From Wikipedia, the free encyclopedia
சியுசு என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் ரோமப் பழங்கதைகளில் வரும் யூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் இருக்கும் சியுசு அனைத்து கிரேக்கக் கடவுள்களுக்கும் அரசர் ஆவார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைடன்களின் கடைசி மகன் ஆவார். இவருக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் எரா முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சியுசு பல பெண்கள் மேல் மோகம் கொண்டு அவர்களுடன் பலவிதங்களில் உறவாடினார். அதன் மூலம் அவருக்குப் புகழ்பெற்ற பல கடவுள்கள் மற்றும் வீரர்கள் பிறந்தனர். சியுசு பெரும்பாலும் நின்ற கோலத்தில் உயர்த்திய வலது கையில் இடி ஆயுதத்தை தாங்கியவாறும் அல்லது சிம்மாசனத்தில் அமர்ந்தவாறும் வர்ணிக்கப்படுகிறார்.
சியுசு | |
---|---|
சியுசு | |
இடம் | ஒலிம்பசு மலைச்சிகரம் |
துணை | எரா மற்றும் பலர் |
பெற்றோர்கள் | குரோனசு மற்றும் காயா |
சகோதரன்/சகோதரி | எசுடியா, ஏடிசு, எரா, பொசைடன், டிமிடர் |
குழந்தைகள் | ஏசசு, ஏரெசு, ஏதெனா, அப்பல்லோ, ஆர்ட்டெமிசு, அப்ரோடிட், டார்டானசு, டயோனிசசு, எய்லெய்தியா, என்யோ, எரிசு, எபே, எர்மெசு, எராகில்சு, டிராயின் எலன், எப்பெசுடசு, பெர்சியுசு, மினாசு, மூசுகள், ஓரேக்கள், மொய்ரய்கள், கிரேசுகள் |
தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த குரோனசு அதேபோன்று தனக்கும் நேரும் என்று தன் பெற்றோர் மூலம் அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த எரா, இசுடியா, டிமிடர், பொசைடன் மற்றும் ஏடிசு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சியுசை கையா காப்பாற்ற நினைத்தார். அதற்காக கையா ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி ரேயா ஒரு கல்லில் துணியைச் சுற்றி குழந்தை என்று கூறி குரோனசை ஏமாற்றிவிடுகிறார். பிறகு க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் சியுசை மறைத்து வைத்துவிட்டுச் சென்றார் ரேயா. அதன் பிறகு சியுசை கயா வளர்த்ததாகக் கூறப்படுகிறது.
சியுசு ஆடவனாக வளர்ந்ததும் தன் தந்தை குரோனசின் வயிற்றை கிழித்து தன் சகோதரர்களை விடுவித்தார். சில கதைகளில் ஓசனசின் மகள் மெட்டிசு குரோனசிற்கு மருந்து கலந்த பானத்தை கொடுத்ததாகவும் அதனால் அவருக்கு வாந்தி ஏற்பட்டு அதன் மூலம் சியுசின் சகோதரர்கள் விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு சியுசு பாதாள உலகமான டார்டரசுக்குச் சென்றார். அங்கு காவலன் கேம்பேயை கொன்று, கையாவின் அசுர பிள்ளைகளான கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகள் ஆகியோரை விடுவித்தார்.
இதற்கு பரிசாக சைக்ளோப்சுகள் இடி ஆயுதத்தை சியுசிற்கு வழங்கினர். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் கையாவின் அசுர பிள்ளைகளின் உதவியுடன் குரோனசையும் மற்ற டைட்டன்களையும் வீழ்த்தினார். இவர்களிடையே நடந்த போர் டைடனோமாச்சி என அழைக்கப்படுகிறது. பிறகு தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசில் அடைக்கப்பட்டனர். ஆனால் சியுசிற்கு ஆதரவளித்த ஓசனசு, ஈலியோசு, அட்லசு, ப்ரோமித்தியுசு, எபிமித்தியூசு மற்றும் மினொயித்தியசு ஆகிய டைட்டன்கள் மட்டும் அடைக்கப்படவில்லை.
போருக்குப் பிறகு சியுசு தன் சகோதரர்களுடன் உலகை பகிர்ந்து கொண்டார். அதன்படி வானம் சியுசுக்கும், கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஏடிசுக்கும் கிடைத்தது.
தம் டைட்டன் பிள்ளைகளை பாதாளத்தில் அடைத்ததால் கோபம் கொண்ட கையா, தம் அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவை அனுப்பினார். அவர்கள் சியுசுடன் போரிட்டனர். இறுதியில் டைஃபோனை வீழ்த்திய சியுசு அவரை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகள் மீது இரக்கம் கொண்ட சியுசு அவர்களை உயிருடன் விட்டுவிட்டார்.
சியுசு தன் சகோதரி எராவின் மேல் காதல் கொண்டார். முதலில் எரா சியுசின் காதலை ஏற்க மறுக்கிறார். பிறகு சியுசு தன்னை ஒரு சிறிய குயிலாக உருமாற்றிக்கொண்டு தன் உடல் குளிரால் நடுங்குவது போல் பாசாங்கு செய்தார். அதன் மீது இரக்கம் கொண்ட எரா, அதற்கு சூடு உண்டாவதற்காக தம் உடைகளைக் களைந்து அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார். அப்போது சியுசு தன் உண்மையான உருவிற்கு மாறினார். இதனால் வெட்கப்படும் எரா சியுசுடன் உறவாடினார். பிறகு அவரை மணந்துகொண்டார்.
சியுசு பல பெண்கள் மேல் காமம் கொண்டு அவர்களுடன் உறவாடினார். அந்தப் பெண்களின் மீது பொறாமை கொண்ட எரா அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பலவிதங்களில் சபிக்கிறார். மேலும் சியுசை எப்போதுமே கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருந்தார் எரா. இதனால் சியுசு எராவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல உருவங்கள் எடுத்து பல பெண்களுடன் உறவாடினார்.
பன்னிரு டைட்டன்களில் ஒருவரான கோயசு மற்றும் ஃபோபே ஆகியோரின் மகள் லெடோ. அவள் அழகில் மயங்கிய சியுசு அவளுடன் உறவாடினான். லெடோ மூலம் அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு ஆகிய இரட்டை குழந்தைகளின் தந்தையானார் சியுசு. இவர்கள் பிற்காலத்தில் கதிரவன் மற்றும் நிலா கடவுள்களாயினர்.
அரசன் தெசிதியுசின் மகள் லெடா. அவள் மீது காமம் கொண்ட சியுசு அன்னம் உருவில் வந்து அவளுடன் உறவாடினார். லெடா மூலம் எலன், கிளைடெம்னெசுட்ரா, கேசுடர், போலக்சு ஆகிய குழந்தைகளின் தந்தையானார் சியுசு. பிற்காலத்தில் சியுசு காசுடர் மற்றும் போலக்சு ஆகிய இருவரையும் சேர்த்து வானத்தில் மிதுனம் என்னும் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
அரசன் ஆக்ரீசியசின் மகள் தானே. அவள் மீது காமம் கொண்டார் சியுசு. அவள் சிறையில் இருந்ததால் அவள் மீது தங்க மழையாக பொழிந்து சியுசு உறவாடினார். அதன் மூலம் தானேவிற்கு மாவீரன் பெர்சியுசு பிறந்தான். இவன் பிற்காலத்தில் கார்கன் சகோதரிகளுள் ஒருவரான மெடுசாவின் தலையைக் கொய்தான்.
எலக்ட்ரியோனின் மகள் அல்கிமி மேல் காமம் கொண்ட சியுசு அவள் கணவனான அம்ஃபிட்ரியோனின் உருவத்தில் வந்து அவளுடன் உறவாடினார். அதன் மூலம் மாவீரன் எராகில்சு பிறந்தான். இவன் பின்னாளில் பல சாகசங்கள் புரிந்தான்.
லைகாவோனின் மகள் காலிசுடோ. அவள் மீது காமம் கொண்ட சியுசு எராவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக சந்திர கடவுள் ஆர்டமீசின் உருவெடுத்தார். பிறகு காலிசுடோ குளித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த சியுசு தன் உண்மையான உருவிற்கு மாறி அவருடன் உறவாடினார். அதன் மூலம் ஆர்கசு என்பவன் பிறந்தான். பிறகு நடந்த உண்மைகளை அறிந்த எரா காலிசுடோவை கரடியாக மாறும்படி சாபமிடுகிறார். இறுதியாக சியுசு காலிசுடோ மற்றும் ஆர்கசை வானத்தில் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
ஏக்னோர் என்னும் அரசனின் மகள் யூரோப்பா. அவள் மீது காமம் கொண்ட சியுசு வெள்ளைக் காளையாக மாறி அவளை சுமந்துக் கொண்டு கிரீட் தீவிற்கு சென்றார். பிறகு தன் உண்மையான உருவிற்கு மாறி யூரோப்பாவுடன் உறவாடினார். அதன் மூலம் மினோசு, ரடமந்தைசு மற்றும் சர்பெடான் ஆகியோர் பிறந்தனர். இவர்கள் மூவரும் பிற்காலத்தில் இறப்பின் நீதிபதிகளாயினர்.
சிறு கடவுள் எக்கோவுடன் சியுசு உறவாடிக்கொண்டிருந்தார். அதையறிந்த எரா சியுசை திரும்பி வருமாறு அழைத்தார். ஆனால் எக்கோ சியுசை செல்லவிடாமல் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கோபப்படும் எரா எக்கோவை மற்றவர்கள் கூறும் இறுதிச்சொற்களை மீண்டும் எதிரொலிக்குமாறு சாபம் வழங்கினார்.
டிரோசு மற்றும் கெல்லிர்வோயேவின் மகன் கானிமிடெ. அவன் மிகவும் அழகாக இருந்ததால் அவன்மீது காமம் கொண்ட சியுசு கழுகு உருவம் கொண்டு ஒலிம்பிய மலைக்கு கடத்திச் சென்று அவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். பிறகு அவனுக்கு சாகா வரம் மற்றும் என்றும் இளமையாக இருக்கும் வரத்தை சியுசு அருளினார். பிறகு அவனை வானத்தில் கும்பம் என்னும் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
நியாபகத்தின் டைட்டன் கடவுளான நெமோசனுடன் சியுசு ஒன்பது இரவுகள் உறவாடினார். அதன்மூலம் ஒன்பது மூசுகள் பிறந்தனர்.
சியுசு ரோமக் கடவுளான யூபிடர், எகிப்திய கடவுள் அம்மோன், இந்துக் கடவுள் தேவேந்திரன் ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறார். மேலும் கிறித்தவ புனித நூலான விவிலியத்தில் வரும் பார்னபாசு என்பவர் சியுசுடன் ஒப்பிடப்படுகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.