சோழர் காலக் கட்டிடக்கலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோழர் காலக் கட்டிடக்கலை என்பது பல்லவர் காலக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாக, சோழர் தமிழ் நாட்டில் வலிமை பெற்றிருந்த கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பன்னிரண்டான் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆரம்ப காலம்
சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் அவை அளவிலும் சிறியவையாக உள்ளன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், கண்ணனூர், கலியபட்டி, திருப்பூர், பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.
இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முழுமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
Remove ads
மத்திய காலம்
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இராஜராஜ சோழன் பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் இந்தியாவில் கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில்.
இதைத் தொடர்ந்து பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராசேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டதே கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கோயில். இதன் விமானம் 150 அடி உயரமுள்ளது. தான் பெற்ற போர் வெற்றிகளுக்கான சின்னமாகத் தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டது இக் கோயில். கம்பீரமும்,பொலிவும் கொண்ட தஞ்சைக் கோயிலுடன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை ஒப்பிடமுடியாதெனினும், இங்கே அமைந்துள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சோழப்பேரரசின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
Remove ads
பிற்காலம்
சோழர்கள் கி.பி. 1279 வரை தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்தபோதும், கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பின்னர் முன் குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டிடங்களுடனும் ஒப்பிடக்கூடிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலும், தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலும், கம்பகரேஸ்வரர் கோயிலும் பிற்காலச் சோழர்காலக் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads