அறுபத்துமூவர் From Wikipedia, the free encyclopedia
நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்.[1] சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.[2]
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.
இவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.[3]
எண் | பெயர் | குலம் | பூசை நாள் |
---|---|---|---|
1 | அதிபத்தர் | பரதவர் | ஆவணி ஆயில்யம் |
2 | அப்பூதியடிகள் | அந்தணர் | தை சதயம் |
3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | ஆனி பூரம் |
4 | அரிவட்டாயர் | வேளாளர் | தை திருவாதிரை |
5 | ஆனாய நாயனார் | இடையர் | கார்த்திகை ஹஸ்தம் |
6 | இசைஞானியார் | ஆதி சைவர் | சித்திரை சித்திரை |
7 | இடங்கழி நாயனார் | வேளிர்[4] | ஐப்பசி கார்த்திகை |
8 | இயற்பகை நாயனார் | வணிகர் | மார்கழி உத்திரம் |
9 | இளையான்குடிமாறார் | வேளாளர் | ஆவணி மகம் |
10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | புரட்டாசி அசுவினி |
11 | எறிபத்த நாயனார் | மரபறியார் | மாசி ஹஸ்தம் |
12 | ஏயர்கோன் கலிகாமர் | வேளாளர் | ஆனி ரேவதி |
13 | ஏனாதி நாதர் | ஈழக்குலச்சான்றார் | புரட்டாசி உத்திராடம் |
14 | ஐயடிகள் காடவர்கோன் | காடவர்,பல்லவர் | ஐப்பசி மூலம் |
15 | கணநாதர் | அந்தணர் | பங்குனி திருவாதிரை |
16 | கணம்புல்லர் | செங்குந்தர் [5][6] | கார்த்திகை கார்த்திகை |
17 | கண்ணப்பர் | வேடர்/வேட்டுவர் | தை மிருகசீருஷம் |
18 | கலிய நாயனார் | செக்கார் | ஆடி கேட்டை |
19 | கழறிற்றறிவார் | சேரர்-அரசன் | ஆடி சுவாதி |
20 | கழற்சிங்கர் | பல்லவர்-அரசன் | வைகாசி பரணி |
21 | காரி நாயனார் | மரபறியார் | மாசி பூராடம் |
22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | பங்குனி சுவாதி |
23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | ஆவணி மூலம் |
24 | குலச்சிறையார் | மரபறியார் | ஆவணி அனுஷம் |
25 | கூற்றுவர் | களப்பாளர் | ஆடி திருவாதிரை |
26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | தை ரேவதி |
27 | கோச்செங்கட் சோழன் | சோழர்-அரசன் | மாசி சதயம் |
28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | ஆடி கேட்டை |
29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | மார்கஇசைழி திருவாதிரை |
30 | சண்டேசுவர நாயனார் | அந்தணர் | தை உத்திரம் |
31 | சக்தி நாயனார் | வேளாளர் | ஐப்பசி பூரம் |
32 | சாக்கியர் | வேளாளர் | மார்கழி பூராடம் |
33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | கார்த்திகை பூராடம் |
34 | சிறுதொண்டர் | மாமாத்திரர் | சித்திரை பரணி |
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | ஆடிச் சுவாதி |
36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | ஆவணி பூசம் |
37 | சோமசிமாறர் | அந்தணர் | வைகாசி ஆயிலியம் |
38 | தண்டியடிகள் | பங்குனி சதயம் | |
39 | திருக்குறிப்புத் தொண்டர் | வண்ணார் | சித்திரை சுவாதி |
40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | வைகாசி மூலம் |
41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | சித்திரை சதயம் |
42 | திருநாளை போவார் | பறையர் | புரட்டாசி ரோகிணி |
43 | திருநீலகண்டர் | குயவர் | தை விசாகம் |
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | வைகாசி மூலம் |
45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் |
46 | திருமூலர் | இடையர் | ஐப்பசி அசுவினி |
47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | வைகாசி பூசம் |
48 | நரசிங்க முனையர் | முனையரையர் | புரட்டாசி சதயம் |
49 | நின்றசீர் நெடுமாறன் | பாண்டியர் அரசர் | ஐப்பசி பரணி |
50 | நேச நாயனார் | சாலியர் | பங்குனி ரோகிணி |
51 | புகழ்சோழன் | சோழர்- அரசர் | ஆடி கார்த்திகை |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | ஆனி ஆயிலியம் |
53 | பூசலார் | அந்தணர் | ஐப்பசி அனுஷம் |
54 | பெருமிழலைக் குறும்பர் | குறும்பர் | ஆடி சித்திரை |
55 | மங்கையர்க்கரசியார் | பாண்டியர்-அரசர் | சித்திரை ரோகிணி |
56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | மார்கழி சுவாதி |
57 | முருக நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் |
58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | பங்குனி பூசம் |
59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | கார்த்திகை மூலம் |
60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | ஆடி கார்த்திகை |
61 | மெய்ப்பொருள் நாயனார் | குறுநில மன்னர் | கார்த்திகை உத்திரம் |
62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | மார்கழி ரேவதி |
63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் | சித்திரை திருவாதிரை |
காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன. நாயன்மார்களின் வரலாறுகளை ஆய்வு செய்யவும், அவற்றில் உள்ள சேர்க்கைகளையும், உண்மைகளையும் புரிந்து நோக்கவும் இவ்வாறான வகைப்பாடு உதவுகின்றன.
நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது, அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர், மரபு கூறப்படாதவர் என வகைப்படுத்துகின்றனர்.
நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.
நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.
நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.
நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும்.
சைவ சமய குரவர் நால்வரில் ஒருவரான பொ.ஊ. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் நாயன்மார்கள் வரிசையில் வைக்கப்படவில்லை. எனினும் இவரது படைப்பான திருவாசகம் திருமுறையின் எட்டாவது தொகுதியின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.[3] இலக்கிய மரபில் நாயன்மார்களின் எண்ணிக்கை 63 என்றாலும்,[9] தமிழ்ப் புலவரான திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் சைவ மரபு பல இடங்களில் அவரை 64வது நாயன்மாராகப் போற்றுகிறது.[10] இதன் அடையாளமாகவே மயிலாப்பூர், திருச்சுழி உட்பட பல்வேறு தென்னிந்திய சமூகங்கள் ஆண்டுதோறும் அறுபத்து மூவர் திருவீதி உலாவில் வள்ளுவரை அறுபத்து நாலாமவராக பூஜித்து ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றன.[10][11][12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.