கடசான்
மலேசியா சபா மாநிலத்தில் வாழும் பூர்வீக மக்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடசான் (மலாய்: Kaum Kadazan அல்லது Bangsa Kadazan; ஆங்கிலம்: Kadazan; சீனம்: 卡达山) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியா, வடக்கு போர்னியோ, சபா மாநிலத்தில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்களாகும். இவர்கள் சபாவின் மேற்கு கடற்கரையில் உள்ள பெனாம்பாங் மாவட்டத்தை (Penampang District) சுற்றியுள்ள இடங்கள்; மற்றும் உட்புறத்தில் பல்வேறு இடங்களில் காணப் படுகின்றனர்.
அண்மைய காலங்களில் சபா மாநிலத்தில் ஏற்பட்டு வரும் அரசியல் தாக்கங்கள் (Political Initiatives) பண்பாட்டுக் கலவைகள்; மொழி ஒருங்கிணைப்புகள் போன்றவற்றினால் டூசுன் - கடசான் ஆகிய இரண்டு குழுக்களும் இடையே நெருக்கமான பிணைப்புக்கள் ஏற்ப்பட்டு வருகின்றன. அதன் பிரதிபலிப்பாக கடசான்-டூசுன் (Kadazan-Dusun) எனும் ஒரு புதிய இனச் சொல்லும் உருவாக்கப்பட்டு உள்ளது.
கடசான்-டூசுன் எனும் இந்த இரு குழுக்களும் ஒன்றாக இணைந்து, தற்சமயம் சபாவில் மிகப் பெரிய இனக் குழுவாகப் பரிமாற்றம் கண்டு வருகின்றன. இந்தக் கட்டத்தில், கடசான்-டூசுன் இனக் குழுக்களை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO); போர்னியோவில் ஒரு பாரம்பரியப் பழங்குடி இனக் குழுக்களாகவும் அங்கீகரித்து உள்ளது. இந்த அங்கீகாரம் 2004-ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றது.[1]
Remove ads
வரலாறு

1950-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கடசான் எனும் சொல் பயன்பாட்டில் இருப்பதாகச் சான்றுகள் உள்ளன. 'கடசான்' (Kadazan) என்ற சொல்லுக்கு 'நாட்டின் மக்கள்' என்று பொருள். நிலத்தின் உண்மையான மக்களை விவரிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
கடசான் மக்களின் வரலாற்றில் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, புரூணை சுல்தானகத்தால் (Brunei Sultanate) ஆளப்பட்டு உள்ளனர். கடசான் (Kadazan) அல்லது கடயன் (Kadayan) என்பவர்கள் 'ஓராங் டூசுன்' (Orang Dusun) என்று புரூணை சுல்தானகத்தால் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப் பட்டனர். 'பழத்தோட்டத்தின் மக்கள்' என்று பொருள்.
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்
1881-ஆம் ஆண்டு பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் (North Borneo Company) மேற்கொள்ளப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் இந்த உண்மை தெரிய வருகிறது.[2]
சபா பாப்பார் (Papar) பகுதியில் வசித்த பூர்வீக மக்கள் தங்களை கடசான்கள் என்று அழைக்கப் படுவதற்கு விரும்புவதாக 1927-இல் ஓவன் ரட்டர் (Owen Rutter) எனும் பிரித்தானியர் எழுதி உள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம், அனைத்து கடசான்களும் டூசுன்கள் என வகைப்படுத்தப் பட்டனர்.
1980-ஆம் ஆண்டுகளில் கடசான் என்பவர்கள் உண்மையிலேயே கடசான் மக்களா அல்லது டூசுன் மக்களா எனும் பிரச்சினை தலைதூக்கியது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, 1985-ஆம் ஆண்டில், கடசான்-டூசுன் (Kadazandusun) எனும் பெயர்ச் சொல் அமல் செய்யப்பட்டது.[3]
அந்தச் சொல் 'ஓராங் டூசுன்' மக்களுக்கும் கடசான் மக்களுக்கும் பொருத்தமாக அமையும் அதிகாரச் சொல்லாக அமைந்தது. தற்சமயம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரண்டு நாடுகளும் கடசான்-டூசுன் எனும் இனக்குழுவினரின் பெயரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றன.
Remove ads
மனித மரபியல் ஆய்வு

2018-ஆம் ஆண்டு மலேசியா சபா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மனித மரபியல் ஆய்வுக் குழுவால் மரபணு வகை தரவு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் இருந்து, வடக்கு போர்னியோவில் உள்ள டூசுன் மக்கள்; சோன்சோகன் (Sonsogon), ருங்குஸ் (Rungus), லிங்கபாவ் (Lingkabau), மூருட் (Murut) இனக்குழுவினர்; தைவான் பூர்வீகவாசிகளான அமி மற்றும் அடயல் (Taiwan Natives of Ami and Atayal) குழுவினருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்று கண்டு அறியப்பட்டது.
அத்துடன் போர்னியோ டூசுன் மக்கள்; ஆஸ்ட்ரோ-மெலனேசியர் (Austro-Melanesian) அல்லாத பிலிப்பீன்சு நாட்டின் விசயன் மக்கள் (Visayan), தகலாகு மக்கள் (Tagalog), இலோகானோ மக்கள் (Ilocan), மினனுபு (Minanubu) பிலிப்பினோ மக்களுடன் தொடர்பு உடையவர்கள் என்றும் கண்டு அறியப்பட்டு உள்ளது.[4]
Remove ads
பண்பாடு
கடசான் கலாசாரம் நெல் விவசாயத்தைப் பெரிதும் சார்ந்து உள்ளது. பல்வேறு சுவையான உணவுகளுக்கும் கடசான் கலாசாரம் பெயர் பெற்றது. கடசான் வீடுகளில் மது பானங்கள் நொதித்தல் செயல்முறைகள் மூலம் தயாரிக்கப் படுகின்றன.
தூமிசு (To'omis) மற்றும் லினுதாவு (Linutau) ஆகிய மதுபானங்கள்; கடசான் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரிமாறப்படும் முக்கிய அரிசி மதுபான வகையாகும். கடசான் சமூகக் கூட்டங்கள் மற்றும் கடசான் விழாக்களில் இந்த மதுபானம் முக்கியமான பானமாகக் கருதப் படுகிறது.
அறுவடை திருவிழா

கடசான்களின் மிக முக்கியமான திருவிழா காமத்தான் (Kaamatan) அல்லது அறுவடை திருவிழா ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக்குப் பிறகு நெல் தெய்வங்களைச் சிறப்பு செய்வதற்காக அறுவடை திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். மே மாதத்தில் நடைபெறுகிறது. அத்துடன் மே மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் சபா முழுவதும் பொது விடுமுறை நாட்களாகும்.[5]
அறுவடை திருவிழா கொண்டாட்டத்தின் போது, அறுவடை திருவிழா அழகு ராணி (Unduk Ngadau) போட்டியும் நடைபெறும். ஓர் இளம் பெண், அறுவடை திருவிழா அழகு ராணியாக முடிசூட்டுவது வழக்கமான நிகழ்வு ஆகும். சபா மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்து கடசான், டூசுன், மூருட் அல்லது ருங்குசு வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்கள் இந்தப் பட்டத்திற்காகப் போட்டியிடுவதும் வழக்கம்.[5]
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads