பல்லவர் காலக் கட்டடக்கலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னிந்தியக் கட்டிடக்கலையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து அதன் வளர்ச்சியில் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல்லவர் காலமே எனில் அது மிகையல்ல. இப்பகுதியில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்து வளர்ச்சியடைந்த திராவிடக் கட்டிடக்கலையின் ஆரம்பம் இந்தக் காலமே.
பின்னணி
பல்லவ வம்சத்தினர் தமிழகத்தின் வடபகுதியில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியிலிருந்து வந்தாலும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான 3 நூற்றாண்டுக் காலமே காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு வலுவுள்ள அரசை நிறுவியிருந்தனர். இவர்கள் தமிழர் அல்ல என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படினும், இவர்கள் பூர்வீகம் பற்றியோ, தமிழ் நாட்டுக்கு இவர்கள் வந்து சேர்ந்த விதம் பற்றியோ சரியான தகவல்கள் இல்லை. பல்லவர்கள் காலத்தை முற்காலப் பல்லவர் காலம், இடைக் காலப் பல்லவர் காலம், பிற்காலப் பல்லவர் காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது உண்டு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மகேந்திரவர்மனின் ஆட்சியுடன் பிற்காலப் பல்லவர் காலம் ஆரம்பமானது. பல்லவர்களின் பொற்காலத்தின் ஆரம்பமும் அதுவே.
பிற்காலப் பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் உச்ச நிலையடைந்தன. மகேந்திர பல்லவனுடன் துவங்கிய பிற்காலப் பல்லவ மன்னர் வரிசையிலே, மாமல்லன் எனப்பட்ட முதலாம் நரசிம்மன், இராஜசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மன், நந்திவர்மன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
Remove ads
பல்லவர் கட்டிடக்கலையின் பல்வேறு கட்டங்கள்
பல்லவர் கட்டிடக்கலையை இரண்டு கட்டங்களாகப் பிரிப்பதுண்டு. முதல் கட்டம் சுமார் கி.பி. 610 தொடக்கம் கி.பி. 690 வரையான காலமாகும். இக்கட்டத்தில் அமைக்கப்பட்டவை அனைத்துமே குடைவரை கோயில்கள் ஆகும். இரண்டாம் கட்டமான கி.பி. 690 இலிருந்து கி.பி. 900 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டவை அனைத்தும் கட்டுமானக் (Structural) கட்டிடங்களாகும்.
இவற்றுள் முதல் கட்டத்தில் கட்டப்பட்டவை மகேந்திரன் கட்டிடங்கள், மாமல்லன் கட்டிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவில் தூண்கள் அமைந்த மண்டபங்கள் மட்டுமே அடங்குகின்றன. இரண்டாம் பிரிவில் மண்டபங்களுடன் இரதங்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்களும் அடக்கம்.
இரண்டாம் கட்டமும், நரசிம்மன் கட்டிடங்கள், நந்திவர்மன் கட்டிடங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டிலும் அடங்குபவை கட்டுமானக் கோயில்களாகும்.
Remove ads
தமிழ் நாட்டுக் கட்டிடக்கலை வளர்ச்சியில் பல்லவர்களின் பங்களிப்பு
பழங்காலத்தில் தமிழ் நாட்டில் கட்டிடங்கள் அழியக்கூடிய கட்டிடப்பொருட்களான மரம், சுதை மற்றும் செங்கல்களினால் அமைக்கப்பட்டதாகப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் அசோகப் பேரரசன் காலம் முதலும் பின்னர் ஆந்திரப் பகுதிகளிலும் பயன்பாட்டிலிருந்து வந்த பெரிய பாறைகளைக் குடைந்து குடைவரைகளை அமைக்கும் முறை தமிழ் நாட்டில் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்குப் பல பண்பாட்டு, பொருளாதார மற்றும் தொழில் நுட்பக் காரணிகளை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டளவில் தென் தமிழ் நாட்டில் பாண்டியர்களினால் குடைவரைகள் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கருதப்படினும், தமிழ் நாட்டில், தேவையான சூழலும், வளங்களும், அரசியல் ஆதரவும் அளித்து இதன் வளர்ச்சிக்குப் பெருமளவு ஊக்கம் கொடுத்த பெருமை பல்லவர்களையே சாரும்.
தமிழ் நாட்டுக்கு வடக்கே ஏற்கனவே முகம் காட்டத் தொடங்கியிருந்த திராவிடக் கட்டிடக்கலை என இன்று குறிக்கப்படும் புதிய தென்னிந்தியக் கட்டிடக் கலைப் பாணிக்குத் தமிழ் நாட்டில் உரமளித்து, இந்தியாவின் முக்கியமான கட்டிடக் கலைப் பாணிகளில் ஒன்றாக வளர்வதற்கு அடித்தளமிட்டதும் பல்லவர் காலமேயாகும்.
பல்லவர் கட்டிடக்கலையின் சிறப்பம்சங்கள்
- பல்லவர்களால் கட்டப்பட்ட மாமல்லபுர மரபுக்கோயில்கள், யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ளதை அடுத்து பல்லவர் கட்டிடக்கலை சிறப்பினை அறியலாம்.
முக்கியமான பல்லவர் கட்டிடங்கள்
குடைவரைகள்
பல்லவர்கள் அமைத்த குடைவரைகள் தமிழ் நாட்டில், மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், குரங்கணில் முட்டம், வல்லம், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், விளாப்பாக்கம், அரகண்டநல்லூர், திருக்கழுக்குன்றம், சிங்கப்பெருமாள் கோயில், சிங்கவரம், மேலச்சேரி, சாழுவன் குப்பம், கீழ்மாவிலங்கை, மாமல்லபுரம், ஆவூர், திரைக்கோயில், புதூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
கற்றளிகள் அல்லது ஒற்றைக்கல் கோயில்கள்
பஞ்சபாண்டவர் ரதங்கள் - மாமல்லபுரம்
கட்டுமானக் கோயில்கள்
- கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்
- கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
- வைகுந்தப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
Remove ads
இலங்கை கட்டிடக்கலையில் பல்லவர்களின் தாக்கம்
தம்புள்ளையில் அமைந்துள்ள நாலந்த சிலை மண்டபம் இலங்கை கட்டிடக்கலையில் பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
- திராவிடக் கட்டிடக்கலை
- சோழர் காலக் கட்டிடக்கலை
- பாண்டியர் காலக் கட்டிடக்கலை
- விஜயநகரக் கட்டிடக்கலை
- நாயக்கர் காலக் கட்டிடக்கலை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads