வைத்திலிங்கம் துரைசுவாமி
இலங்கை அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (Sir Waithilingham Duraiswamy, சூன் 8, 1874 - ஏப்ரல் 12, 1966) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியிலிருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
வைத்திலிங்கம் துரைசுவாமி யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் தமிழ், சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலியார் குடியில் பிறந்தவர். தந்தை ஐயாம்பிள்ளை வைத்திலிங்கம் திருவிதாங்கூர் அரசில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். துரைசுவாமியுடன் கூடப் பிறந்தவர்கள் பொன்னுத்துரை, பொன்னம்மா, விஜயரத்தினம், இரத்தினகோபால், இராஜகோபால் ஆகியோர். கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன் பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். முதலியார் சிற்றம்பலம் சதாசிவம் என்பவரின் மகள் இராசம்மா என்பவரை 1905 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மகேசுவரி, நடேசுவரி, மகேந்திரா, இராஜேந்திரா, புவனேசுவரி, பரமேஸ்வரி, யோகேந்திரா, தேவேந்திரா என எட்டுப் பிள்ளைகள். இவர்களில் யோகேந்திரா துரைசுவாமி இலங்கைத் தூதுவராகப் பல உலக நாடுகளில் பணியாற்றியவர்[1].
Remove ads
அரசியலில்
சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1921 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இடம்பெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஆறுமுகம் கனகரத்தினத்தை அதிகப்படியான வாக்குகளால் வென்று முழு வட மாகாணத்திற்கும் பிரதிநிதியானார்.[2] இதனால் வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத்தின் வலிகாமம் மேற்கு-தீவுப்பற்றுப் பகுதியிலிருந்து போட்டியின்றித் தெரிவானார்.[2]
இலங்கைக்குக் கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆநிலப்பதம் எனப்படும் டொமினியன் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைச் சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு நடத்தினார். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை.[2][3]
1934 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கென இடம்பெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார். பதிலாக யாழ்ப்பாணத்திலிருந்து அருணாசலம் மகாதேவா, சுப்பையா நடேசன், நெவின்ஸ் செல்வதுரை, ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[3].
1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசாங்க சபைத் தேர்தலில் துரைசுவாமி ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் இருந்து போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.[4]
Remove ads
சபை முதல்வராகத் தெரிவு

1936 ஆண்டில் இரண்டாவது அரசாங்க சபைக்கான சபை முதல்வர் தேர்வுக்குப் பிரான்சிசு டி சொய்சா, சி. பந்துவந்துடாவை, வைத்திலிங்கம் துரைசுவாமி ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. துரைசுவாமியை எம். ஜெ. கேரி பிரேரிக்க, என். எம். பெரேரா முன்மொழிந்தார்.[5] வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சொய்சா 17 வாக்குகளும், பந்துவந்துடாவை 14 வாக்குகளும், துரைசுவாமி 27 வாக்குகளும் பெற்றனர். இந்நிலைமை அரசியலமைப்பின் 5 (6A) பிரிவின் கீழ் அமையாததனால் குறைந்த வாக்குகள் பெற்றவரின் பெயரை நீக்கி விட்டு ஏனைய இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சில்வாவிற்கு 29 வாக்குகளும் துரைசுவாமிக்கு 29 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அபயகுணசேகர துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததனால், துரைசுவாமி சபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3][5]
சேர் பட்டம்
துரைசுவாமி அரசாங்க சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராகத் துரைசுவாமி தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து சென்றார். அவ்வைபவத்தில் துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.
சமூகப் பணி
துரைசுவாமி சைவவிருத்திச் சங்கத்திலும், சைவபரிபாலன சபையிலும் தலைவராய் இருந்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரி முதலாம் கலாசாலைகளின் பொது முகாமையாளராகவும் இருந்து சேவை புரிந்துள்ளார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் சபைத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.[2] யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.[2]
பெரியோர் கருத்து
துரைசுவாமிக்கு யாழ்ப்பாணத்து யோகசுவாமிகளின் அருளும் இருந்துள்ளது. "சுவாமிகள் எனக்கு அடித்து அப்பம் தீற்றிய அற்புதத்தை என்னென்பேன்" என்று துரைசுவாமி அடிக்கடி கூறுவார்[3].
“ | சிவமணங்கமழுது சேர். துரைசுவாமிக்கு, அவர் மனம் உருகுது அன்பு மிகப் பெருகுது; தன்னைத் தன்னால் அறியும் தவமும் வாய்ச்சுப் போச்சுது; தன்னைப்போற் பிறரையும் நேசிக்கலாச்சுது. உற்றர் பிறந்தார் ஊரார் ஒப்பிடலாச்சுது. உண்மை முழுதுமென்னும் உறுதியும் வாய்ச்சுப் போச்சுது." - யோகசுவாமி[3] |
” |
“ | சேர். துரைசுவாமி ஆர் நிகருனக்குப் பார் சிவம் எங்கும்! ஆர் பகை? ஆர் நட்பு? செய்வது பூசை நினைப்பது மந்திரம், உய்ந்தாய், உய்ந்தாய். பலபடச் சொல்வதில் பலன் ஒன்றுமில்லை." - யோகசுவாமி[3] |
” |
“ | சேர் துரைச் சாமி சிவயோகர் மாசீடர் பார்புரக்கு மன்றப் பழந்தலைவர் - நேர்மைமிகு சைவத் தமிழர் சனநா யகமுதல்வர் உய்வைப் புகழும் உலகு." - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை[3] |
” |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads