தங்கப்பதக்கம் (திரைப்படம்)
பி. மாதவன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கப்பதக்கம் (Thangappathakkam) என்பது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் குற்றவியல் நாடகத் திரைப்படமாகும். மகேந்திரன் எழுத பி. மாதவன் இயக்கினார். மகேந்திரனின் இதே பெயரிலான நாடகத்தை அடிப்படையாக கொண்ட இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஸ்ரீகாந்த், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது தனது வேலையை அர்ப்பணிப்புடன் செய்யும் ஒரு ஒழுக்கமான காவல் அதிகாரியை மையமாகக் கொண்டது. அதே நேரத்தில் அவரது கலகக்கார மகன் வழிதவறி, குற்றவாளியாகி தன் தந்தையை வெறுக்கிறான். நாடகத்தில் இதேபாத்திரத்தை ஏற்று நடித்த சிவாஜி கணேசன் திரைப்படத்திலும் பாத்திரத்தை மீண்டும் ஏற்று நடித்தார்.
தங்கப்பதக்கம் 1972 சூன் முதல் நாள் அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது, இதன் மூலம் வெள்ளி விழாப் படமாக மாறியது. இது தெலுங்கு திரைப்படமான கொண்டவேடி சிம்ஹம் (1981), கன்னட திரைப்படமான கடம்பா (2004), இந்தி திரைப்படமான சக்தி (1982) ஆகியவற்றிற்கு ஒரு உத்வேகமாக அமைந்தது.
Remove ads
நடிப்பு
- எஸ். பி. சௌத்ரியாக சிவாஜி கணேசன்
- இலட்சுமியாக கே. ஆர். விஜயா
- ஜகனாக ஸ்ரீகாந்த்
- விமளாவாக பிரமிளா
- கோபாலசாமியாக வி. கே. ராமசாமி
- மாயாண்டியாக மேஜர் சுந்தரராஜன்
- காவலர் சுந்தரம் மற்றும் வையாபுரியாக சோ
- மணிமங்களம் மைனராக இரா. சு. மனோகர்
- சூடாமணியாக சுருளி ராஜன்
- முத்தம்மாளாக மனோரமா
- கருப்பாயியாக புஷ்பமாலா
- சாவித்திரியாக வி. ஆர். திலகம்
- டி. ஐ. ஜி. பழனிவேலாக கே. விசயன்
- பூர்ணம் விஸ்வநாதன் (விருந்தினர் தோற்றம்)
- வீரராகவன் ராஜசேகரன் செட்டியார் / ஆய்வாளராக நித்யானந்தன்
Remove ads
தயாரிப்பு
இரண்டில் ஒன்று என்பது நடிகர் செந்தாமரைக்காக மகேந்திரன் எழுதிய நாடகம்.[2] கதாநாயகனாக நடிக்கும் காவல் கண்காணிப்பாளரின் பாத்திரத்துக்கு, தேவைப்பட்ட ஒரு கம்பீரமான பெயரை மகேந்திரனால் தமிழில் கண்டுபிடிக்க முடியவில்லை; "சௌத்ரி" என்ற பெங்காலி பெயரே அப்பாத்திரத்துக்கு பொருத்தமான ஒரு கம்பீரமான ஒரு பெயராக உணர்ந்தார். அந்தப் பெயரையே பாத்திரத்துக்கு இட்டார்.[3] நாடகத்தைப் பார்த்த, சிவாஜி கணேசன் நாடகத்தின் உரிமையை வாங்கி, சில மாற்றங்களுடன் தங்கப்பதக்கம் என்ற பெயரில் சௌத்ரியாக நடித்த நாடகத்தை மீண்டும் அரங்கேற்றினார்.[4][5] 1972 இல் தொடங்கப்பட்ட இந்த நாடகத்தை எஸ். ஏ. கண்ணன் இயக்கினர்.[6] இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, 100 முறைக்கும் மேல் அரங்கேற்றப்பட்டது.[2] கணேசனின் நிறுவனமான சிவாஜி புரொடக்சன்சால், பி. மாதவன் இயக்கத்தில் அதே தலைப்பில் திரைப்படமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.[4][5]
கணேசனின் மகள் சாந்தி நாராயணசாமி, டி. மனோகருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்தார்.[6][7] மகேந்திரன் படத்தின் உரையாடலை எழுதினார், மேலும் மூலக் கதைக்கான அங்கிகாரத்தையும் பெற்றார்.[8] சிவாஜி கணேசன் படத்தில் சௌத்ரி பாத்திரத்தை ஏற்றார். நாடகத்திலும் அவரே அப்பாத்திரத்தை ஏற்றிரிருந்தார்.[9] கே. ஆர். விஜயா அவரது மனைவி லட்சுமியாக நடித்தார், முதலில் நாடகத்தில் சிவகாமி அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தார். ஸ்ரீகாந்த் சௌத்ரியின் மகன் ஜெகனாக நடித்தார், முதலில் நாடகத்தில் ராஜபாண்டியன் அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.[6][3] சோ வையாபுரி என்ற அரசியல்வாதி மற்றும் அவரது அண்ணன் காவலர் சுந்தரம் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.[10][11] நாடகத்தில் சோவின் அரசியல்வாதி கதாபாத்திரம் இருக்கவில்லை.[2] லட்சுமி இறக்கும் காட்சியில் மகேந்திரன் எந்த உரையாடலையும் எழுதவில்லை, அதற்கு பதிலாக அவர் "மனைவியை இழந்த கணவனின் துயரத்தை காட்சிப்படுத்தினார், இது மிகவும் சவாலானது", இருப்பினும் சிவாஜி கணேசன் அதை எடுத்த எடுப்பிலேயே வெற்றிகரமாக சமாளித்தார்.[12] ஒளிப்பதிவை பி. என். சுந்தரம் மேற்கொண்டார், படத்தொகுப்பை ஆர். தேவராஜன் செய்தார்.[7]
Remove ads
கருப்பொருள்
சிவாஜி கணேசனின் கூற்றுப்படி, தங்கப் பதக்கம் என்பது ஒரு அதிகாரி தன் மகனைக் கொன்று தங்கப் பதக்கத்தைப் பெறுவதைப் பற்றியது அல்ல, மாறாக ஒரு காவல் அதிகாரி தனது பதவியில் காட்டும் அர்ப்பணிப்பைப் பற்றியது. அவரது பார்வையில், கதை காவல் அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளையும் அவர்கள் தங்கள் கடமையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது; கதாபாத்திரம் நீதியை நிலைநிறுத்துகிறது, எனவே "தங்கப்பதக்கம்" என்ற தலைப்பு உண்மையில் கடமையை சரிவர செய்த காவல் அதிகாரியைச் சுட்டுகிறது.[4] படத்தில், அரசியல்வாதி வையாபுரி கொள்கையான "அப்பாயிசம்" என்பது அண்ணாயிசத்தை (1973 இல் எம்.ஜி. ராமச்சந்திரனால் "காந்தியம், கம்யூனிசம், முதலாளித்துவத்தின் சிறந்த அம்சங்களின் கலவை" என்று அண்ணாயிசம் விவரிக்கப்பட்டது) கேளிசெய்வதுபோல குறிப்பிடுகிறார். இது மிகவும் தீவிரமானதாக அறியப்பட்ட கொள்கையை கேலி செய்யும் ஒரு வழியாக கருதப்பட்டது.[13]
இசை
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[14] "தத்திச் செல்லும்" பாடல் வலஜி எனப்படும் கருநாடக இசை ராகத்தில் அமைக்கப்பட்டது,[15][16] மேலும் "சுமைதாங்கி சாய்தால்" அரிக்காம்போதியில் அமைக்கப்பட்டது.[17][18]
Remove ads
வெளியீடும் வரவேற்பும்
தங்கப்பதக்கம் 1974 சூன் முதல் நாளன்று அன்று வெளியானது.[5] அப்போதைய தமிழக காவல்துறை தலைவராக இருந்த எஃப். சி. அருள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 16 மிமீ படத்தைப் போட்டுக்காட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.[19] 1974 சூன் 30 அன்று, தமிழ் பத்திரிகையான ஆனந்த விகடன் இந்தப் படத்தைப் பாராட்டியதுடன், சிவாஜி கணேசன் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ஒரு காவல் அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டினார் என்றும், இந்தப் படம் சிவாஜி கணேசனுக்கு ஒரு தங்கப் பதக்கம் என்றும் குறிப்பிட்டது.[20] மாதவனின் இயக்கம் மற்றும் மகேந்திரனின் எழுத்துடன் கூடுதலாக, தமிழ் படங்களில் பொதுவாகக் காணப்படாத ஒரு புதிய வகையான வில்லனை சித்தரித்ததற்காகவும், முன்னணி நடிகர்களின், குறிப்பாக ஸ்ரீகாந்தின் நடிப்பைப் பாராட்டினார்.[21] தங்கப்பதக்கம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது, இதன் மூலம் வெள்ளி விழா படமாக ஆனது.[22][23] இது சிறந்த படம், சிறந்த நடிகர் (கணேசன்), சிறந்த கதை (மகேந்திரன்), சிறந்த நடிகை (விஜயா) ஆகியவற்றுக்கான சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்க விருதுகளைப் பெற்றது.[24]
Remove ads
தாக்கம்
தங்கப்பதக்கம் 1976 ஆம் ஆண்டு தெலுங்கில் பங்காரு பதக்கம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[4][25] தெலுங்கு திரைப்படமான கொண்டவேட்டி சிம்ஹம் (1981),[26] கன்னட திரைப்படமான கடம்பா (2004),[27] இந்தி திரைப்படமான சக்தி (1982) ஆகியவற்றில் இது தாக்கம் செலுத்தியது. [28] ரெடிஃப்பின் என். சத்திய மூர்த்தியின் கூற்றுப்படி, சிவாஜி கணேசனின் சவுத்ரி கதாபாத்திர சித்தரிப்பு "ஆர்வம் கொண்ட இளம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியது". [29] பல பிற்கால தமிழ்ப் படங்கள் "நேர்மையான அதிகாரி" என்று குறிப்பிடும்போது சவுத்ரியைக் குறிப்பிடும் வகையில், இந்தப் பாத்திரத்தின் கதாபாத்திர சித்தரிப்பு ஒரு அளவுகோலாக மாறியது. [6] திரைப்பட வரலாற்றாசிரியர் ஜி. தனஞ்சயனின் கூற்றுப்படி, சவுத்ரி தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு ஒரு வசனம் கூட பேசாத காட்சி "[மகேந்திரன்] தனது சினிமா பாணியைத் தொடங்கிய விதமாக ஆனது".[30]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads