விநாயகமூர்த்தி முரளிதரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விநாயகமூர்த்தி முரளிதரன் (பிறப்பு: 22 சூன் 1966, பிரபலமாக கேணல் கருணா அம்மான் என்றும் அறியப்படுகிறார்) முன்னாள் போராளியும், இலங்கை துணை-இராணுவக்குழு முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஆவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய முரளிதரன், மார்ச் 2004 இல் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார். இலங்கை அரசின் ஆதரவாளராக செயல்படத் தொடங்கினார்.
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் அரசியலில் நுழைந்த முரளிதரன் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.[1] அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.[2] மார்ச் 9 2009 ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.
இவர் 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னதாக இவர் 2008 அக்டோபர் 7 முதல் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
ஈழப்போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகக் கருதப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய இராச்சியம் 2025 மார்ச் 24 அன்று பிரித்தானியாவுக்கான பயணத் தடைகள், சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட தடைகளை அறிவித்தது.[3]
Remove ads
வாழ்க்கை வரலாறு
கிழக்கிலங்கை மட்டக்களப்பு கிரானில் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்து கொண்டார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவராகிய வே. பிரபாகரனால் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவு
தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தரப்படவில்லை என்றும், கிழக்குப் போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் என்றும் புலிகளின் "வடக்கு மைய தலைமையை" குற்றம்சாட்டி கேணல் கருணா தலைமையில் புலிகளின் பல கிழக்குப் போராளிகளும் தலைவர்களும் ஏப்ரல் 2004 பிளவுபட்டார்கள்.[4]. கேணல் கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு அரசியல் இராணுவ ரீதியில் புலிகளுக்கு பின்னடைவையும், ஒரு புதிய எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவித்தது.
இவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு ரீதியில் செயல்பட்டனர்.
Remove ads
மனித உரிமை மீறல்கள்
கருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களைப் பெரும்பாலும் பதின்ம வயதினரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்ப்பது அவதானிக்கப்பட்டது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால் இலங்கை இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதரவளித்து வந்தனர்.[சான்று தேவை]
லண்டனில் கைது
கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை[5] அடுத்து, இலங்கை அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு இரகசியமாக லண்டனுக்கு சென்ற கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு காவற்துறையினரால் நவம்பர் 2, 2007 இல் கைது செய்யப்பட்டார்.[6]
இலங்கையில் மீண்டும் கருணா
வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த வழக்கில் கருணாவுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் கருணா குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.[7][8]
பிரித்தானியாவின் தடை
ஈழப்போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக கருதப்பட்ட இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரியா, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய நால்வருக்கும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது. பிரித்தானியாவுக்கான பயணத் தடைகள், சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற பல்வேறு மீறல்களுக்குப் பொறுப்பான நபர்களை குறிவைக்கின்றன என்று இங்கிலாந்தின் வெளியுறவு, பொதுநலவாய, மேம்பாட்டு அலுவலகம் 2025 மார்ச் 24 அன்று தனது அறிக்கையில் தெரிவித்தது.[3][9] பிரித்தானிய அரசு தெரிவித்த தடைக்கான காரணங்கள்:
“ | கர்ணல் கருணா அம்மான் என்றும் அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் விதிமுறைகள் 2020 இன் அர்த்தத்தில் ஒரு சம்பந்தப்பட்ட நபர், ஒரு தனிநபரின் வாழ்க்கை உரிமை மற்றும் சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடவடிக்கை அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் இருக்க வேண்டிய உரிமையை கடுமையாக மீறுதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்த ஒரு செயலுக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார், தொடர்ந்து பொறுப்பேற்கிறார். குறிப்பாக, விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்டளையின் கீழ், விடுதலைப் புலிகள் படைகளும், விடுதலைப் புலிகள் 'கருணா குழு'வில் இருந்து பிரிந்து சென்ற அரசாங்க சார்புப் பிரிவினரும், இலங்கையின் 26 ஆண்டுகால ஆயுத மோதலின் போது, சட்டவிரோதக் கொலைகள், சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடவடிக்கைகள் அல்லது தண்டனையில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.[10] | ” |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads