மத்திய கலிமந்தான்
போர்னியோ, இந்தோனேசியா, கலிமந்தானில் அமைந்துள்ள மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்திய கலிமந்தான் (ஆங்கிலம்: Central Kalimantan; மலாய்: Kalimantan Tengah; இந்தோனேசியம்: Provinsi Kalimantan Tengah; சீனம்: 中加里曼丹) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.
மத்திய கலிமந்தான் மாநிலத்தின் வடக்கில் வடக்கு கலிமந்தான்; மேற்கில் மேற்கு கலிமந்தான்; கிழக்கில் கிழக்கு கலிமந்தான்; ஆகிய இந்தோனேசிய மாநிலங்கள் நில எல்லையாக உள்ளன.
Remove ads
பொது
பாலாங்கா ராயா (Palangka Raya) நகரம், மத்திய கலிமந்தான் மாநிலத்தின் தலைநகரமாகச் செயல்படுகிறது. இந்த மாநகரத்தின் மக்கள்தொகை, 2010-இல் 2.2 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. 2015-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2.49 மில்லியன்; 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2.67 மில்லியன்;[6] 2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 2,702,200-ஆக உயர்ந்துள்ளது.[1]
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1990 - 2000 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு 3.0% ஆக இருந்தது. அந்த நேரத்தில் இந்தோனேசியாவின் மிக உயர்ந்த மாநில வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும். 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர், அடுத்த பத்தாண்டில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.8% ஆக குறைந்தது.
ஆனால் 2010-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது மீண்டும் உயர்ந்தது. மற்ற மாநிலங்களில் இருப்பதை விட, மத்திய கலிமந்தான் மாநிலத்தில் டயாக் பழங்குடி மக்கள் அதிகமாக உள்ளனர். தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என கோரிக்கையை முன்வைத்த டயாக் பழங்குடி மக்கள், அதில் வெற்றியும் கண்டனர். அவர்களின் கோரிக்கைக்கு இணங்கிய இந்தோனேசிய அரசாங்கம், அவர்களுக்காகவே மத்திய கலிமந்தான் மாநிலத்தை உருவாக்கிக் கொடுத்தது.
Remove ads
வரலாறு
18-ஆம் நூற்றாண்டில் இருந்து கலிமந்தானின் மத்தியப் பகுதியும்; அதன் டயாக் குடிமக்களும் பஞ்சார் சுல்தானகத்தால் (Sultanate of Banjar) ஆளப்பட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தோனேசியா சுதந்திரம் அடைந்தது. அதைத் தொடர்ந்து, டயாக் பழங்குடியினர் தெற்கு கலிமந்தான் மாநிலத்தில் (South Kalimantan Province) தங்களுக்கு என தனி ஒரு மாநிலத்தைக் கோரினர்.
1957-ஆம் ஆண்டில் தெற்கு கலிமந்தான் மாநிலத்தில் இருந்த முசுலிம் மக்களிடம் இருந்து டயாக் மக்களுக்கு அதிக சுயாட்சியை வழங்குவதற்காக தெற்கு கலிமந்தான் மாநிலம் பிரிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி இந்தோனேசிய அரசாங்கத்தால் அந்த மாற்றம் அங்கீகரிக்கப்பட்டது.[7]
இந்தோனேசியாவின் பதினேழாவது மாநிலம்
1957-ஆம் ஆண்டு அதிபர் சட்டம் எண். 10 (Presidential Law No. 10 Year 1957); என்பதின் கீழ் மத்திய கலிமந்தான் மாநிலம் இந்தோனேசியாவின் பதினேழாவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதிபர் சுகர்ணோ, டயாக் இனத்தில் பிறந்த தேசிய வீராங்கனையான டிசிலிக் ரிவுட் (Tjilik Riwut) என்பவரை முதல் ஆளுநராக நியமித்தார். மற்றும் பலங்கராயாவை மாநிலத் தலைநகராகவும் அறிவித்தார்.[8]
Remove ads
நிலவியல்
எல்லைகள்
இந்தோனேசிய மாநிலங்களில் 153,564.5 சதுர கி.மீ. (59,291.6 சதுர மைல்) பரப்பளவில் மத்திய கலிமந்தான் மாநிலம் தான் மிகப்பெரிய மாநிலமாகும், இந்த மாநிலம் ஜாவா தீவை (Java Island) விட 1.5 மடங்கு பெரியது.
இந்த மாநிலத்தின் வடக்கே மேற்கு கலிமந்தான், கிழக்கு கலிமந்தான் மாநிலங்களும்; தெற்கே ஜாவா கடல் (Java Sea); கிழக்கே தெற்கு கலிமந்தான், கிழக்கு கலிமந்தான் மாநிலங்களும்; மேற்கில் மேற்கு கலிமந்தான் மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன.
சுவானர் மலைகள்
இந்த மாநிலத்தின் சுவானர் மலைகள் (Schwaner Mountains) வடகிழக்கில் இருந்து தென்மேற்கு வரை நீண்டுள்ளன. இந்த மலையின் 80% அடர்ந்த காடுகள், மக்கு சதுப்பு நிலங்கள் (Peatland Swamps), சதுப்புநிலங்கள் (Mangrove), ஆறுகள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்களால் சூழப்பட்டுள்ளது.
வடகிழக்கில் உள்ள மலைப்பகுதிகள் மிகத் தொலைதூரமானவை; மற்றும் எளிதில் அணுக முடியாதவை. இந்த மலைப் பகுதிகளில் கெங்கபாங் (Kengkabang), சாமியாசாங் (Samiajang), லியாங் பகாங் (Liang Pahang) மற்றும் உலு கெடாங் (Ulu Gedang) ஆகிய மலைகள் உள்ளன. இவை முன்பு எரிமலைகளாய் இருந்தவை.
சபாங்காவ் தேசியப் பூங்கா
மத்திய கலிமந்தான் மாநிலத்தின் மையம் வெப்பமண்டல காடுகளால் மூடப்பட்டு உள்ளது. இந்தக் காடுகள் பிரம்பு, பிசின் மற்றும் உலின் (Ulin), மெராந்தி (Meranti) போன்ற மதிப்புமிக்க மரங்களை உற்பத்தி செய்கிறது. இந்த மாநிலத்தின் தெற்குப் பகுதியில் தாழ்நிலங்கள் (Southern Lowlands) சூழ்ந்துள்ளன. அவை பல ஆறுகளுடன் மக்கு சதுப்பு நிலங்களால் மூடப்பட்டு உள்ளன.
இங்குதான் பிரபலமான சபாங்காவ் தேசியப் பூங்கா (Sabangau National Park) உள்ளது; அழிந்துவரும் ஓராங் ஊத்தான் மனிதக் குரங்குகளின் சரணாலயமாகவும் உள்ளது.
கலிமந்தான் நெல் வேளாண்மைத் திட்டம்
அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மக்கு சதுப்பு நிலப்பகுதியில் சபாங்காவ் தேசியப் பூங்கா அமைந்து உள்ளது. அண்மைய காலத்தில் இந்தப் பூங்காவின் சதுப்பு நிலக் காடுகள்; கலிமந்தான் நெல் வேளாண்மைத் திட்டத்தால் (Kalimantan Mega Rice Project) சேதம் அடைந்துள்ளன.
பெரிய அளவிலான நிலப் பகுதிகளை, நெற்பயிர் விளைச்சல் பகுதிகளாக மாற்ற முயன்று; அவை தோல்வியில் முடிந்ததால், மத்திய கலிமந்தான் போர்னியோ காடுகளுக்குப் பெருத்த சேதங்கள் ஏற்பட்டன.
மத்திய கலிமந்தான் மாநிலத்தின் காலநிலை ஈரமான வானிலை கொண்ட பூமத்திய ரேகை மண்டல காலநிலை ஆகும். இங்கு எட்டு மாதங்களுக்கு தொடர்ந்தால் போல மழைக்காலம்; மற்றும் 4 மாதங்கள் வறண்ட பருவ காலம். ஆண்டுக்கு 2,776—3,393 மி.மீ. அளவில், சராசரியாக 145 மழை நாட்களுக்கு மழை பொழிகிறது.
ஆறுகள்
மத்திய கலிமந்தானில் சுவானர் மலைகளின் வடக்கே உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து ஜாவா கடல் வரை பாயும் ஆறுகள் ஏராளமாக உள்ளன. முக்கிய ஆறுகள் பின்வருமாறு:
- பாரிட்டோ ஆறு (900 கி.மீ.) - (Barito River)
- கபுவாஸ் ஆறு (600 கி.மீ.) - (Kapuas River)
- ககாயான் ஆறு (600 கி.மீ.) - (Kahayan River)
- கத்திங்கான் ஆறு (600 கி.மீ.) - (Katingan River)
- மெண்டாவாய் ஆறு (400 கி.மீ.) - (Mendawai River)
- செருயான் ஆறு (350 கி.மீ.) - (Seruyan River)
- லாமண்டாவ் ஆறு (300 கி.மீ.) - (Lamandau River)
- அருட் ஆறு (250 கி.மீ.) - (Arut River)
- சபாங்காவ் ஆறு (200 கி.மீ.) - (Sabangau River)
- குமாய் ஆறு (179 கி.மீ.) - (Kumai River)
- ஜெலாய் ஆறு (100 கி.மீ.) - (Jelai River)
மத்திய கலிமந்தான் மாநிலத்தின் முக்கியமான போக்குவரத்து முறைகளில் ஆற்றுப் போக்குவரத்து முறைதான் முதன்மையான இடம் வகிக்கின்றது. இந்த மாநிலத்தின் வளர்ச்சி அடையாத உள்கட்டமைப்பு நிலைக்கு, அதன் ஆறுகளே அதற்கு பெரிய பொருளாதார உறுதுணைகளாக விளங்குகின்றன.
Remove ads
மேற்கோள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads