இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
From Wikipedia, the free encyclopedia
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (Archaeological Survey of India), எனப்படும் அமைப்பு இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பாகும். பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கிழ் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காத்தல் என இரு முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டது.[1]
இந்தியாவின் தொன்மையைப் பறைசாற்றும் எல்லாவகையான சின்னங்கள், கட்டிடங்கள், இடங்கள், பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இதன் தலையாய பணிகளாகும். இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு விதி 1958இன் கீழும், இந்திய தொல்பொருள் மற்றும் களைக்களஞ்சிய பாதுகாப்பு விதி 1972இன் கீழும் இந்திய நாட்டின் அனைத்து தொல்பொருள் ஆராய்ச்சிகளும் இவ்வமைப்பினால் முறைப்படுத்தப்படுகிறது.[2]
இவ்வமைப்பு இப்பணியை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது. இதன் கீழ் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும், கட்டிடக்கலை வல்லுனர்களும், அறிவியலாளர்களும் மற்றும் இதன் கீழ் இயங்கி வருகின்ற அருங்காட்சியகங்கள், வட்டங்கள், கற்கால ஆராய்ச்சித் துறை, கல்வெட்டாராய்ச்சித் துறை, விஞ்ஞானத்துறை மற்றும் கட்டிட ஆய்வுத்திட்டப்பணி, வழிபாட்டுத்தல ஆய்வுத்திட்டப்பணி ஆகியவற்றின் வழியாக பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
நொய்டாவில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் இயங்குகிறது.