முதலாம் பராந்தக சோழன்

சோழ மன்னர் From Wikipedia, the free encyclopedia

முதலாம் பராந்தக சோழன்
Remove ads

மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-953) முதலாம் ஆதித்த சோழனின் மகனாவான். இவனுடைய இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து பொ.ஊ. 575 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பாண்டிய அரசு, இவன் காலத்தில் பொ.ஊ. 915 ஆம் ஆண்டில் முறியடிக்கப்பட்டது. அச்சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் ஆவான்.பல ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில், இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் (பொ.ஊ. 913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான். முடிவில் பராந்தகன் மதுரையைக் கைப்பற்றினான். போரின் முடிவில் பாண்டிய மன்னன் இலங்கைக்கு தப்பி ஓடினான். பாண்டியனின் அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாகும். தன் தந்தை கட்டத்தவறிய பல கோயில்களை இவன் முயன்று கட்டினான்.

விரைவான உண்மைகள் முதலாம் பராந்தக சோழன், சோழப் பேரரசு ...

தஞ்சையையும், உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழ் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த வந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

முதலாம் ஆதித்தனுக்குப் பிறகு இவன் மகன், முதலாம் பராந்தகன் என்ற அபிசேகப் பெயருடன் அரியணையில் அமர்ந்த, சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதினை இவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரி வரையிலான பகுதியும், மேற்குக் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும், சேரமன்னன், நெருங்கிய நண்பராகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழர் - பாண்டியனிடம் நடந்த போரினை மூன்று கட்டங்களாக அறியலாம். முதல் கட்டத்தில், பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள், சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

Remove ads

ஈழப்போர்

தான் புதிதாக வெற்றி பெற்ற பகுதிகளில், தன்னுடைய அதிகாரத்தை ஏற்கச் செய்யும் செய்யும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று பராந்தகன் எண்ணினான். தன் வெற்றியை, மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் பாண்டிய மன்னன் இராசசிம்மனால், ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனவே பராந்தகன், நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 945 – 53) இவற்றை, ஈழ மன்னனிடமிருந்து திரும்பிப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் இறுதி ஆண்டுகளுடன் தொடர்புடையதாகவே இருக்க வேண்டும். மறக்கமுடியாமல் இருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது வலிமைமிக்க, வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் வென்றெடுக்கப்பட்டது. அதாவது ஈழமன்னனும், பாண்டியனும் பழிவாங்கப்பட்டனர்.

Remove ads

பராந்தகனின் நண்பர்கள்

கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் குடும்பத்தை சார்ந்த பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம்

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆட்சி ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அது முதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான். தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில், இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான். ஆனால் இம்முயற்சியில், இவனது குறிக்கோள் நிறைவேறாததை முன்னர் பார்த்தோம். ஏனைய போர்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன், கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது. பராந்தகன் ஆட்சிக் காலத்தில் சோழநாடு, வடக்கே நெல்லூர் வரை விரிவடைந்திருந்திருந்தது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன், மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். தக்கோலத்தில் நடைபெற்ற போரில், பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்த சோழன் உயிரழந்தான். இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இது முதல், முதலாம் இராஜராஜன் பொ.ஊ. 985 ஆம் ஆண்டில் அரியணையில் அமர்ந்தது வரையிலான, முப்பது ஆண்டுகள் வரையில், சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர் மற்றும் பிரதிவிபதியின் மரணம்

சுமார் பொ.ஊ. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும், அவன் ஆளுகைக்கு உட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பிரிதிவீபதியின் தாயாதியான இரண்டாம் பூதுகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும், வைதும்பர்களும், ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் [2]. இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவொற்றியூர் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads