From Wikipedia, the free encyclopedia
2022 இலங்கைப் போராட்டங்கள் (2022 Sri Lankan protests) 2022 மார்ச் மாதத்தில், இலங்கையில் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களாகத் தொடங்கப்பட்டன. இலங்கையின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததற்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது, இது அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான பணவீக்கம், நாள்தோறும் மின்தடை, மற்றும் எரிபொருள், உள்நாட்டு எரிவாயு, பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. ராசபக்ச குடும்பத்தின் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாகும்.[6][7] பல எதிர்க்கட்சிகளின் ஈடுபாடு இருந்தபோதிலும், பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தங்களை அரசியலற்றவர்கள் என்று கருதுகின்றனர், மேலும் சிலர் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் மீது தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.[8] போராட்டங்களின் போது, எதிர்ப்பாளர்கள் "கோட்டா வீட்டுக்குப் போ", "ராசபக்ச வீட்டுக்குப் போ" போன்ற எதிர்ப்புகளை எழுப்பினர்.[9][10] போராட்டங்கள் முக்கியமாக பொது மக்களால் நடத்தப்பட்டது,[11][12] குறிப்பாக, இளைஞர்கள் காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி முக்கிய பங்கு வகித்தனர்.[13][14][15][16]
2022 இலங்கைப் போராட்டங்கள் | |||
---|---|---|---|
ஜனாதிபதி செயலகம் முன்பாக போராடும் எதிர்ப்பாளர்கள் | |||
தேதி | 2022 மார்ச் 16 முதல் | ||
அமைவிடம் | இலங்கை, இலங்கையர்கள் பெரும்பாலும் வாழும் அவுஸ்திரேலியா நியூசிலாந்து பிரான்ஸ் ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா | ||
காரணம் |
| ||
இலக்குகள் | அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக | ||
முறைகள் | அரசியல் ஆர்ப்பாட்டம், இணைய செயல்பாடு | ||
நிலை | சமகாலத்தில்
| ||
தரப்புகள் | |||
| |||
வழிநடத்தியோர் | |||
மக்கள் சுயமாக
| |||
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |||
|
போராட்டக்காரர்கள் ராசபக்ச குடும்ப உறுப்பினர்களையும், அரசு-சார்பு அரசியல்வாதிகளையும் இலக்கு வைத்துள்ளனர். அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தல், பொதுமக்களைக் கைது செய்ய இராணுவத்தை அனுமதித்தல், ஊரடங்குச் சட்டங்களை விதித்தல், சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள ஆர்வலர்களைத் தாக்குதல் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் எதிர்வினையாற்றியது. எதிர்ப்புகளை ஒடுக்க முயற்சித்ததன் மூலம் அரசாங்கம் சட்டம் மற்றும் அரசியலமைப்பையும் மீறியது.[17][18][19] புலம்பெயர்ந்த இலங்கையரும் இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகத் தத்தமது நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.[20][21] அமெரிக்கா, செருமனி, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் டுவிட்டரில் #GoHomeRajapaksas, #GoHomeGota உள்ளிட்ட குறியட்டைகள் பரவலாகப் பிரபலமானதை அடுத்து, தடைகள் நீக்கப்பட்டன. இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தது.[22][23]
2022 ஏப்ரல் 3 அன்று, பிரதமர் மகிந்த ராசபக்சவைத் தவிர, கோட்டாபய அமைச்சரவையில் இருந்த 26 உறுப்பினர்களும், பதவி விலகினர்.[24][25][26] "பதவி விலகிய" பல அமைச்சர்கள் அடுத்த நாள் வெவ்வேறு அமைச்சுககளில் மீண்டும் பதவியேற்றனர்.[27] எந்த சூழ்நிலையிலும் கோட்டாபய ராஜபக்ச சனாதிபதி பதவியில் இருந்து விலக மாட்டார் என அரசாங்கத்தின் தலைமைக் கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.[28] எனினும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள், அவர்களது நெருங்கிய கூட்டாளிகள் உட்பட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை நீக்குதல், அதிக தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை நியமித்தல், மற்றும் பலதரப்பு ஈடுபாடு, கடன் நீடிப்பு குறித்த ஆலோசனைக் குழுவை உருவாக்குதல் போன்றவற்றை இந்த எதிர்ப்புப் போராட்டங்களால் பெற முடிந்தது.[29]
2022 மே 9 இல், பிரதமர் மகிந்த ராசபக்ச தனது பதவியில் இருந்து விலகினார்.[30] அமைதியான போராட்டங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டு பதவி விலகியதாக மகிந்த கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.[31] 2022 சூன் 9 அன்று, பசில் ராஜபக்ச தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.[32] 2022 சூலை 9 அன்று, போராட்டக்காரர்கள் கொழும்பு நகரில் உள்ள அரசுத்தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினர். கோட்டாபய ராசபக்ச தலைமறைவானார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாம் பதவி விலக விரும்புவதாக அறிவித்தார்.[33]
2022 சூலை 13 புதன்கிழமை அதிகாலை அரசுத்தலைவரும் அவரது மனைவியும் மாலைதீவிற்கு வான்படை வானூர்தியில் சென்று அங்கிருந்து சவூதியா ஏர்லைன் மூலம் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றனர்.[34] அன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு-அரசுத்தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.[35] சூலை 14 இல் போராட்டக்காரர்கள் அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து அமைதியான முறையில் வெளியேறினர்.[36] அன்றே கோட்டாபய தனது பதவிவிலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பினார்.[37] கோட்டாபயவின் பதவி விலகலை சூலை 15 இல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்தார்.[38] அதே நாளில் ரணில் விக்கிரமசிங்க பதில்-அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[39]
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, உணவுப் பொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்ட பல்வேறு தரப்பினரும் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதியன்று சனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கான சமூக ஊடகத் தலைவர்களும் இம்முற்றுகையில் பங்கேற்று சனாதிபதியை பதவி விலகுமாறு கோரி போராடினர். இரண்டு இராணுவப் பேருந்துகள் மற்றும் காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்த எதிர்ப்பாளர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசினர். கொழும்பின் பிரதான வீதியையும் மறித்துள்ளனர். இரவு விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மறுநாள் காலை நீக்கப்பட்டது. ஆனால் காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் நகரில் அதிகரிக்கப்பட்டனர்.[40][41][42][43]
கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் விசிறிகளை பயன்படுத்தினர். சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஐந்து அதிகாரிகள் காயமடைந்ததாகவும், 45 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த போராட்டம் ஒரு தனியார் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஆனால் பின்னர் அரசாங்க பத்திரிகையாளர்களின் அழுத்தம் காரணமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.[44]
போராட்டத்தின் போது இலங்கை அரசுத்தலைவர் வீட்டில் இல்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அரசுத்தலைவரின் அலுவலக அறிக்கை ஒன்றில் "31.03.2022 இரவு போராட்டங்கள் தீவிரவாத சக்திகளால் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறுகிறது."[44]
ஏப்ரல் 1, 2022 அன்று, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் சார்பாக 300 பேருக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மிரிகானை காவல்துறையில் இலவசமாக வழக்காட முன்வந்தனர்.[45]
காலி துறைமுகப் பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரதமர் மகிந்த ராசபக்சவின் ஆதரவாளர்கள் மே 9 அன்று போராட்டக்காரர்களின் கூடாரத்தினைத் தாக்கி அழித்ததுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரம் கொழும்பு தவிர நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவியது. இக்கலவரத்தில் பலர் காயமுற்றனர், பேருந்துகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. [46] குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.[47]
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராசபக்ச திங்கள் கிழமை தனது பதவியில் இருந்து விலகினார். அவரது சகோதரரான கோட்டாபய ராசபச நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக பதவியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார். [48]
சில இணக்கப்பாடுகளுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவராக தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சதித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சனாதிபதி கோட்டாபய ராசபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆனால் வியாழக்கிழமை (மே 12) தற்போதைய நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு சனாதிபதி கோட்டாபய ராசபகச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட இரணில் விக்கரமசிங்க இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பேன் என்றார். [49] [50]இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது. இலங்கை சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் சனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். 'சர்வகட்சி அரசாங்கம் ஒன்றையே தாம் கோரிய போதிலும், அதனை பொருட்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது' என மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் சசித் பிரேமதாசவிற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரமாக அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சசித் பிரேமதாச, பல கட்சிகள் அங்கம் வகிக்கும் ஆட்சிக்கே இணங்குவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சசித் பிரேமதாச,பல கட்சிகள் அங்கம் வகிக்கும் ஆட்சிக்கே இணங்குவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். [51]
மே 9 அன்று இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராசபக்சவின் ஆதரவாளரான அமரகீர்த்தி அத்துகோரள துப்பாக்கி சூட்டில் இறந்தார். ராசபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் வீடும் தீ வைத்து பொதுமக்களால் எரிக்கப்பட்டது.[52] அம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராசபக்சவின் பூர்வீக வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.[53] கொழும்பு புறநகர் பகுதியான நிட்டம்புவ பகுதியில் வைத்து அண்மையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சிறிலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. [54]முன்னாள் பிரதமர் மகிந்த குடும்பத்துடன் எலிகாப்டர் மூலம் திருகோணாமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு தப்பிச்சென்று உள்ளார் [55] திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. [47]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.