கோவை இராமகிருட்டிணன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் ஆவார் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோவை இராமகிருட்டிணன் (பிறப்பு 6 திசம்பர் 1952) தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் ஆவார். ஈழத்தமிழர் பிரச்சினைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்து பலமுறை சிறைவாசம் சென்றவர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் (த.பெ.தி.க) பொதுச்செயலாளராக உள்ளார்.[1]
Remove ads
பிறப்பு
6 திசம்பர் 1952 அன்று பிறந்தார் இராமகிருட்டிணன்.[2] அவர் தந்தை, அன்றைய கோயம்புத்தூர் நகராட்சியின் முதலாவது கோட்டத்துக்கான உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) சார்பில் பணியாற்றியவர்.[3]
இராமகிருட்டிணனின் பள்ளிப்பருவத்தில் அவருக்குத் தமிழாசிரியராக வாய்த்தவர் கோவை ஞானி.[3]
அரசியல் செயல்பாடு
திராவிடர் கழகம் (1968-86)
1968-இல் கோயம்புத்தூர் மாநகரின் காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் திராவிடர் கழகம் (தி.க.) நடத்திய பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் "பெரியார்" ஈ. வெ. இராமசாமி பேசினார். அவர் உரையைத் தற்செயலாகக் கேட்ட இராமகிருட்டிணன், பெரியாரின் அரசியலால் கவரப்பெற்று அப்போதே தி.க.-வில் இணைந்தார். 1970-இல் கோவை மாவட்ட தி.க. மாணவரணிச் செயலாளரானார். 1972-இல் கோவை மாவட்டச் செயலாளரானார்.
1973-இல் பெரியார் மறைந்தபின் அவர் துணைவியார் மணியம்மையும் அவருக்குப் பின் கி. வீரமணியும் தி.க. தலைமைப் பொறுப்புக்கு வந்தனர். வீரமணி வந்தபின் இராமகிருட்டிணன், தி.க.-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஆனார்.
சூன் 1975-இல் இந்திய அளவிலான நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் (மிசா) 1 பிப்ரவரி 1977 அன்று கைது செய்யப்பட்டார். ஓராண்டு சிறைக்குப்பின் வெளிவந்த அவர், தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டியமைக்காக மீண்டும் கைதானார்.
மகாராட்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் வாழும் தமிழர்களின்மீது நடைபெற்ற வன்முறையைக் கண்டித்துச் சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் கைதானார்.
1983-இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு யூலை வன்முறையைக் கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து கோவையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். தொடர்ந்து இலங்கையில் நிகழ்ந்த வன்முறைக் காட்சிகளை வைத்துப் புகைப்படக் கண்காட்சி நடத்தினார். வெ. ஆறுச்சாமியுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்ட அவர், பின் அவ்வமைப்பினருக்கான பயிற்சிக் களம் ஏற்படுத்தும் பொறுப்பை கொளத்தூர் மணியிடம் ஒப்படைத்தார். பின்னாளில் "விடுதலைப்புலிகளின் தோழமைக்கழகம்" என்ற அமைப்பையும் நிறுவினார்.
திராவிடர் கழகம் (இராமகிருட்டிணன்) (1986-2001)
1986-இல் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி "திராவிடர் கழகம் (இராமகிருட்டிணன்)" என்ற அமைப்பைத் தொடங்கினார். பிறகு இவ்வமைப்பு தமிழ்நாடு திராவிடர் கழகம் என்ற பெயரில் செயல்பட்டது.
1980-களிலும் 1990-களிலும் ஈழத்தமிழர் நிலையை விளக்கும் வகையில் "ஆயிரம் மண்டையோடுகள்" போராட்டத்தை நடத்தினார்.
1990-இல் விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் அழைப்பின்பேரில் ஈழத்துக்குச் சென்று வன்னிக் காடு பகுதியில் பல நாட்கள் இருந்தார்.
முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1991 சூன் மாதத்தில் இராமகிருட்டிணனும் ஆறுச்சாமியும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் (தடா) சிறைப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.
பெரியார் திராவிடர் கழகம் (2001-12)
விடுதலை இராசேந்திரன் நிறுவிய[4] பெரியார் திராவிடர் கழகத்தில் (பெ.திக.) 2001-இன் முற்பகுதியில் இணைந்த இராமகிருட்டிணன் அவ்வமைப்பின் பொதுச்செயலாளரானார். மாநிலத் தலைவராக கொளத்தூர் மணி இருந்தார்.[5] பி. ஜி. ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் செ.துரைசாமி[6] ஆகியோரும் பங்கு வகித்தனர்.
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தின்போது 2 மே 2009 அன்று இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான வண்டியொன்றைச் சேதப்படுத்தியமைக்காக இராமகிருட்டிணன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.[7]
தந்தை பெரியார் திராவிடர் கழகம் (2012-)
சில கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து 18 ஆகஸ்ட் 2012 அன்று கோவையில் தன் ஆதரவாளர்களுடன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் (த.பெ.தி.க) என்ற அமைப்பைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.[5] துணைத்தலைவராக துரைசாமி உள்ளார். பெ.திக.வின் எஞ்சிய உறுப்பினர்கள் கொளத்தூர் மணி தலைமையில் திராவிடர் விடுதலை கழகமாக (தி.வி.க) இயங்கி வருகின்றனர்.
முக்காலி, சிறுவாணி, பவானி ஆகிய பகுதிகளில் கேரள அரசு அணை கட்டுவதைக் கண்டித்து அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டங்கள், கேரளத்திலிருந்து வரும் தொடர்வண்டிகள் கோவையில் நின்றுசெல்ல வலியுறுத்திப் போராட்டம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
Remove ads
தனி வாழ்க்கை
இராமகிருட்டிணன், தடா வழக்கில் சிறைப்படும் முன் பிப்ரவரி 1991-இல் இரா. வசந்தி என்பவரைத் திருமணம் செய்திருந்தார். தடா சிறைக்காலத்தில் இவர்களுக்கு அமுதினி என்ற மகள் பிறந்தார். பின்னர் 'இந்திரஜித்' என்ற மகன் பிறந்தார்.[2]
வசந்தி, கோவை நியூ சித்தாபுதூரில் 20 சனவரி 2023 அன்று காலை 10 மணியளவில் தன் 59-ஆம் அகவையில் காலமானார்.[8][9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads