யூலியசு சீசர்
உரோமின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர் (100-44 பொ. ஊ. மு.) / From Wikipedia, the free encyclopedia
கையசு சூலியசு சீசர் (ஆங்கிலம்: Gaius Julius Caesar; இலத்தீன்: கையசு சூலியசு கீசர்; 12 சூலை 100 பொ. ஊ. மு. – 15 மார்ச் 44 பொ. ஊ. மு.) என்பவர் ஓர் உரோமானியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். முதலாம் மூவராட்சியின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் கௌல் போர்களில் உரோமானிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு தன் அரசியல் எதிரி பாம்பேயை ஓர் உள்நாட்டுப் போரில் தோற்கடித்தார். இறுதியாக பொ. ஊ. மு. 49இல் சர்வாதிகாரியானார் (திக்தேத்தர்). பொ. ஊ. மு. 44இல் அரசியல் கொலை செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்ந்தார். உரோமைக் குடியரசின் வீழ்ச்சி மற்றும் உரோமைப் பேரரசின் வளர்ச்சிக்கு வழி வகுத்த நிகழ்வுகளில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினார்.
சூலியசு சீசர் | |
---|---|
சூலியசு சீசரின் துசுகுலும் சிலை. இவரது வாழ் நாளின் போது உருவாக்கப்பட்டு எஞ்சியுள்ள ஒரே சிலை இது தான் என்று கருதப்படுகிறது. இது இப்போது இத்தாலியின் துரின் தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. | |
பிறப்பு | 12 சூலை 100 பொ. ஊ. மு.[1] சுபுர்ரா, உரோம், உரோமைக் குடியரசு |
இறப்பு | 15 மார்ச் 44 பொ. ஊ. மு. (அகவை 55) பொம்பெயி அரங்கம், உரோம், உரோமைக் குடியரசு |
இறப்பிற்கான காரணம் | அரசியல் கொலை (கத்திக் குத்துக் காயங்கள்) |
கல்லறை | உரோமின் சீசர் கோயில் 41.891943°N 12.486246°E / 41.891943; 12.486246 |
பணி |
|
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
பெற்றோர் |
|
துணைவர் | ஏழாம் கிளியோபாற்றா |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | |
விருதுகள் | குடிசார் மகுடம் |
Military service | |
சேவை ஆண்டுகள் | 81–45 பொ. ஊ. மு. |
போர்கள்/யுத்தங்கள் |
|
பொ. ஊ. மு. 60இல் சீசர், கிராசுசு மற்றும் பாம்பே ஆகியோர் முதலாம் மூவராட்சியை உருவாக்கினர். உரோமானிய அரசியலில் பல ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய ஓர் அலுவல் முறை சாராத அரசியல் கூட்டணி இதுவாகும். அரசியல் சக்தியைக் குவிக்கும் இவர்களது முயற்சிகள் செனட் சபையிலிருந்த பலரால் எதிர்க்கப்பட்டன. இவர்களில் இளைய காதோவும் ஒருவராவார். அவருக்கு சிசெரோவின் மறைமுக ஆதரவு இருந்தது. ஒரு தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளை கௌல் போர்களில் பெற்றதன் வழியாக உரோமைக் குடியரசில் மிகுந்த சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக சீசர் வளர்ந்தார். கௌல் போர்கள் பொ. ஊ. மு. 51ஆம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்டன. இவை உரோமானிய நிலப்பரப்பைப் பெருமளவுக்கு விரிவாக்கின. இந்த நேரத்தின் போது இவர் பிரித்தானியா மீது படையெடுத்தார். ரைன் ஆற்றில் ஒரு பாலத்தைக் கட்டினார். இந்தச் சாதனைகள் மற்றும் இவரது அனுபவமுள்ள இராணுவத்தின் ஆதரவு ஆகியவை பாம்பேயின் நிலை மங்கும் வகையில் அச்சுறுத்தலாக விளங்கின. பொ. ஊ. மு. 53இல் கிராசுசுவின் இறப்பிற்குப் பிறகு பாம்பே செனட் சபையுடன் மீண்டும் ஒத்துழைக்கத் தொடங்கினார். கௌல் போர்கள் முடிவடைந்தவுடன் தன்னுடைய இராணுவ தளபதித்துவத்தில் இருந்து இறங்கி, உரோமுக்குத் திரும்புமாறு செனட் சபையானது சீசருக்கு ஆணையிட்டது. பொ. ஊ. மு. 49இல் உரூபிகன் ஆற்றைக் கடந்து, உரோமை நோக்கி ஓர் இராணுவத்திற்குத் தலைமை தாங்கி அணி வகுத்ததன் மூலம் செனட் சபையின் அதிகாரத்திற்குச் சீசர் வெளிப்படையாகப் பணிய மறுத்தார்.[2] உரூபிகனைக் கடப்பது என்பது மீள இயலாத நிலைக்குச் செல்வதைக் குறிக்கும் ஒரு சொற்றொடராக ஆங்கிலத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இது சீசரின் உள்நாட்டுப் போரைத் தொடங்கியது. இதில் இவர் வெற்றி பெற்றார். இது பொ. ஊ. மு. 45இல் கிட்டத் தட்ட போட்டியற்ற சக்தி மற்றும் செல்வாக்குடைய ஒரு நிலையில் இவரை நிறுத்தியது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பெற்றதற்குப் பிறகு சமூக மற்றும் அரசாங்கச் சீர்திருத்தங்களின் ஓர் அமல்படுத்தலைச் சீசர் தொடங்கினார். இதில் யூலியன் நாட்காட்டியின் உருவாக்கமும் அடங்கும். உரோமைக் குடியரசின் தொலை தூரப் பகுதிகளின் பல குடி மக்களுக்கு இவர் உரோமானியக் குடியுரிமையை வழங்கினார். தன்னுடைய அனுபவசாலிப் போர் வீரர்களுக்கு ஆதரவளிக்க நிலச் சீர்திருத்தங்களை இவர் தொடங்கினார். ஒரு பெருமளவிலான உட்கட்டமைப்பு திட்டத்தையும் இவர் தொடங்கி வைத்தார். 44ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் "வாழ்நாள் முழுவதுக்குமான சர்வாதிகாரி" (திக்தேத்தர் பெர்பெச்சுவோ) என்று பொது அறிவிப்பு செய்யப்பட்டார். இவரது சக்தி மற்றும் அரசு மீது இவரது ஆதிக்கம் ஆகியவற்றால் அச்சமடைந்த புரூட்டசு மற்றும் காசியசு தலைமையிலான செனட் உறுப்பினர்களின் ஒரு குழுவானது சீசரை பொ. ஊ. மு. 44 ஆம் ஆண்டு நட்ட நடு மார்ச்சு (15 மார்ச்சு) அன்று அரசியல் கொலை செய்தது. ஒரு புதிய தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்கள் வெடித்தன. இதற்குப் பிறகு குடியரசின் அரசியலமைப்பு அரசாங்கமானது என்றுமே மீண்டும் அதன் பழைய நிலைக்குச் செல்லவில்லை. சீசரின் அக்காவின் மகள் வழிப் பேரனும், தத்தெடுக்கப்பட்ட வாரிசுமான ஆக்தேவியன் உரோமைக் குடியரசின் கடைசி உள்நாட்டு போரில் தன்னுடைய எதிரிகளைத் தோற்கடித்ததற்குப் பிறகு ஒற்றை சக்தியாக வளர்ச்சியடைந்தார். இவர் பின்னாட்களில் அகத்தசு என்று அறியப்பட்டார். ஆக்தேவியன் தன்னுடைய சக்தியை நிலை நிறுத்தத் தொடங்கினார். இவ்வாறாக உரோமைப் பேரரசின் சகாப்தமானது தொடங்கியது.
சீசர் ஒரு செயல் திறமை வாய்ந்த எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர், மற்றும் ஓர் அரசியல் மேதையாவார். இவரது வாழ்வு குறித்த பெரும்பாலான தகவல்கள் இவரது இராணுவ படையெடுப்புகள் குறித்த இவரது சொந்த குறிப்புகளில் இருந்து பெறப்படுகின்றன. சிசெரோவின் மடல்களும், பேச்சுகளும் மற்றும் சல்லுசுதுவின் வரலாற்றுப் பதிவுகள் உள்ளிட்டவையும் பிற சம கால ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. பின்னாட்களில் சுவேதோனியசு மற்றும் புளூட்டாக்கால் எழுதப்பட்ட சுய சரிதைகளும் கூட முக்கியமான ஆதாரங்களாக விளங்குகின்றன. பல வரலாற்றாளர்கள் சீசரை வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவத் தளபதிகளில் ஒருவராகக் கருதுகின்றனர்.[3] இவரது மூன்றாவது பெயரானது (சீசர்) இறுதியாகப் பேரரசர் என்பதற்கான சொல்லாகப் பின்பற்றப்பட்டது; இவரது பெயரான "சீசரானது" உரோமைப் பேரரசு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. செருமனியின் கெய்சர் மற்றும் உருசியாவின் சார் போன்ற பட்டங்கள் இவரது பெயரின் நவீன கால உருவாக்கங்கள் ஆகும். இலக்கியம் மற்றும் கலை வேலைப்பாடுகளில் இவர் அடிக்கடி தோன்றுகிறார்.