From Wikipedia, the free encyclopedia
பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது. உலகில் பெரும்பான்மை நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில், குறிப்பாக இசுலாமியப் பெரும்பாண்மை கொண்ட நாடுகளான சௌதி அரேபியா, ஏமன், இரான், ஜோர்டான், சிரியா, லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. சில நாடுகளில் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இசுலாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்தவரை, ஷரியத் சட்டமே மூலமாக அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் பகுதி 4 மற்றும் பிரிவு 44ல் அனைத்து இந்திய சமயங்கள் மற்றும் சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது.[1] இந்திய அரசியலமைப்பின் பிரிவு 44, "இந்தியாவின் எல்லை முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கும்." என்று கூறுகிறது.
இந்தியாவில் கோவா மட்டுமே பொது உரிமையியல் சட்டத்தை பின்பற்றி வருகிறது.[2] சமய சார்பற்ற நாடான இந்தியாவில், வாழும் பல்வேறு சமய மக்களுக்கான தனிநபர் சட்டத்தினை (Personal Law) நீக்கி, அதற்கு பதிலாக நாட்டின் அனைத்து தரப்பு சமய மக்கள் கடைப்பிடிக்க வசதியாக பொது உரிமையியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த, 1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 44-இல் பரிந்துரை செய்தது.[3] ஆனால் இது வரை இந்திய அரசு பொது உரிமையியல் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தவில்லை.[4] உச்ச நீதிமன்றமும் பொது உரிமையியல் சட்டத்தினை இயற்ற இந்திய அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை வரவேற்றார்.[5][6][7][8] ஆனால் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர இசுலாமியர்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.[9]
கிரோடி லால் மீனா எனும் உறுப்பினர் 9 டிசம்பர் 2022 அன்று மாநிலங்களவையில், பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கான குழுவை அமைக்கக் கோரி, தனிநபர் சட்ட முன்மொழிவை தாக்கல் செய்தார். இந்த சட்ட முன்மொழிவுக்கு இந்திய தேசிய காங்கிரசு, சமாஜ்வாதி கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சிகள், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சிகளின் உறுப்பினர்கள், நாட்டில் நிலவும் சமூகக் கட்டமைப்பையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் அழிக்கும் என்று கூறி சட்ட முன்மொழிவை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இந்த சட்டமுன்மொழிவுக்கு வாக்கெடுப்பு நடத்தினார். சட்ட முமொழிவை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் பெற்றது.[11] நடப்பு குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த தனிநபர் சட்டமுன்மொழிவு குறித்து விவாதிக்கப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.