மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
இந்தியாவின், தமிழகத்தில், மதுரை நகரில் உள்ள, 'உலகப் பிரசித்திப் பெற்ற சிவாலயம்' From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். அதோடு திருவாசகத் தலங்களுள் ஒன்று எனும் பெருமையையும் உடையது. இத்தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். பாண்டியர்கள் முடிசூட்டிக் கொள்ளும் தலங்களுள் இது முதன்மைத் தலமாகும். சைவர்கள் பூசும் திருநீற்றின் சிறப்பைக் கூறும் திருநீற்றுப் பதிகத்தை இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் பாடினார்.
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான நான்காவது தலமாகத் திருவாலவாய் உள்ளது.[2] இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தினைச் சிவன் முக்திபுரம் என்றும் இராசமாதங்கி சியாமள பீடம் என்றும் அழைக்கின்றனர்.[2] இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.[2] இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.[2]

Remove ads
தல வரலாறு
விருத்திராசூரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த இந்தச் சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோசத்தைப் போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
சாத்தப்பர் இத்தலத்தில் சிவபெருமான் அன்றைய மதுரையின் மன்னரான மலைத்துவச பாண்டியனிடம் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதால் அதாவது பிரம்பால் சிவபெருமானை சாத்தியதால் இத்தல இறைவனுக்கு சாத்தப்பர் என்ற திருப்பெயரும் உள்ளது.
Remove ads
சன்னிதிகள்
மூலவர்
இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், 'இந்திர விமானம்' என்று அழைக்கப்படுகிறது.[2]
அம்பாள் சன்னிதி
இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார்.[3] இவரது விக்கிரகம், பச்சை மரகதக் கல்லால் ஆனது.[3] அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.[2] இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள்.[3] மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது.[2] பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.[2]
இவருக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன.[3] மீனாட்சியை, அங்கயற்கண்ணி எனத் தமிழில் அழைக்கின்றனர். இவரைத் 'தடாதகைப் பிராட்டி' என்றும் அழைப்பதுண்டு. இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.[3] இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிசேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.[2]
இதர சன்னிதிகள்
முக்குறுணி விநாயகர், இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காசி விசுவநாதர், லிங்கோத்பவர், சகஸ்ரலிங்கம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சந்திரசேகர், சண்டிகேசுவரர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேசுவரர், சித்தர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், உஷா பிரதியுஷா சமேத சூரியனார், விபூதி விநாயகர், 63 நாயன்மார்கள், சப்தரிஷி மாதாக்கள், பைரவர், மதுரை வீரன், நவக்கிரகங்கள், சங்கப் புலவர்கள், மனைவியர் சமேத மன்னர் திருமலை நாயக்கர் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகள் ஆகும்.
Remove ads
கோயிலின் அமைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுள் இராச கோபுரம் (கிழக்குக் கோபுரம்) பொ.ஊ. 1216 முதல் 1238 ஆண்டு பிற்கால பாண்டியர்களாலும், மேற்குக் கோபுரம் பொ.ஊ. 1323 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியனாலும், தெற்குக் கோபுரம் பொ.ஊ. 1559 ஆம் ஆண்டில் மன்னர் விசுவநாத நாயக்கராலும், வடக்குக் கோபுரம் பொ.ஊ. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் பொ.ஊ. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், பொ.ஊ. 1570-ல் கட்டப் பெற்று, பொ.ஊ. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், பொ.ஊ. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.


கலையழகு மிக்க மண்டபங்கள்
கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு, அழகிய நுணுக்கங்களைக் கொண்டும், தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன.
- அஷ்ட சக்தி மண்டபம்,
- மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
- முதலி மண்டபம்,
- ஊஞ்சல் மண்டபம்,
- கம்பத்தடி மண்டபம்,
- கிளிக்கூட்டு மண்டபம்,
- மங்கையர்க்கரசி மண்டபம்,
- சேர்வைக்காரர் மண்டபம்,
- திருக்கல்யாண மண்டபம்,
- ஆயிரங்கால் மண்டபம்
- வீரவசந்தராயர் மண்டபம்
அஷ்ட சக்தி மண்டபம்

மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்ட சக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் திருமேனிகளுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், சக்தியின் எட்டு வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.
கம்பத்தடி மண்டபம்
கம்பத்தடி மண்டபம், முதலில் நாயக்க மன்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரால் (பொ.ஊ. 1564–1572) கட்டப்பட்டு, பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் முழுமையாக திருத்தி புதிதாக 1870களில் தற்போதைய மண்டபம் கட்டப்பெற்றது.[4] கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் 25 வடிவங்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும். இதன் நடுவே உள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விசயநகர காலப் பணியாகும்.
அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.
ஆயிரங்கால் மண்டபம்



ஆயிரங்கால் மண்டபம், இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மண்டபம், கோயிலில் உள்ள பிற மண்டபங்களை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருட்டிண வீரப்ப நாயக்கரது திருப்பணியாகும்.[5][6]
மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், சாலிவாகன ஆண்டு, பொ.ஊ. 1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய, நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.
வீரவசந்தராயர் மண்டபம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இம்மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இம்மண்டபம் பூசைப் பொருட்கள், மரம், உலோகம் மற்றும் நெகிழி பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்டது. இம்மண்டபத்தின் நடுவில், சுவாமியை நோக்கியவாறு நந்தி சிலை உள்ளது.
2 பிப்ரவரி 2018 (வெள்ளிக்கிழமை) அன்று இரவில் கோயில் கதவுகள் பூட்டியப் பின்னர், மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெருந் தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 40 கடைகள் முற்றிலும் தீயில் அழிந்ததுடன், தீயின் கடும் வெப்பத்தின் காரணமாக, வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும் பலத்த சேதமுற்று இடிந்து விழுந்தது.[7] [8] தற்போது இம்மண்டபத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[9]
Remove ads
புதுமண்டபம்
கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே, 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது.
இசைத் தூண்கள்
மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில், கல்லில் இசை வெளியிடும் ஐந்து இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் இரண்டு இசைத் தூண்கள் ஆக மொத்தம் ஏழு இசைத் தூண்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளன.
சிறப்பு விழாக்கள்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்குவிசயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சிறப்புகள்
- சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
- சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
- இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராசகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
- ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
- பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
- மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பாடல்கள்
திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியவர்களின் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புகள் மாணிக்கவாசகர் தம் திருவாசகத்துள் புகழந்தோதியுள்ளார்.
குமரகுருபரர் இத்தலத்துப் பெருமாட்டி மீனாட்சியம்மை மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
Remove ads
கல்வெட்டுக்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
