குருத்தணு
moolachell / From Wikipedia, the free encyclopedia
கடந்த நூற்றாண்டு கண்ட தனிப்பெரும் சாதனையான படியெடுப்பு இனப்பெருக்க முறையின் வெற்றியைத் தொடர்ந்து ஆழமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் துறையே குருத்தணு (Stem Cell) தொடர்பான துறையாகும். இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளால் மனிதன் எதிர்நோக்கும் சகல நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
குருத்தணு எனப்படுவது அனைத்துப் பல்கல உயிரினங்களிலும் காணப்படும், மேம்பாடு அடையாத மற்றும் வகைப்பாட்டிற்கு உட்படாத (unspecilaized and undifferentiated), ஆனால் கலப்பிரிவு, மற்றும் உயிரணு வேற்றுமைப்பாடு மூலம் புதிய உயிரணுக்களை உருவாக்குவதுடன் மேம்பட்ட உயிரணுக்களை (specialized cells) உருவாக்கி வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு இழையங்களையும் உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணுக்களாகும். டொரன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எர்னஸ்ட் மெக்குல்லோச் (Ernest McCulloch), ஜேம்சு டில்(James Till) ஆகிய இருவரும் 1960 களில் செய்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் இந்த குருத்தணு ஆய்வு வளர்ச்சியடைந்தது[1][2].
குருத்தணுக்கள் தொடர்ந்து கலப்பிரிவுக்கு உட்படும் தன்மை உடையவையாக இருப்பதனால் இறக்கும் உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிப்புக்குட்படும் உயிரணுக்களை பிரதியீடு செய்யவும் பயன்படும். ஒரு குருத்தணு பிரிவுக்கு உள்ளாகும்போது, அது புதிய குருத்தணுக்களாக தொடர்ந்து தொழிற்படக் கூடியவையாகவோ, அல்லது வகைப்படுத்தப்பட்டு தசை உயிரணு, குருதிக்கலங்கள் போன்ற பல்வேறுபட்ட உயிரணுக்களாக விருத்தியடைபவையாகவோ இருக்கலாம்.
இக்குருத்தணுக்கள் முக்கியமாக இரண்டு வகையாக இனம் பிரிக்கப்பட்டுள்ளது.
- கருவணு பெருக்கமடையும் ஆரம்ப நான்கைந்து நாட்களுக்குள் உருவாகும், 100 முதல் 150 வரை உயிரணுக்களைக் கொண்ட இளம்கருவளர் பருவ (blastocyst) முளையத்தின் உள்ளான உயிரணுக் கூட்டமே முளைய குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) எனப்படும். முளைய குருத்தணுக்கள் எவ்வகையான இழையத்தையும் உருவாக்கும் தன்மை கொண்டவை .
- முளைய விருத்தி முடிந்த பின்னர், இளம் உயிரிலோ, குழந்தைகளிலோ அல்லது வளர்ந்தவர்களிலோ உடலின் பல பகுதிகளிலும் பெறப்படக் கூடிய, தொடர்ந்து கலப்பிரிவுக்கு உட்படும் தன்மை கொண்ட உயிரணுக்கள் வளர்ந்த குருத்தணுக்கள் (Adult Stem Cells) எனப்படும். இவை எந்த உறுப்பிலிருந்து பெறப்படுகின்றதோ, அதற்கேற்ற இழையத்தை மட்டுமே உருவாக்கும் இயல்புடையதாக இருக்கும். இவை வாழ்வுக்காலம் முடிந்து இறக்கும் கலங்களை ஈடு செய்யவும், பாதிக்கப்படும் கலங்களை புதிய கலங்களால் பிரதியீடு செய்வதன் மூலம் திருத்தத்தை மேற்கொள்ளவும் பயன்படும்.
தற்போது உயிரணு வளர்ப்பு மூலம் இந்த குருத்தணுக்கள் வளர்க்கப்பட்டு, பின்னர் மாற்றங்கள் மூலம் தசை, நரம்பு போன்ற வகைப்படுத்தப்படும் உயிரணுக்கள் உருவாக்கப்படும். குருத்தணுக்கள் எலும்பு மச்சை, குழந்தை பிறந்த பின்னர் தொப்புட்கொடி சூல்வித்தகம் (placenta) போன்றவற்றில் காணப்படும் குருதி போன்ற வேறுபட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்டு மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும்.