சி. வை. தாமோதரம்பிள்ளை

ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர். From Wikipedia, the free encyclopedia

சி. வை. தாமோதரம்பிள்ளை
Remove ads

சி. வை. தாமோதரம்பிள்ளை (C. W. Thamotharampillai, 12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901) என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.[1]

விரைவான உண்மைகள் சி. வை. தாமோதரம்பிள்ளைC. W. Thamotharampillai, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1852 இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். இவரது புதல்வர் அழகசுந்தரமும் தமிழாய்வாளராவார்.[2]

Remove ads

பதிப்புத்துறை முன்னோடி

1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.[1]

பத்திரிகை ஆசிரியர்

இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பெர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853-ஆம் ஆண்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.[3]

பட்டப்படிப்பு

1858 இல் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.[4] பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.[1] அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் வழக்குரைஞர் பதவியும் கிடைத்தது.

இராவ்பகதூர் விருது

தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.[5]

தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல்

அன்று இழக்கப்பட்டதாய்க் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அர்ப்பணிப்புடனும், கடும் உழைப்பினாலும் தேடிக் கண்டுபிடித்துப், பரிசோதித்து, அச்சிட்டு வெளியிட்டார்.[6]

மறைவு

தமது அறுபத்து ஒன்பதாம் வயதில், 1901 சனவரி 1 (சார்வரி ஆண்டு மார்கழி 18) இல் சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.[1]

நினைவகங்கள்

சி. வை. தாமோதரனாரின் உருவச்சிலை ஒன்று அவர் படிப்பித்த கோப்பாய் கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.[7]

நூற்பட்டியல்

சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களின் பட்டியல்.[8]

பதிப்பித்த நூல்கள்

Thumb
சூளாமணி

தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார். அவற்றில் சில:

  1. நீதிநெறி விளக்கவுரை
  2. தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
  3. வீரசோழியம் (1881)
  4. திருத்தணிகைப் புராணம்
  5. இறையனார் அகப்பொருள்
  6. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
  7. கலித்தொகை
  8. இலக்கண விளக்கம்
  9. சூளாமணி
  10. தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை

இயற்றிய நூல்கள்

  1. கட்டளைக் கலித்துறை
  2. சைவ மகத்துவம்
  3. வசன சூளாமணி
  4. நட்சத்திர மாலை
  5. ஆறாம் வாசகப் புத்தகம்
  6. ஏழாம் வாசகப் புத்தகம்
  7. ஆதியாகம கீர்த்தனம்
  8. விவிலிய விரோதம்

இவரைப் பற்றிய நூல்கள்

  • தாமோதரம்பிள்ளை அவர்கள் சரித்திரம், டி. ஏ. ராஜரத்தினம் பிள்ளை, பதிப்பு: என். முனிசாமி முதலியார், 'ஆனந்த போதினி', மதராசு, 1934

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads