்தில் கோட்டையாகவும் தற்போதைய அரசுத்தலைவர் மாளிகையாகவும் உள்ள கிரெம்லின் உள்ளது. கிரெம்லின் நகரில் உள்ள பல உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக உள்ளது. உருசிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், டூமா மற்றும் கூட்டாட்சி அவை, இங்குதான் கூடுகின்றன.
நகரின் போக்குவரத்துத் தேவைகளுக்காக நான்கு பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் ஒன்பது தொடர்வண்டி முனையங்களும் உலகின் மிகுந்த ஆழத்தில் செல்லும் புவியடி விரைவுத் தொடருந்து பிணையமும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாசுகோவின் மெற்றோ தோக்கியோ, சியோல் மெற்றோக்களை அடுத்து மிக் கூடுதலான பயணிகள் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. இந்தப் பிணையத்தின் 188 நிலையங்களும் அவற்றின் கட்டிட வடிவமைப்பிற்காக நகரத்தின் முதன்மைக் குறியீடுகளாக விளங்குகின்றன.
காலவோட்டத்தில் மாசுகோவிற்கு, அதன் அளவையும் அதிகார மையத்தையும் கொண்டு, பல பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன: மூன்றாம் உரோமை (Третий Рим), வையிட்சுடோன் ஒன்று (Белокаменная), முதல் அரியாசனம் (Первопрестольная), நாற்பது நாற்பதுகள் (Сорок Сороков).
Remove ads
வரலாறு




மாஸ்கோ என்பதற்கு " மசுகுவா ஆற்றினை அடுத்த நகரம்" என்று பொருளாகும். முதன்முதலில் மாஸ்கோ என்ற பெயரை பயன்படுத்தியதற்கான சான்றை பொ.ஊ. 1147இல் காணலாம்: நோவ்கார்டு-செவர்சுக்கியின் இளவரசனை யூரி டோல்கோருக்கி மாஸ்கோவிற்கு வருமாறு அழைக்கிறார்.[1]
ஒன்பதாண்டுகளுக்குப் பின்னர், 1156 இல், உரோசுத்தோவின் இளவரசர் யூரி டோல்கொருக்கி வளர்ந்து வந்த நகரைச் சுற்றிலும் மரத்தினால் ஆன சுவரை, கிரெம்ளின், எழுப்ப ஆணையிட்டார்; இது பலமுறை மீளவும் கட்டப்பட்டுள்ளது.[13] 1237–1238 இல் மங்கோலியர்கள் நகரத்தை முழுமையாக தீக்கிரையாக்கினர்; குடிமக்களைக் கொன்றனர். இதன் பிறகு 1327இல் நகரம் மீண்டெழுந்து தன்னாட்சி பெற்ற விளாடிமிர்-சுசுதால் ஆட்சிப்பகுதியின் தலைநகராயிற்று.[14] வோல்கா ஆற்றின் தலைமுனையில் அமைந்திருந்ததால் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. மாஸ்கோ ஆட்சிப்பகுதி நிலையான வளமிகு ஆட்சிப்பகுதியாக (மாஸ்கோ பெரிய குறுநாடு என அழைக்கப்பட்டது) மாறியது. பலவேறு பகுதிகளிலிருந்தும் அகதிகள் இங்கு வந்து குடியேறினர்.
மாஸ்கோவின் முதலாம் இவான் காலத்தில் அரசியல் மையம் திவெரிலிருந்து மாஸ்கோவிற்கு மாற்றப்பட்டது. மங்காலிய தாதார் மன்னர்களுக்கு வரிகளை வசூலித்து சேகரிக்கும் நகரமாக மாஸ்கோ விளங்கியது. வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு மாஸ்கோவில் எதிர்ப்பு வளர்ந்தது. 1380இல் இளவரசர் திமித்ரி டோன்சுகோய் கோல்டன் ஹோர்டு எனப்படும் டாடார்களுக்கு எதிராக போரிட்டு குளிகோவோ என்றவிடதில் வென்றான். ஆனால் இரண்டாண்டுகளில் மீண்டும் டோக்டமிஷ் கானால் பிடிக்கப்பட்டது. 1480இல் உருசியாவின் மூன்றாம் இவான் உக்ரா ஆற்றின் கரையில் டாடார்களிடமிருந்து இறுதியாக விடுதலை பெற்றுத் தந்தார். மாஸ்கோ மீண்டும் உருசியாவின் அதிகார மையமானது.[15] மூன்றாம் இவானின் கீழ் நகரம் உருசியப் பேரரசின் தலைநகரமாயிற்று.
பொ.ஊ. 1571இல் கிரிமிய டாடார்கள் மாஸ்கோவைத் தாக்கி கொள்ளையடித்தனர்; கிரெம்ளினைத் தவிர அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.[16]
1609இல் சார் மன்னர் நான்காம் வாசிலிக்கு உதவ கிரேட் நோவ்கோரொடிலிருந்து சுவீடியப் படை அணிவகுத்து வந்தது. 1610இல் மாஸ்கோவை அடைந்த இப்படை சாருக்கு எதிரான எழுச்சியை அடக்கியது; 1611இல் அவர்கள் வெளியேறிய பின்னர் போலந்து–லித்துவேனியா படையெடுத்தது. அப்போது குளுசினோவில் நடந்த போரில் உருசியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 17வது நூற்றாண்டில் பல மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன. உருசியாவின் சிக்கலான காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் போலந்து-லித்துவேனியாவிடமிருந்து விடுதலை (1612), உப்புக் கலவரம் (1648), செப்புக் கலவரம் (1662), மற்றும் 1682 ஆண்டு மாஸ்கோ கலவரங்கள் நடைபெற்றன.
பொ.ஊ. 1570–1571, 1592, மற்றும் 1654–1656 காலங்களில் பிளேக்கு கொள்ளைநோய்க்கு மாஸ்கோ ஆட்பட்டது.[17] 1712இல் உருசியாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பால்டிக் கடலோரத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டர் கட்டியிருந்த சென் பீட்டர்ஸ்பேர்க்குக்கு மாற்றப்பட்டது. 1771இல் ஏற்பட்ட பிளேக்கு தாக்குதல் மாஸ்கோவில் மட்டும் 100,000 உயிர்களை பலிகொண்டது. 1812இல் பிரெஞ்சு படையெடுப்பின்போது நெப்போலியனின் படைகள் செப்டம்பர் 14இல் நகரத்தை அண்மித்தபோது, மாஸ்கோ நகரத்தவர் தங்கள் நகருக்குத் தாங்களே தீ வைத்து விட்டு காலி செய்தனர். . நெப்போலியனின் படைகள், பசி, குளிர் மற்றும் உணவு வழங்கலில் தடை காரணமாக பின்வாங்க நேரிட்டது. உருசியக் குளிரில் பலர் மடிந்தனர்; அவ்வப்போது தாக்கிய உருசியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.இந்தப் போரில் 400,000 வீரர்கள் இறந்ததாக மதிப்பிடப்படுகின்றது.[18]
Remove ads
சோவியத் காலத்தில்
சோவியத் அரசு கைத்தொழில் பேட்டைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டது. 90 வீதமான வீட்டுதொகுதிகள் 1955 க்குப்பின்னரே கட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலான வீட்டுத்தொகுதிகள் பல அடுக்குகளை கொண்ட் அடுக்குமாடிகளாகவே காணப்பட்டது. இதன் மூலம் அரசு மக்களின் வீடு இல்லா பிரச்சனைக்கு தீர்வுகண்டது. 1992 ஜனவரியில் அரசு சிறு தொகையை செலுத்துவதன் மூலம் இந்த அடுக்கு மாடிகளை குடியிருப்பாளர் அதனை சொந்தமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே குறித்த மக்களிற்கான கடைகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் அளவுகளிற்கான அரச கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.
Remove ads
மக்கள்தொகை

மாஸ்கோ சுமார் 8,304,600 அளவான மக்கள் தொகையை கொண்டுள்ளது. நகர மக்கள்தொகையில் பெரும்பான்மையாக ருசியர்களே உள்ளனர், இதைவிட யூதர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக இருந்த போதும் யூத மதம், இஸ்லாம் போன்ற மதங்களும் பின்பற்றப்படுகின்றன.
1970-1990 இடைப்பட்ட காலத்தில் நகரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் சுமார் 1.21 இல் இருந்து 0.26 வீதமாக வீழ்ச்சி அடைந்தது.
இரண்டாம் உலகப்போரில்
1939 – 1945 வரை சோவித் படைகளின் தலமைப்பீடமாக மாஸ்கோ விளங்கியது. 1941 அக்டோபரில் நாசி ஜேர்மன் மாஸ்கோ நகரை நெருங்கியபோதும் ருசியப்படைகளின் எதிர் தாக்குதலால் பின்வாங்கிச்சென்றனர்.
காலநிலை
Remove ads
இவற்றையும் காணவும்
மேற்சான்றுகள்
மேலதிக தகவலிற்கு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads