சுவாதித் திருநாள் ராம வர்மா

From Wikipedia, the free encyclopedia

சுவாதித் திருநாள் ராம வர்மா
Remove ads

ஸ்ரீ சுவாதித் திருநாள் ராம வர்மா (Swathi Thirunal Rama Varma, மலையாளம்: ശ്രrii സ്വാതി തിരുനാള്‍ രാമ വര്‍മ, (ஏப்ரல் 16 1813 - திசம்பர் 25 1846) இந்தியாவில் திருவிதாங்கூர் சமத்தானத்தை (தற்காலக் கேரள மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு பகுதியை) 1829 முதல் 1846 வரை ஆண்ட மன்னராவார்.

விரைவான உண்மைகள் சுவாதித் திருநாள் ராம வர்மா, முன்னிருந்தவர் ...

இவருடைய தாய் இராணி கௌரி லட்சுமி பாய் 1810-1815- ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆங்கிலேயரின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியுடன் ஆண்டு வந்தார். லட்சுமிபாய்க்கு 1813 ஆம் ஆண்டு சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்தார். இவர் பிறந்த ஆண்டிலேயே அரசராக அறிவிக்கப்பட்டார். இராணி கௌரி லட்சுமி பாய் இறந்த பின், 1815 ஆம் ஆண்டு முதல் 1829 ஆம் ஆண்டு வரை அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலுக்கு ஆள்பவர் என்ற முறையில் இராணி கௌரி பார்வதி பாயி ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் 1829 ஆம் ஆண்டு தக்க அகவையடைந்ததும் முழு அரச அதிகாரத்தையும் ஏற்று திருவிதாங்கூர் அரசைத் தன அந்திமக் காலமான 1846 ஆண்டு வரை ஆண்டார்.

இவர் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்லாமல், சிறந்த இசை வல்லுனரும் இசைப் புரவலரும் ஆவார். இந்திய இசைக்கலையின் வடிவங்களுள் இந்துஸ்தானி இசை மற்றும் கருநாடக இசை ஆகியவற்றை ஆதரித்தாலும் இவர் ஒரு கருநாடக இசை மரபின் ரசிகர் ஆவார். இவர் நானூற்றுக்கும் மேலான கீர்த்தனைகளைக் கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்[1]. இவற்றுள் இவருக்கு விருப்பமான கீர்த்தனைகள் இவை: பத்மநாப பாஹி; தேவ தேவ; சரசிஜநாப மற்றும் ஸ்ரீ ரமணா விபோ ஆகியவையாகும். சுவாதித் திருநாள் மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம்[2][3] வங்காள மொழி, தமிழ், ஒரியா மற்றும் ஆங்கில மொழிகளைச் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றிருந்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள வானியல் ஆய்வகம், அருங்காட்சியகம் மற்றும் விலங்கியல் தோட்டம், அரசு அச்சகம், திருவனந்தபுரம் பொது நூலகம் (தற்போதைய மாநில மைய நூலகம் இது), கீழ்த்திசைச் சுவடி நூலகம் (தற்போதைய கேரளப் பல்கலைக்கழகம் இதை நிர்வாகிக்கிறது), போன்ற அமைப்புகள் சுவாதி திருநாள் மன்னரால் தொடங்கப்பட்டன. மன்னர் 1843 ஆம் ஆண்டு முதல், ஆசிய அரச சங்கத்தின் (Royal Asiatic Society) உறுப்பினராக இருந்தார்.[4].

மேலதிகத் தகவல்கள் திருவிதாங்கூர், கேரள வரலாறு ...
Remove ads

இளமைப் பருவம்

சுவாதித் திருநாள் என்று பலராலும் அறியப்படும் இவர் குலசேகர வம்சத்தைச் சேர்ந்த திருவிதாங்கூர் சமத்தான அரச குடும்பத்தில் 1813 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி பிறந்தார். திருவிதாங்கூரை 1811 முதல் 1815 வரை ஆண்ட இராணி கவுரி லட்சுமி பாய் - சங்கனாச்சேரி அரண்மனையின் இராசராச வர்மா கோயில் தம்புரான் ஆகிய இவர்களின் இரண்டாவது மகன் சுவாதித் திருநாள் ஆவார். புகழ் பெற்ற கவிஞரும், நெருங்கிய உறவினருமான இறையம்மன் தம்பி எழுதிய ஓமனத்தின் கல்கிடவோ நல்ல கோமளத்தமறு பூவோ (ഓമനത്തിങ്കള്‍ക്കിടാവോ നല്ല കോമളത്താമരപ്പൂവോ) என்ற மலையாள தாலாட்டுப் பாடல் சுவாதித் திருநாள் பற்றி இவர் பிறந்த நேரத்தில் எழுதப்பட்டதாகும். இவருக்கு ருக்மிணி பாய் என்ற பெயரில் ஒரு சகோதரியும், உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற சகோதரரும் உண்டு. சுவாதித் திருநாள் நான்கு மாதக் குழந்தையாயிருக்கும் போது இராணி கவுரி லட்சுமி பாய் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாளரான கர்னல் மன்றோ மற்றும் அவருடைய அலுவலர்களை அழைத்துத் தன அரசவையில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அவர் அறிவித்த செய்தி இது: தன மகன் சுவாதித் திருநாளை பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்பில் வளர்த்து வரவும், திருவிதாங்கூர் அரசுக்குக் கம்பெனியின் ஒத்துழைப்பை நல்கவும் மன்றோவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் இது.

இராணி கௌரி லட்சுமி பாய் தன மூன்றாவது குழந்தை பிறந்து பின்பு இரண்டு மாதம் கழித்து இறந்து போனார். இராணியின் இறப்புக்குப் பின்னர் அவருடைய தங்கை கவுரி பார்வதி பாய் ஆட்சிப் பொறுப்பையும் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். சுவாதித் திருநாள் ராம வர்மா பதினேழு மாதக் குழந்தையாயிருக்கும் போது இவரின் தாய் இறந்துவிட, இவரின் சிறிய அன்னை கவுரி பார்வதி பாய் பதினான்கு வருடம் அரசாட்சி புரிந்தார். இதன் பின்பு சுவாதித் திருநாள் முழு அதிகாரத்துடன் மன்னரானார்.

Remove ads

கல்வி

சிறிய அன்னையும் வளர்ப்புத் தாயுமான இராணி கௌரி பார்வதி பாய் இசையில் தேர்ச்சி பெற்றவர். சமஸ்கிருத அறிஞரான தந்தை சுவாதித் திருநாளின் கல்வியில் அக்கறை எடுத்துக் கொண்டார். இது போலக் கர்னல் மன்றோவும் அக்கறை காட்டினார். இளவரசர் ராம வர்மா ஆறு வயதில் மலையாளம் மற்றும் சமஸ்கிருதத்தையும், ஏழு வயதில் ஆங்கிலத்தையும் கற்றார். தொடர்ந்து கன்னடம், தமிழ், இந்துஸ்தானி, தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளையும் கற்றார். இவருடைய ஆசிரியர்களையும், வெளிநாட்டு விருந்தாளிகளையும் மலைக்க வைத்த இவர் மொழிகள் மட்டுமல்லாது வடிவவியல் போன்ற துறைகளிலும் தன் திறமையைக் காட்டினார். கர்னல் வெல்ஷ் என்ற ஆங்கிலேய அதிகாரி அரண்மனைக்கு வந்தபோது அவரிடம் வடிவவியல், அறுகோணம், எழுகோணம் போன்ற வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதாக வாதிட்டாராம்.[7]

Remove ads

இசை ஈடுபாடு

சுவாதித் திருநாளுக்கு சிறு வயது முதலே இசையில் நாட்டமிருந்தது. மொழிகளில் நல்ல இசை இருப்பதாக எண்ணியே அவர் மொழிப்புலமை பெறத் தொடங்கினார். இவரின் இசைபற்றிய கல்வி முதல் பாடத்திலிருந்து கரமண சுப்பிரமணிய பாகவதர் மற்றும் கரமண பத்மநாப பாகவதர் ஆகியோர் மூலம் தொடங்கியது. பின்னர் இசையை ஆங்கிலத்தில் சுப்பாராவ் மூலம் கற்றார். தொடர்ந்து புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் இசையைக் கேட்டும் பாடியும் கற்றார். இசையும் கலையும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வளர்ந்து வந்த காலம் அது. கருநாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர் (1767–1847), சியாமா சாஸ்திரிகள் (1762–1827) மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் (1775–1835) என்போர் இவர் வாழ்ந்த காலத்தில் இசைக்கு வளமூட்டினார்கள். சுவாதித் திருநாளின் மாளிகை அந்நாளில் சிறந்திருந்த இசைக் கலைஞர்களின் தாயகமாக மாறிற்று. சகோதரர்களான தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர், தியாகராசரின் மாணவர் கண்ணையா பாகவதர், அனந்தபத்மநாப கோஸ்வாமி (கோகிலாகந்தமேரு சுவாமி என்ற பெயர் பெற்ற மராத்தி பாடகர), ஷாட்கலா கோவிந்த மாரார் ஆகியோர் இங்கு வருகை புரிந்த கலைஞர்களாவர்.

சுவாதித் திருநாள் இசைவிழா

மன்னர் சுவாதித் திருநாள் வழிவந்தவர் தென்னிந்திய கர்நாடாக இசைக்கலைஞர் இளவரசர் இராம வர்மா. சுவாதி சங்கீதோத்சவம் என்ற ஒரு வாரம் முழுவதும் சுவாதித் திருநாள் மன்னரின் கீர்த்தனைகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட இசை விழாவினை இளவரசர் இராம வர்மா நடத்தினார். ஆண்டுதோறும் சனவரி மாதம் 6 முதல் 12 ஆம் தேதி வரை திருவனந்தபுரம் குதிர மாளிகையில் இந்த இசைவிழா நடப்பது வழக்கம்.

ஆட்சி சிறப்பு

சுவாதித் திருநாள் திருவிதாங்கூரின் மன்னராய் தன சிறிய அன்னையிடமிருந்து தன் பதினாறாம் வயதில் பொறுப்பேற்றுக் கொண்டார். தன் ஆசிரியரான சுப்பாராவைத் தன் முதலமைச்சராக (திவான்) நியமித்தார். இவருடைய முதல் நடவடிக்கை அரசின் செயலகத்தை 75 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த கொல்லம் நகரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றியதாகும். அரசாங்க அலுவல்களில் தனி கவனம் செலுத்த இந்த நடவடிக்கை உதவியது. தன அரசில் கையூட்டைத் தடுக்க பல வழிகளில் முயன்றார். திவான் ஒரு நிலத் தாவாவில் ஒரு சார்புடன் இருந்தமைக்காக அவரிடம் கண்டிப்புக் காட்டினார். திருவனந்தபுரத்தில் 1834 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இது பின்னாளில் மகராசா மேனிலைப்பள்ளி என்றும் மகராசா கல்லூரி என்றும் வளர்ந்தது. இதுவே தற்போதைய திருவாங்கூர் பல்கலைக்கழகக் கல்லூரியாகும். பின்னாளில் இது போலப் பல பள்ளிகள் பிற இடங்களில் தொடங்கப்பட்டன. சட்டத் துறையில் நிறைய சீர்திருத்தங்கள் வந்தன. இவர் தொடங்கிய முன்சிப் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மற்றும் மேல் முறையீட்டு நீதி மன்றங்கள் சட்டத் துறையில் புதுமையை ஏற்படுத்தின. மலபாரைச் சேர்ந்த கந்தன் மேனன் என்பவர் இவரால் கண்டறியப்பட்டு ஹுசூர் திவான் பேஷ்கார் என்ற பதவியில் அமர்த்தப் பட்டவராவார். இவரின் மற்றொரு சாதனை நில சச்சரவுகளைத் தீர்க்க மீண்டும் நில அளவை செய்ததாகும். இவருக்கு மேனன் வேண்டிய உதவிகள் செய்தார். இவர் 1836 ஆம் ஆண்டு முதன்முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பினை நடத்தினார். இந்தக் கணக்கெடுப்பின்படி அக்கால மக்கள் தொகை 128, 068 ஆகும்.

Thumb
குதிர மாளிகை, திருவனந்தபுரம், மன்னர் சுவாதித் திருநாள் கட்டிய மாளிகை இது

மருத்துவம்

நவீன மருத்துவத்தை மாநிலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை சுவாதித் திருநாளையே சாரும். ஒரு ஐரோப்பியரை அரண்மனை வைத்தியராய் நியமித்தார். உள்ளூர் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொறுப்பை ஏற்று பல மருத்துவமனைகளைத் தொடங்கினார். கேரளா மாநிலம் உருவாகும் காலம் வரையிலும் இந்தப் பதவி சர்ஜன் ஜெனரல் என்று அழைக்கப்பட்டது. லெப்டினன்ட் ஹோர்ஸ்லி தலைமையில் ஒரு பொறியியல் துறையையும் நிறுவினார். கரமண பாலம் அப்போது தான் கட்டப்பட்டது.

வானியல்

சுவாதித் திருநாள் அக்கறை காட்டிய மற்றொரு துறை வானியலாகும். இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி மேல்நாட்டு வானியலுடன் ஒப்பிட்டு நோக்க விரும்பினார். வானியல் பொறிகளைக் கட்டமைக்க ஆலப்புழையில் வாழ்ந்த கால்டிகாட் என்ற தொழிலக சார்பாளரை விரும்பி அழைத்துப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டார். 1837 ஆண்டு ஒரு வானியல் ஆய்வகம் (astronomical observatory) ஒன்றை நிறுவிக் கால்டிகாட்டை அதன் பொறுப்பாளாராக்கினார். இன்றும் கூடச் சில கருவிகளைத் திருவனந்தபுரம் வானியல் ஆய்வகத்தில் (இயற்பியல் துறை, கேரளா பல்கலைக்கழகம்) காணலாம். இவர் கண்டறிந்தவை அண்டம் பற்றிய உண்மைகள் இந்திய மற்றும் மேற்கத்திய தகவல்களுடன் ஒத்துப் போகிறது என்பது தான். அரசு அச்சகத்தையும் (அப்போது கேரளாவிலிருந்த தனியார் அச்சகம் சி.எம்.எஸ் பிரஸ்), அருங்காட்சியகத்தையும், வனவிலங்குப் பூங்காவையும் மன்னர் நிறுவினார்.

Remove ads

குடும்பம்

Thumb
திருவிதாங்கூர் மன்னரின் யானைகள், மே மாதம் 1841.

தன் தாய் இராணி கௌரி பாய் இறக்கும் போது சுவாதித் திருநாள் இளம் குழந்தை. பின் தன் சிறிய அன்னை இராணி பார்வதி பாயிடம் வளர்ந்தார். சிறிய அன்னைக்குக் குழந்தைகளில்லை. இவரின் சகோதரன் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆவார். சுவாதித் திருநாள் மறைவுக்குப் பிறகு (1846 ஆம் ஆண்டு) உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மன்னரானார். இவர் 1860 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். சுவாதித் திருநாளின் சகோதரி கவுரி ருக்மிணி பாய் ஆவார். இவருடைய மகள் தான் மன்னரின் முதல் மனைவி. இவர்களுக்குப் பிறந்தவர் மன்னர்மூலம் திருநாள் ஸ்ரீ ராம வர்மா ஆவார்.

சுவாதி திருநாள், ஸ்ரீமதி நாராயணபிள்ளை கொச்சம்ம்மா அம்மாவீடு குடும்பத்தைச் சேர்ந்த திருவட்டார் அம்மாச்சி பணபிள்ளை அம்மா என்பவரை இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். இராணி ஒரு கருநாடக இசைப் பாடகி மற்றும் வீணைக் கலைஞர் ஆவார். இவர் கொல்லத்தில் ஆய்குட்டி வீடு என்ற பெயருடைய சாதாரண நாயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண். திருமணத்துக்கு முன்பு இவர் திருவட்டார் அம்மாவீட்டாரால் (இவரின் பூர்வீக தாய் மற்றும் சகோதரிகள் உட்பட) தத்தெடுக்கப்பட்டார். இவரின் சகோதரி மன்னரின் சகோதரர் உத்திரம் திருநாளை மணந்தார். சுவாதித் திருநாளுக்கு திருவட்டார் சித்திரை திருநாள் அனந்த பத்மநாபன் தம்பி என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். மன்னர் 1843 ஆம் ஆண்டு முதலியார் இனத்தைச் சேர்ந்த சுந்தர லட்சுமி அம்மாள் என்ற நடன நங்கையை மணந்து கொண்டார். சுந்தர லட்சுமி சுகந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டாள். முதலில் மன்னர் சுகந்தவல்லியை அம்மாச்சி என்ற பட்டத்துடன் வடசேரி அம்மாவீடு என்ற வீட்டுக்குத் தத்தெடுத்தார். தஞ்சாவூர் அம்மாவீடு என்ற மாளிகையை 1845 ஆம் ஆண்டு கட்டி சுகந்தவல்லி குடும்பத்தாரை இங்கு குடியமர்த்தினார். எனினும் இவர் குடும்பத்தார் இந்தத் திருமண உறவை அங்கீகரிக்கவில்லை. மன்னர் 1846 ஆம் ஆண்டு இறந்தார். சுகந்தவல்லி தன இறுதிக் காலமான 1856 ஆம் ஆண்டு வரை (பத்தாண்டுகள்) தஞ்சாவூர் அம்மாவீட்டில் வாசித்தாராம். ஒரு இராணிக்கு உரிய சகல மரியாதைகளையும் தனிவகை முறைகளையும் இவர் பெற்றாராம். இவர் மறைவுக்குப் பின் மன்னர் உத்திரம் திருநாள் வீட்டையும் சொத்தையும் பிணைத்து ஒரு உத்தரவு பிறப்பித்தார். சுகந்தவல்லிக்காக ஏற்படுத்தப்பட்ட சொத்துக்களை திரும்ப எடுத்துக்கொள்ள இருப்பதாக உத்தரவு வந்தது. இதை எதிர்த்துச் சுகந்தவல்லியின் தங்கை கணவர் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மனுவினைப் பதிவு செய்தார். தனது தீர்ப்பில் உயர்நீதி மன்றம் சொத்துக்களை பிணைத்துக்கொள்ளும் உரிமையை ஒரு நிபந்தனையின் பேரில் அளித்தது. சுகந்தவல்லி குடும்பத்தாருக்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் மட்டும், மானியமாக அளிக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை.(ஆதாரம் திருவனந்தபுரத்தினேண்ட இதிகாசம்)

Remove ads

ஊடகம்

சுவாதித் திருநாள் என்ற தலைப்பில் ஒரு மலையாளப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் பெயர் லெனின் இராசேந்திரன். சுவாதித் திருநாளாக நடித்தவர் பெயர் ஆனந்த் நாக்.[8]

கீர்த்தனைகள்

மேலதிகத் தகவல்கள் கருநாடக இசை ...
மேலதிகத் தகவல்கள் கீர்த்தனை, இராகம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads