நாஞ்சில் நளினி

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாஞ்சில் நளினி (Nanjil Nalini; 1944-19 சனவரி 2020) [1] என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறையில் நடித்து வருகின்றார்.[2] நளினி தனது 12ஆவது நாடகத்தில் குழந்தை கலைஞராகத் தொடங்கினார். பின்னர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதினை வழங்கியது.[2]

விரைவான உண்மைகள் நாஞ்சில் நளினி, பிறப்பு ...

நளினி 2020 ஜனவரி 19 அன்று தனது 76 வயதில் சென்னையில் இறந்தார்.[1]

Remove ads

பின்னணி

நாஞ்சில் நளினி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் பிறந்தார்.[1] நடிப்பு மீதான ஆரம்ப நாட்டம் காரணமாகத் திருநெல்வேலி நகரத்திற்குச் சென்றார். இங்கு இவர் தனது 12 வயதில் ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார். தனது முதல் நாடகமான “நால்வர்” என்னும் சமூக நாடகத்தில் நான்கு கதாநாயகர்களின் அம்மாவாக நடித்தவர்.[3] பின்னர் இவர் புகழ்பெற்ற தமிழ் நாடகக் கலைஞர்களான தி. க. சண்முகம் (டி.கே.எஸ்), எஸ்.எஸ்.ராஜேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் 'வைர நாடக சபா' போன்ற நாடகக் குழுக்களில் நடித்தார்.[1]

Remove ads

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

நாஞ்சில் நளினியின் நாடகத் திறமை காரணமாகச் சென்னையில் தமிழ் திரைத்துறையில் நடிக்க வழிவகுத்தது. இவர் 1968ஆம் ஆண்டு “அன்று கண்ட முகம்” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இரவிச்சந்திரன் கதாநாயகனான நடித்திருந்தார். 1968 சிவாஜி கணேசன் நடித்த எங்க ஊர் ராஜா திரைப்படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்தார். மேலும், சிவாஜி கணேசன் நடித்த தங்கப் பதக்கம் (1974), அண்ணன் ஒரு கோயில் (1977) மற்றும் தீர்ப்பு (1982) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1970, 1980 மற்றும் 1990களின் சில பிரபல நடிகர்களின் படங்களில் நளினி நடித்தார். கமல்ஹாசனுடன் ஆடு புலி ஆட்டம் (1977), இரசினிகாந்த் நடித்த தர்ம யுத்தம் (1979) மற்றும் சத்யராஜ் நடித்த ரிக்சா மாமா (1992) திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஜக்கம்மா, ராஜ நாகம், கல்யாணமாம் கல்யாணம் (1974), துணையிருப்பாள் மீனாட்சி, அத்தைமடி மெத்தையடி (1989), பூந்தளிர் (1979), ரோஜாவின் ராஜா (1976), சந்திப்பு (1983), அன்னை அபிராமி (1972), உங்களில் ஒருத்தி (1976), அதிர்ஷ்டக்காரன் (1978), வீட்டுக்கு வீடு வாசப்படி (1979), கற்பகம் வந்தாச்சு (1993) என்பன இவர் நடித்துள்ள சில திரைப்படங்களாகும்.[4]

கலைத்துறையில் இவரது பங்களிப்புக்காக 1978இல் இவருக்குக் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் விருது, அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் செல்வி ஜெயலலிதா விருதுகள் போன்ற பிற பிரபலமான தமிழ்த் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.[1]

பிற்காலத்தில், அழகி, வள்ளி, பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள், மந்திரவாசல், சூலம், கிருஷ்ணதாசி, அச்சம் மடம் ஞானம் மற்றும் பிருந்தாவனம் போன்ற பல பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

Remove ads

பிற்கால வாழ்வு

நளினி சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார். இவருக்கு செல்வம் என்ற மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தனது திரைப்பட வாழ்க்கையின் போது, நளினி தனது சொந்த நாடகக் குழுவை தனது மகள் பெயரில் 'ரேவதி ஃபைன் ஆர்ட்ஸ்' என்ற பெயரில் தொடங்கி நடத்தினார். இந்த குழுவில் நளினியின் மகள் நாஞ்சில் ரேவதியும் இருந்தார்.[5] நாஞ்சில் நளினி உடல்நலக்குறைவு காரணமாக 76ஆவது வயதில், 2020 ஜனவரி 19 அன்று சென்னையில் இறந்தார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads