அம்பி (கர்நாடகம்)
கர்நாடகாவில் உள்ள ஒரு ஊர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பி (Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்தில் உள்ளது. ஹம்பி, விசயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.[2] இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது.
2014-ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி அதிகப்படியாக கூகுளில் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுள் முதலாவதாக ஹம்பி உள்ளது.[3] விசயநகரப் பேரரசின் படையில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வீரர்கள் இருந்துள்ளனர். பொ.ஊ. 1500-இல் விசயநகரப் பேரரசில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 5,00,000 ஆக இருந்ததாகச் சொல்லப்படுகிறது (இது பொ.ஊ. 1440-1540 காலத்திய உலக மக்கட்தொகையில் 0.1% ஆகும்). இதனால் அன்றைய காலத்தில் இந்நகரம் மக்கட்தொகையளவில் பீஜிங்குக்கு அடுத்தபடியானதும் பாரிசைப் போல மூன்று மடங்கானதானதும் ஆகும்.[4]
விசயநகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுதி என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[5]
Remove ads
பெயர்
ஹம்பி என்னும் பெயர் கன்னடப் பெயரான ஹம்பே என்பதன் ஆங்கிலப்பெயர் ஆகும். துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளதால் அவ்வாற்றின் பழைய பெயரான பம்பா என்பதிலிருந்து ”ஹம்பே” என்னும் இந்தக் கன்னடச் சொல் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது.[6][7] இது சில சமயங்களில் விசயநகரம் என்றோ அல்லது விசயநகர அரசர்களின் குலதெய்வமான விருபாட்சரின் பெயரைத் தழுவி விருபாட்சபுரம் என்றோ அழைக்கப்படுவதும் உண்டு.
புவியியல்
ஹம்பி, துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் பெங்களூருவிலிருந்து 353 கி.மீ. தொலைவிலும், பெல்லாரியிலிருந்து 74 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகிலுள்ள இரயில்நிலையம் 13 கி.மீ. தொலைவிலுள்ள ஹோஸ்பேட் இரயில் நிலையமாகும். ஆந்திரப்பிரதேசத்திலுள்ள குண்டக்கல் இரயில்நிலையம் இங்கிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ளது. வேளாண்மையே இங்கு முக்கிய தொழிலாக உள்ளது. விருபாட்சர் கோயில் மற்றும் வேறுசில புண்ணிய கோயில்கள் மற்றும் சுற்றுலா மூலமாகவும் பொருளாதார வசதி பெறுகிறது. இரும்புத் தாது மற்றும் மாங்கனீசு போன்ற கனிம இருப்புகள் நிறைந்துள்ளதால் இப்பகுதியில் பல ஆண்டுகளாகச் சுரங்கத்தொழில் நடைபெற்று வருகிறது.
காலநிலை
Remove ads
வரலாறு

பெல்லாரி மாவட்டத்தில் கிடைத்த பேரரசர் அசோகரின் சாசனங்களின் படி பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டில் இப்பகுதி மௌரியப் பேரரசின் பகுதியாக இருந்ததாக அறியப்படுகிறது. இப்பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் பிராமி கல்வெட்டும், இரண்டாம் நூற்றாண்டைச் (பொ-ஊ) சேர்ந்த சுடுமண் முத்திரையும் கிடைத்துள்ளது.[8] ஹம்பியின் குடியேற்றங்கள் பொ.ஊ. முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகச் சொல்லப்படுகின்றது.[9]
விசயநகரப் பேரரசின் எழுச்சிக்கு சிறிதுகாலம் முன்னர் ஹம்பியிலிருந்து கிழக்கே 19 கி.மீ. தொலைவிலுள்ள சிறு நகரமான கம்ப்பிளியை ஆண்டவர்களின் கைவசம் ஹம்பி இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது.[8]
விசயநகரப் பேரரசு தக்காண முகலாய சுல்தான்களின் படையெடுப்புக்குள்ளானபோது அப் பேரரசின் தலநகரத்தின் மிகச்சிறந்த பகுதியாக ஹம்பி விளங்கியது.[5] வற்றாத துங்கபத்திரை ஆற்றால் ஒரு புறமும், ஏனைய மூன்றுபுறங்களிலும் இயற்கை அரணாக அமைந்த மலைகளாலும் சூழப்பட்ட இதன் அமைவே தலைநகராக அமைந்ததற்கு முக்கியக் காரணமாகும். 1420-ஆம் ஆண்டு இந்நகரைப் பார்க்க வந்த நிக்கோலா கோண்டி என்ற இத்தாலியப் பயணி இந்நகரம் 60 மைல் சுற்றளவு கொண்டது என்று கூறியுள்ளார்.[10]
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரியும் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளருமான கர்னல் காலின் மெக்கன்சீயால் 1800 ஆம் ஆண்டு ஹம்பியின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோயில்கள் இருந்தன. இங்குள்ள பம்பபதி கோயில் (விருபாட்சர் கோயில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் ஆகியவற்றின் அழிபாடுகள் விசயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.[11] இந்தியத் தொல்லியல் துறையினர் தொடர்ந்து இவ்விடத்தில் அகழ்வாய்வு நடத்திவருகிறது.[12]
மால்யவந்தா மலையின் வடக்கு சரிவுக்கும் தலரிகட்டா வாயிலுக்கும் இடையே இசுலாமிய குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. அரசவையின் உயர் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் வசித்த இடமாக இசுலாமியக் குடியிருப்புப்பகுதி இருக்கக்கூடுமென தொல்லியலாய்வாளர்கள் கருதுகின்றனர்.[13]
இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பியில் உள்ள பல புண்ணிய இடங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு. அம்பிக்கு அருகில் உள்ள நிம்பபுரம் என்ற ஊரில் வாலியின் எச்சங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.[11]
அஞ்சனாத்ரி குன்று
ஹம்பியில் உள்ள ’அஞ்சனாத்ரி குன்று’ அனுமன் பிறந்த மலையாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த மலையில் 1060 படிகள் ஏறிச்சென்றால் அனுமனுக்கும் அவரது தாயார் அஞ்சனா தேவிக்கும் கோயில்கள் உள்ளன. இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.[14]
Remove ads
கட்டமைப்பு

விசயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கிய இந்நகரம் ஏழு வரிசை கொண்ட கோட்டைகளால் சூழப்பட்டிருந்தது. இந்தக் கோட்டைகளில் வாயில்களும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகரைச் சுற்றி ஏழாவதாக அமைந்த உட்கோட்டை மிகவும் பாதுகாக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள நினைவுச் சின்னங்களை சமய, வாழ்விட, படைத்துறை சார்ந்த கட்டிடங்களென மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஹேமகூட மலையிலுள்ள சமணக்கோயில், இரு கோயில்கள் மற்றும் விருபாட்சர் கோயிலின் சில அமைப்புகள் விஜயநகரப் பேரரசு காலத்துக்கும் முந்தியவை. இவற்றுள் காலத்தால் முந்தியவை பிரமிடு வடிவ விமான அமைப்புகளைக் கொண்ட சிவன் கோயில்களாகும். இச்சிவன் கோயில்கள் 9-10 ஆம் நூற்றாண்டின் முற்கால சாளுக்கியர் காலத்துக் கட்டிடங்கள் ஆகும்.
Remove ads
சமயம்சார் கட்டிடங்கள்
தற்போதும் வழிபாடுகள் நடைபெற்றுவரும் கோயில்கள் உட்பட பல முக்கிய இந்துக் கோயில்கள் ஹம்பியில் உள்ளன.[15] அவற்றுள் குறிப்பிடத்தக்கன:
அச்சுதராயர் கோயில்

கிருஷ்ணதேவராயருக்குப் பின் விசயநகரை ஆண்ட அச்சுததேவ ராயரின் ஆட்சிகாலத்தில் அரசரின் உயரதிகாரியால் பொ.ஊ. 1534 ஆம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டதால், விஷ்ணுவை முதன்மைக் கடவுளாகக் கொண்ட இக்கோயில் அச்சுதராயர் கோயில் என அழைக்கப்படுகிறது. ஹம்பியிலுள்ள மற்ற கோயில்களைவிட இக்கோயிலின் கட்டிட அமைப்பு காலத்தால் பிந்தையதாக உள்ளது. கந்தமாதனம் மற்றும் மாதங்கா குன்றுகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த இரு செவ்வகக் கூடங்களின் மையத்தில் இக்கோயிலின் முக்கியக் கருவறை உள்ளது.[16]
படவிலிங்கம்

இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள் அளவில் மிகப் பெரியதாகும். இலட்சுமி நரசிம்மர் சிலைக்கு அடுத்துள்ள ஒரு அறையில் இந்த லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் சென்று பார்க்கும்போது இந்த லிங்கத்தில் மூன்றாவது கண் உள்ளதைக் காணமுடியும். (depicting the three eyes of Shiva) ஒரு ஏழை விவசாயப் பெண் இதனைக் கட்டியதாக வரலாறு உள்ளது. லிங்கம் உள்ள அறை வழியாக ஒரு வாய்க்கால் செல்வதால் அவ்வறையில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்டளவுக்கு நீர் உள்ளது. லிங்கத்தின் அடிப்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது
சந்திரமௌலீசுவரர் கோயில்
மால்யவந்த இரகுநாதசுவாமி கோயில்
பழங்கால கட்டிடபாணியில் அமைந்துள்ள இக்கோயிலின் உட்புறச் சுவர்களில் வினோதமான மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரின வடிவங்களின் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.[17]
ஹசார ராமர் கோயில் வளாகம்

ஹசார ராமர் கோயில் இந்து புராணக்கதைகள் அடங்கிய சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. கோயில் உட்சுற்றுச் சுவரில் இராமாயண நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளன.[18]
சைனக் கோயில்

சைனக் கோயில்கள் இப்பகுதியில் இருந்ததற்கான சான்றுகளாக ஹேமகூடம் உட்பட்ட பல இடங்களில் சைனக் கோயில்களின் மிச்சங்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலான கோயில்களில் கடவுள் திருவுருவங்கள் காணப்படவில்லை. கிடைத்துள்ள மிச்சங்களைக் கொண்டு இக்கோயில்கள் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக கண்டறியப்படுகிறது.[19]
கிருஷ்ணர் கோயில்
- கிருஷ்ணதேவராயர் ஆட்சிகாலத்தில் பொ.ஊ. 1513 ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலின் வளாகம் இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக உள்ளது. கிருஷ்ணதேவராயரால் பொறிக்கப்பட்ட பொ.ஊ. 1513 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கோயிலின் முன்புறம் காணப்படுகிறது. விசயநகர வீழ்ச்சிக்குப் பின்பு இக்கோயில் பராமரிக்கப்படவில்லை. தற்போது இக்கோயிலில் வழிபாடு நடைபெறவில்லை.[20] சென்ற பத்தாண்டுகளில் கிருஷ்ணர் கோயிலுக்கு முன்புற கடைத்தெரு அகழ்ந்தெடுக்கப்பட்டு மீட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் புண்ணிய குளம் கோயிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.
விட்டலர் கோயில்

விட்டலர் கோயில் வளாகம் ஹம்பி இடிபாடுகளில் முக்கியமானதும் நன்கறியப்பட்டதுமாகும். இங்குள்ள கல்லால் ஆன தேர், கர்நாடகச் சுற்றுலாத்துறையின் சின்னமாக உள்ளது. இதன்மேல் அமைந்த செங்கற்கோபுரம் இடிக்கப்பட்டு விட்டது.[21] இங்கு அமைக்கப்பட்டுள்ள விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் இவ்வளாகம் மாலை நேரத்தில் பார்ப்பதற்கு அழகாகத் தோற்றமளிக்கிறது. இங்குள்ள ஊஞ்சல் கூடம், விசயநகர கட்டிடக்கலைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[21] இசைத்தூண்கள் கொண்ட மண்டபமொன்று இவ்வளாகத்தில் உள்ளது. இந்த தேரானது இந்திய அரசின் 50 ரூபாய் நோட்டின் பின்புறம் அச்சிடப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில், ஹம்பி கடைத்தெருவில் அமைந்த ஒரு முக்கியமான பண்டையக் கோயில். பம்பாவதி கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் விசயநகரப் பேரரசு காலத்துக்கும் முந்தையது. கிழக்கில் அமைந்த 160-அடி (49 m) முதன்மை நுழைவாயில் கோபுரம், முதன்மை கோபுரத்தை அடுத்து உட்கோயிலுக்குள் செல்ல அமைக்கப்பட்ட நுழைவாயிலின் சிறு கோபுரம், துங்கபத்திரை ஆற்றுக்கு செல்லும் வழியிலமைந்த வடபுறக் கோபுரம் (கனககிரி கோபுரம்) என மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளது. பொ.ஊ. 1510 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக்கொண்டபோது அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலின் உட்புற சிறு கோபுரமும், தூண்களமைந்த அழகான மண்டபமும் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவையாகும்.[22] சிவனுக்கு மட்டுமல்லாது, புவனேசுவரி மற்றும் பம்பை இருவருக்கும் இக்கோயிலில் கருவறைகள் உள்ளன.

பிரசன்ன விருபாட்சர் கோயில்
பாதாள சிவன் கோயில்
பாதாள சிவன் கோயில் என அறியப்படும் இக்கோயில் அகழ்ந்தெடுக்கப்படும் போது அதன் மேற்புறம் வரை பூமிக்கடியில் புதையுண்டிருந்தது.[23]
Remove ads
குடிசார் கட்டிடங்கள்

- கால்வாய்ப் பாலங்களும் கால்வாய்களும்
- கமலபுராவில் அமைந்திருக்கும் தொல்லியல் அருங்காட்சியகம்
- தாமரை மண்டபம் (Lotus Mahal)
- சனானா வளாகம் (Zanana enclosure)
படைசார் கட்டிடங்கள்

- யானைக் கூடம்
- கிருஷ்ணதேவராயரின் படையிலிருந்த பதினோரு அரசனது யானைகளைக் கட்டிவைக்கும் இடம். இதற்கடுத்த கட்டிடத்தில் யானைப்பாகர்கள் தங்கினர்
- அரசரின் தராசு[24]
இயற்கை காட்சி
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads