பெனாம்பாங் மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெனாம்பாங் மாவட்டம்; (மலாய்: Daerah Penampang; ஆங்கிலம்: Penampang District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்தப் பெனாம்பாங் மாவட்டத்தின் தலைநகரம் பெனாம்பாங் நகரம் (Penampang Town) ஆகும்.
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள இதர மாவட்டங்களான கோத்தா பெலுட் மாவட்டம் (Kota Belud District); கோத்தா கினபாலு மாவட்டம் (Kota Kinabalu District), பாப்பார் மாவட்டம் (Papar District), புத்தாத்தான் மாவட்டம் (Putatan District); ரானாவ் மாவட்டம் (Ranau District); துவாரான் மாவட்டம் (Tuaran District) ஆகிய மாவட்டங்களுடன் ஒரு பகுதியாக இந்த பெனாம்பாங் மாவட்டமும் அமைந்து உள்ளது.
Remove ads
வரலாறு
1978-இல் பெனாம்பாங் மாவட்ட மன்றம் (Penampang District Council) உருவாவதற்கு முன்பு, ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றம் (Jesselton Rural District Council) என அறியப்பட்டது. அந்த ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றம்; அப்போதைய பெனாம்பாங் துணை மாவட்டத்தில் இருந்த புத்தாத்தான் (Putatan), லோக் காவி (Lok Kawi), டெலிபோக் நகரம் (Telipok), கம்போங் லிக்காசு (Kampung Likas), தாமான் போ சாங் (Taman Foh Sang), தாமான் இசுடீபன் (Taman Stephen) வரையிலான பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.
ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றத்தின் முதல் தலைவர் ஜெசல்டனின் மாவட்ட அதிகாரி (District Officer of Jesselton), புளோ (Blow D.S.O).
கோத்தா கினபாலு கிராமப்புற மாவட்ட மன்றம்
1966-ஆம் ஆண்டில், உள்ளூராட்சி ஆணைச் சட்டம் 1961 (Local Government Ordinance 1961) திருத்தப்பட்டது. இதன் மூலம் ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்களை சபா மாநிலத்தின் உள்ளாட்சி அமைச்சர் நியமித்து வந்தார். ஜெசல்டன் என்ற பெயர் கோத்தா கினபாலு என மாற்றப்பட்டபோது, ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றம் என்பது கோத்தா கினபாலு கிராமப்புற மாவட்ட மன்றம் (Kota Kinabalu Rural District Council) என்று மாற்றப்பட்டது.
1978-ஆம் ஆண்டில், கோத்தா கினபாலு நகர வாரியம்; கோத்தா கினபாலு நகராட்சி மன்றமாகத் தரம் உயர்த்தப்பட்டது, எனவே கோத்தா கினபாலு கிராமப்புற மாவட்ட மன்றம்; பெனாம்பாங் மாவட்ட மன்றம் (Penampang District Council) என பெயர் பெற்றது. [2]
Remove ads
மக்கள்தொகையியல்
பெனாம்பாங் மாவட்டத்தில், மக்கள்தொகை பெரிய சமூகங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பெனாம்பாங் மாவட்டத்தின் மக்கள்தொகை சுமார் 121,934 மக்கள் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் கடசான்-டூசுன் இனக் குழுக்கள்; மற்றும் சீனர்கள் ஆகும். [3]
இவர்களைத் தொடர்ந்து சிறுபான்மையினராக பஜாவ் மற்றும் புரூணை மலாய் மக்கள் உள்ளனர். கடசான்-டூசுன்கள் முக்கியமாக கிறிஸ்தவத்தை கடைப்பிடிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர்கள். சீனர்கள் முக்கியமாக பௌத்தம் அல்லது கிறிஸ்தவத்தை கடைப்பிடிக்கின்றனர்.
புரூணை வம்சாவளியினர்
மலாய்க்காரர்களில் பெரும்பாலோர் புரூணை வம்சாவளியினர், பஜாவ் மக்கள். பெரும்பாலோர் புத்தாத்தான் துணை மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புற நகரங்களிலும் வசிக்கின்றனர்.
வடக்கு போர்னியோவில் ரோமன் கத்தோலிக்க தொடக்கக் காலப் பணிகளுக்கு, முக்கியமான தளங்களில் பெனாம்பாங் மாவட்டமும் ஒன்றாகும்.
ரோமன் கத்தோலிக்க சமயப் பணிகள்
ரோமன் கத்தோலிக்க பரப்புரை அமைப்பான ’செயின்ட் ஜோசப்ஸ் பாரின் மிசன் சொசைட்டி’ (St Joseph's Foreign Missionary College), 1880-களின் முற்பகுதியில் பாப்பார், சண்டக்கான், பெனாம்பாங் ஆகிய இடங்களில் அதன் ஆரம்பகால சமயப் பணிகளைத் தொடங்கியது.
1927 இல், பெனாம்பாங்கின் பூர்வீக மக்களிடையே மதப் பரவல் மட்டும் அல்லாமல் கல்வி அளிப்பதிலும் அவர்களின் பணி முக்கிய ஊக்கியாக இருந்தது என்று அறியப்படுகிறது.
மக்கள் பரம்பல்
மாவட்டத்தின் மக்கள் பரம்பல் பின்வருமாறு:
Remove ads
பொருளாதாரம்

வரலாற்று ரீதியாக, பெனாம்பாங்கின் முக்கிய பொருளாதார நடவடிக்கை நெல் வேளாண்மை மற்றும் பிற வேளாண் அடிப்படையிலானவை ஆகும். அண்மைய ஆண்டுகளில், பொருளாதார உயர்வு காணப்படுகிறது. இந்த மாவட்டம் கோத்தா கினபாலுவிற்கு அருகில் இருப்பதால், பொருளாதாரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் விரைவான வளர்ச்சியைக் காண்கிறது.
பாரம்பரிய வேளாண் நடவடிக்கைகளில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமாக ஈர நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட போதிலும், வணிக மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக அதிகளவில் அந்த நிலங்கள் மறைமுகமாக விற்கப் படுகின்றன. [4]
சுற்றுலா

பெனாம்பாங் பொதுவாக கடசான்-டூசுன் சமூகத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. மற்றும் அவர்களின் அரசியல் மற்றும் கலாசார வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் செயல்படுகிறது. கடசான்-டூசுன் கலாசார சங்கம் (Kadazandusun Cultural Association) சமூகக் கூடம் கடசான்-டூசுனின் பாரம்பரிய விழாக்களில் பலவற்றை நடத்துகிறது,
காமத்தான் அறுவடை திருவிழா
கடசான்களின் மிக முக்கியமான திருவிழா காமத்தான் (Kaamatan) அல்லது அறுவடை திருவிழா ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக்குப் பிறகு நெல் தெய்வங்களைச் சிறப்பு செய்வதற்காக அறுவடை திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். மே மாதத்தில் நடைபெறுகிறது. அத்துடன் மே மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் சபா முழுவதும் பொது விடுமுறை நாட்களாகும்.[5]
மான்சோபியாட் கலாச்சார கிராமம்
மான்சோபியாட் கலாச்சார கிராமம் (Monsopiad Cultural Village) பெனாம்பாங்கில் உள்ளது. மான்சோபியாட் என்பது ஒரு கடந்தகால வீரரின் பெயர். அவர் தன் எதிரிகளின் தலையை துண்டிக்கவும், மண்டை ஓடுகளை தன் வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிடவும், தன் எதிரிகளை தன் சக்திகளைப் பற்றி எச்சரிக்கவும் அறியப்பட்டார்.
சபா அருங்காட்சியக நிறுவனத்தின் ஒரு பகுதியான போகுனோன் சமூக அருங்காட்சியகம் (Pogunon Community Museum) போகுனோன் கிராமத்தில் அமைந்துள்ளது.
சபா ஓவியக் காட்சியகம், பெனாம்பாங்கில் அமைந்துள்ளது. இதில் 3000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. சபா ஓவியக் கட்டிடம் சபாவின் பழங்குடியின மக்களின் அலங்கார கலாசார மையக் கருவிகளுடன் கூடிய தனித்துவமான கூடை வடிவ கட்டிடக் கலையை கொண்டுள்ளது.
Remove ads
நட்பு மாவட்டம்
மெய்லி Jiangsu, China (since 13 April 2016)
காட்சியகம்
- பீட்டர் மொஜுன்டின் சிலை.
- செயின்ட் மைக்கேல் தேவாலயம்
- செயின்ட் ஜோசப் கத்தோலிக்க தேவாலயம்
- ஜிங் பூ கோயில்.
- கலாச்சார மண்டபம், டோங்கோங்கன் .
- கடசாண்டூசுன் ஒற்றுமை மையம்
- சபா காப்பக கட்டிடம்.
- பெனாம்பாங் நகர மையம்.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads