இந்தோனேசியா - மலேசியா மோதல்

1963-ஆம் ஆண்டு முதல் 1966-ஆம் ஆண்டு வரையில் இந்தோனேசியாவுக்கும் - மலேசியாவுக்கும் இடையே நடந்த ஆயுத ம From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசியா - மலேசியா மோதல்
Remove ads

இந்தோனேசியா - மலேசியா மோதல் அல்லது இந்தோனேசியா - மலேசியா நெருக்கடி, (ஆங்கிலம்: Indonesia–Malaysia confrontation அல்லது Borneo confrontation; மலாய்: Konfrontasi Indonesia-Malaysia) என்பது 1963-ஆம் ஆண்டு தொடங்கி 1966-ஆம் ஆண்டு வரையில் இந்தோனேசியாவுக்கும் - மலேசியாவுக்கும் இடையே நடைபெற்ற ஆயுத மோதலைக் குறிப்பிடுவதாகும்.

விரைவான உண்மைகள் இந்தோனேசியா - மலேசியா மோதல் Indonesia–Malaysia confrontation, நாள் ...

இந்த மோதல் 1960-ஆம் ஆண்டுகளில் மலேசியா உருவாக்கப் படுவதில் இந்தோனேசியாவின் எதிர்ப்பில் இருந்து உருவானது. 1965-இல் இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, இந்தச் சர்ச்சை அமைதியாக ஒரு முடிவுக்கு வந்தது. பின்னர் மலேசியா எனும் ஒரு கூட்டமைப்பு நாடு உருவாக்கப்பட்டது.

செப்டம்பர் 1963-இல் மலேசியா உருவானது. மலேசியாவின் உருவாக்கம் என்பது மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) (தீபகற்ப மலேசியா), சிங்கப்பூர், மற்றும் சபா, சரவாக் பிரித்தானிய மகுடக் காலனிகளின் ஓர் இணைப்பாகும்.

Remove ads

பொது

மார்ச் - ஆகஸ்டு 1962-இல் நியூ கினியாவில் நெதர்லாந்திற்கு எதிராக இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினியா தகராறு (West New Guinea Dispute); மற்றும் டிசம்பர் 1962-இல் புரூணை கிளர்ச்சி (Brunei Revolt) ஆகியவை இந்தோனேசியா - மலேசியா மோதலின் முக்கிய முன்னோடிகளாகும்.

மலேசியாவுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் நேரடி இராணுவ ஆதரவு இருந்தது. இந்தோனேசியாவிற்கு சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவின் மறைமுக ஆதரவு இருந்தது. இதுவே ஆசியாவில் மற்றுமொரு பனிப்போரின் (Cold War in Asia) அத்தியாயமாக மாறியது.

எல்லைப் பகுதிகளில் மோதல்கள்

இந்த மோதல் அறிவிக்கப்படாத ஒரு போராகும். இந்தோனேசியா மற்றும் கிழக்கு மலேசியா - போர்னியோ கலிமந்தான் எல்லைப் பகுதிகளில் பெரும்பாலான மோதல்கள் நடைபெற்றன.

இந்த மோதல்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்ற மோதல்களாகும். தனிமைப் படுத்தப்பட்ட தரைப் போர் என வகைப்படுத்தப் படுகிறது. வழக்கமாக இரு நாட்டு எல்லைகளின் இருபுறங்களிலும் சிறிய படைகள் கொண்டு (platoon-sized operations) நடத்தப்பட்டன.

மக்களை மனமாற்றம் செய்வதற்கான முயற்சி

போர்னியோவில் இந்தோனேசியாவின் ஊடுருவல் பிரச்சாரம் என்பது சபா மற்றும் சரவாக்கில் உள்ள இன மத வேறுபாடுகளைக் காரணம் காட்டி மக்களை மனமாற்றம் செய்வதற்கான முயற்சி எனக் கருதப் படுகிறது. மலாயா மற்றும் சிங்கப்பூரில் இன மத வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் பிரச்சாரங்கள் எடுபடவில்லை.

போர்னியோவின் காட்டு நிலப்பரப்பு மற்றும் மலேசியா-இந்தோனேசியா எல்லையில் சாலைகள் இல்லாதது ரோந்துப் பணிகளுக்குச் சவாலாக அமைந்தன. இந்தோனேசியப் படைகளும்; காமன்வெல்த் நாட்டுப் படைகளும், கால்நடையாக நடந்து நீண்ட காலத்திற்கு ரோந்துகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உலங்கூர்தி சேவைகள்

இரு தரப்பினரும் சிறிய அளவிலான காலாட் படைகளையும்; விமானப் போக்குவரத்து உதவிகளையும் நம்பி இருந்தனர். காமன்வெல்த் படைகளுக்கு சிறந்த உலங்கூர்தி சேவைகள் கிடைத்தன. அதே வேளையில், ஆறுகள் மூலமாகவும் ஊடுருவல்கள் நடைபெற்றன. போர் நடவடிக்கைகள் தரைப் படைகளால் நடத்தப் பட்டாலும், வான்வழிப் படைகள் அதிகமான ஆதரவை வழங்கின.

பிரித்தானிய ஆயுதப் படைகள் பெரும்பகுதி தற்காப்பு ஆதரவை வழங்கியன. மலேசியப் படைகள் தங்கள் தற்காப்புப் பங்களிப்பைப் படிப்படியாக அதிகரித்தன. சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை (Australian Defence Force) மற்றும் நியூசிலாந்து பாதுகாப்புப் படைகள் (New Zealand Defence Force) போர்னியோவுக்குக் கொண்டு செல்லப்பட்டு மலேசியத் தரப்பிற்கு உதவின. [21]

Remove ads

கிளாரெட் நடவடிக்கை

கிழக்கு மலேசியா மீதான இந்தோனேசியத் தாக்குதல்கள், தொடக்கத்தில் இந்தோனேசிய இராணுவத்தால் பயிற்சி பெற்ற உள்ளூர் தன்னார்வலர்களைப் பெரிதும் நம்பி இருந்தன. காலப் போக்கில், இந்தோனேசிய இராணுவமே நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டது.

படிப்படியாக வளர்ந்து வந்த இந்தோனேசியாவின் தாக்குதல்களைத் தடுக்கவும், தவிர்க்கவும், 1964-ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் இந்தோனேசியா கலிமந்தான் காடுகளில் கிளாரெட் நடவடிக்கை (Operation Claret) எனும் பெயரில் தங்கள் சொந்த நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

மலேசியாவில் இந்தோனேசியப் படைகள்

1964 ஜூலை 21-ஆம் தேதி சிங்கப்பூரில் ஓர் இனக் கலவரம் (1964 Race Riots in Singapore). 43 நாட்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1964 ஆகஸ்ட் 17-ஆம் தேதி, இந்தோனேசியா மேற்கு மலேசியாவில் மேலும் ஓர் ஊடுருவல் நடவடிக்கையைத் தொடங்கியது.

வான்குடைகள் மூலமாக இந்தோனேசியப் போர் வீரர்களை மலேசியாவில் சில இடங்களில் தரை இறக்கியது. ஆனால் அந்த ஊடுருவல்முயற்சி வெற்றி பெறவில்லை.[22]

டிசம்பர் 1964-இல் போர்னியோ கலிமந்தான் எல்லையில் இந்தோனேசியா தன் இராணுவப் படைகளைக் குவிக்கத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் எனும் அறிகுறிகள் தென்பட்டன.

அமைதி உடன்படிக்கை

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள், தங்களின் போர்ப் படைகளை போர்னியோ கலிமந்தான் எல்லைக்கு அனுப்பின. நிலைமை சற்றே அமைதியானது. பெரிய மோதல்கள் நடைபெறவில்லை.

இதற்கு இடையில் இந்தோனேசியாவில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு (30 September Movement). சுகர்ணோவின் அதிகாரத்தை ஜெனரல் சுகார்த்தோ கைப்பற்றிக் கொண்டார். அதைத் தொடர்ந்து மோதல்கள் குறையத் தொடங்கின.

மே 1966-இல் இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே ஒரு தீவிரமான சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. 1966 ஆகஸ்டு 11-ஆம் தேதி ஓர் அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. மலேசியாவை இந்தோனேசியா முறையாக அங்கீகரித்தது.[23]

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads