ஜொகூர் சுல்தான் இசுமாயில் இபுராகிம்
நவீன ஜொகூர் மாநிலத்தின் மூன்றாவது சுல்தான் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுல்தான் இசுமாயில் இபுராகிம் அல்லது ஜொகூர் சுல்தான் இசுமாயில் இபுராகிம் (28 அக்டோபர் 1894 – 10 மே 1981) (ஆங்கிலம்: Sultan Ismail of Johor; மலாய்: Sultan Ismail ibni Sultan Ibrahim; சாவி: سلطان سر إسماعيل الخالدي ابن المرحوم سلطان سر إبراهيم المشهور; ) என்பவர் நவீன ஜொகூர் மாநிலத்தின் மூன்றாவது சுல்தான் ஆவார்.
1960 பிப்ரவரி 10-ஆம் தேதி ஜொகூர் பாரு, இசுதானா செமாயாம் (Istana Semayam) அரண்மனையில் ஜொகூர் சுல்தானாக முடிசூட்டப்பட்ட இவர்; மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTM) முதல் வேந்தராகவும் பொறுப்பு வகித்தார்.
Remove ads
தொடக்க கால வாழ்க்கை
துங்கு இசுமாயில் இபுராகிம் 28 அக்டோபர் 1894-இல்; ஜொகூர் பாரு இசுதானா செமாயாம் அரண்மனையில்; சுல்தான் இப்ராகிம்) அவர்களின் முதல் மனைவி சுல்தானா உங்கு மைமுனா பிந்தி உங்கு அப்துல் மஜித் (Sultanah Ungku Maimunah binti Ungku Abdul Majid) மூலமாக இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
சுல்தான் அபு பக்கரின் மரணத்தைத் தொடர்ந்து, துங்கு இப்ராகிம், 1895-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி ஜொகூரின் துங்கு மகோத்தாவாக நியமிக்கப்பட்டார். அவர் தன் தொடக்கக் கல்வியை ஜொகூர் பாருவில் உள்ள ஒரு மலாய் பள்ளியில் தொடங்கினார். 1904-ஆம் ஆண்டு, மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு பின்வரும் பள்ளிகளில் பயின்றார்.
- ரோஸ் இல் பள்ளி - டன்பிரிட்ஜ் வெல்சு - கென்ட்
- ஆல்ட்பர்க் லாட்ஜ் பள்ளி - சபோல்க்
- ராய்டன் ஆல் - நோர்போக்
- கிறிஸ்ட் சர்ச் - ஆக்சுபோர்டு
ஓன் ஜபார்
அவரின் சகோதரர்கள், துங்கு அபு பக்கர்; துங்கு அகமது; மற்றும் ஓன் ஜபார் உட்பட ஐந்து நண்பர்களும் பின்னர் இங்கிலாந்து சென்றனர். 1910-இல், துங்கு இசுமாயில், ஓன் ஜபாருடன் சேர்ந்து, ஜொகூர் திரும்பினார்; மற்றும் கோலா கங்சார் மலாய் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்தார்.[1]
1913-ஆம் ஆண்டில், துங்கு இசுமாயில் ஓர் உறைவிடப் பள்ளியில் உயர்க்கல்வி பெற மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவரின் சகோதரர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். அங்கு அவர் மார்ச் 5, 1920 வரை படித்தார்.[2]
Remove ads
மலாயாவில் சப்பானிய படையெடுப்பு
1928-ஆம் ஆண்டு துங்கு இசுமாயில் ஜொகூர் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில் சுல்தான் இப்ராகிம் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் அதிக நேரம் செலவிட்டார்.[3] 1937-ஆம் ஆண்டில், துங்கு இசுமாயில், ஓன் ஜபாரை மாநில நிர்வாக அதிகாரியாகவும்; தனனுடைய தனிச் செயலாளராகவும் நியமித்தார்.[4]
மலாயாவில் சப்பானிய படையெடுப்பின் போது சப்பானியப் படைகள் ஜொகூரை ஆக்கிரமிப்பதற்கு முன்பு, துங்கு இசுமாயில் இங்கிலாந்திற்கு தப்பி ஓடினார். சப்பானிய இராணுவ அரசாங்கம் தன் தந்தையின் இடத்தில் தன்னை அரியணையில் அமர்த்தக்கூடும் என்று அவர் அஞ்சினார்.[5]
Remove ads
மலாயா ஒன்றியம்
போருக்குப் பிறகு துங்கு இசுமாயில் ஜொகூருக்குத் திரும்பினார். மேலும் மலாயா மாநில ஆட்சியாளர்களின் மலாயா ஒன்றியம் திட்டத்திற்கு எதிரான அவரின் நிலைப்பாட்டினால், மலாய் தேசியவாத இயக்கங்களின் எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஜொகூரை தனி ஒரு தன்னாட்சிப் பிரதேசமாக அமைக்க துங்கு இசுமாயில் திட்டம் வகுத்திருந்தார். அதுவே அவரின் தந்தை சுல்தான் இபுராகிம் அவர்களின் விருப்பமும் ஆகும்.
இதற்கிடையில், பல அழுத்தங்களின் காரணமாக, மலாயா ஒன்றிய திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட துங்கு இசுமாயில் சம்மதம் தெரிவித்தார். ஏற்கனவே இவரின் தந்தை சுல்தான் இப்ராகிம் மலாய் அடிமட்ட மக்கள் மற்றும் தேசியவாதத் தலைவர்களிடமிருந்து பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், பிரித்தானிய அரசாங்கத்திற்கும் மலாய் தேசியவாதத் தலைவர்களுக்கும் இடையில் நடுநிலை உறவுகளைப் பேண வேன்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டார்.[6]
அம்னோ மாநாடு
துங்கு இசுமாயிலின் தந்தை சுல்தான் இப்ராகிம் இலண்டனில் வசித்து வந்த காலத்தில், ஜொகூர் மாநில அரச நிர்வாகத்தை துங்கு இசுமாயில்தான் கவனித்துக் கொண்டார். அந்த வகையில், மே 1946-இல் ஜொகூர் இசுதானா பெசார் (Istana Besar) அரண்மனையில் நடைபெற்ற ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (UMNO) முதல் மாநாட்டின் தொடக்க விழாவிற்கு துங்கு இசுமாயில்தான் தலைமை தாங்கினார்.[7]
1940-களின் பிற்பகுதியிலும் 1950-களிலும்; துங்கு இசுமாயில் ஜொகூர் மாநிலத்தின் அரசு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். துங்கு இசுமாயில் தன் தந்தையின் சார்பாக அதிகாரத்துவ விழாக்களில் பங்களித்தார். ஆகத்து 27, 1957-இல், மலேசியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பில் அரச கையொப்பமிடும் அரச விழாவில் ஒன்பது மலாய அரச உறுப்பினர்களில் துங்கு இசுமாயிலும் ஒருவராக இருந்தார். இருப்பினும், ஜொகூரில் அப்போது இருந்த தேசியவாத தலைவர்கள் சிலரிடமிருந்து துங்கு இசுமாயில் சிறிதளவிலான எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார்.[8]
Remove ads
ஜொகூர் சுல்தான்
துங்கு இசுமாயில் தன் தந்தைக்குப் பிறகு ஜொகூர் சுல்தானாக 8 மே 1959 அன்று பதவியேற்றார். அவர் பிப்ரவரி 10, 1960 அன்று இசுதானா பெசார், ஜொகூர் பாருவின் சிம்மாசன அறையில் முடிசூட்டப்பட்டார்.[9][10] சுல்தான் இசுமாயில் தன் குடிமக்களுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஜொகூரில் உள்ள எட்டு மாவட்டங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார். அத்துடன் மாநில அரசாங்கத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை அடிக்கடி சந்தித்து அன்புடன் பழகி வந்தார்.[11]
இயல்பிலேயே சாந்தகுணமும் அமைதியும் கொண்ட ஆட்சியாளரான சுல்தான் இசுமாயில் ஒரு விலங்கு பிரியர் ஆவார்; ஜொகூர் விலங்குக் காட்சிச்சாலையை அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். ஜொகூரில் உள்ள சீன சமூகத்தினரிடையே, "லாவ் சுல்தான்" என்று இவர் அன்பாக அழைக்கப்பட்டார்; அதாவது "வயதான சுல்தான்" என்று பொருள்படும்.[12]
Remove ads
இறப்பு
சுல்தான் இசுமாயில் 1981 மே 10-ஆம் தேதி மாலை 6:12 மணிக்கு ஜொகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் தம் 86-ஆவது வயதில் காலமானார். அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய மூத்த மகன் துங்கு மக்கோத்தா (Tunku Mahkota) துங்கு மகமூத் இசுகந்தர், மே 11, 1981 அன்று அடுத்த ஜொகூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.[13]
மேற்கோள்கள்
நூல்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads