பாலு மகேந்திரா
திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலு மகேந்திரா (Balu Mahendra, 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
Remove ads
பிறப்பு
1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 இல் தங்கப்பதக்கம் பெற்றார்.
Remove ads
முதல் தாக்கம்
தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார். பின்னர் த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (The Bridge on the River Kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகியது.[1]
திரைப்பட நுழைவு
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977இல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியாயிற்று. 1978இல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் பாலு மகேந்திரா
கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார். இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.[2]
நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்
பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக்கும். ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது."[3].
Remove ads
விருதுகளும் பாராட்டுகளும்
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார்.
தேசிய திரைப்பட விருதுகள்
மாநில அரசு விருதுகள்
பிலிம்பேர் விருதுகள்
நந்தி விருதுகள்
பாராட்டாக கிடைத்த காட்சிக் காணி
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.[4]
Remove ads
இயக்குனரான உதவியாளர்கள்
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.
Remove ads
உந்தப்பட்டவர்கள்
சந்தோஷ் சிவன்[5], ரவி கே.சந்திரன்[6] ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஆவர்.
பணியாற்றிய திரைப்படங்கள்
இயக்குநராக
- கோகிலா (1977; கன்னடம்)
- அழியாத கோலங்கள் (1979)
- மூடுபனி (1980)
- மூன்றாம் பிறை (1982)
இயக்குநராகவும் தொகுப்பாளராகவும்
- ஓலங்கள் (1982; மலையாளம்)
- நிரீக்சனா (1986; தெலுங்கு)
- ஊமக்குயில் (1983; மலையாளம்)
- சாத்மா (1983; இந்தி)
- நீங்கள் கேட்டவை (1984)
- உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
- யாத்ரா (1985; மலையாளம்)
- ரெட்டை வால் குருவி (1987)
- வீடு (1988)
- சந்தியா ராகம் (1989)
- வண்ண வண்ண பூக்கள் (1992)
- சக்கரவியூகம் (1992)
- மறுபடியும் (1993)
- சதிலீலாவதி (1995)
- ஓர் எக் பிரேம் ககனி (1996; இந்தி)
- ராமன் அப்துல்லா (1997)
- என் இனிய பொன்னிலாவே (2001)
- ஜூலி கணபதி (2003)
- அது ஒரு கனாக்காலம் (2005)
- தலைமுறைகள் (2013; நடித்தும் உள்ளார்)
ஒளிப்பதிவாளராக
- பனிமுடக்கு (1972; மலையாளம்)
- மாயா (1972; மலையாளம்)[7]
- நிர்த்தசாலா (1972; மலையாளம்; ஒரு பாடல்)
- சாத்திரம் ஜெயிச்சு மனுசன் தோத்து (1973; மலையாளம்)
- அபிமனவந்துலு (1973; தெலுங்கு)
- கலியுகம் (1973; மலையாளம்)
- சுக்கு (1973; மலையாளம்)
- நெல்லு (1974; மலையாளம்)
- ராஜகம்சம் (1974; மலையாளம்)[7]
- சட்டக்காரி (1974; மலையாளம்)
- ஜீவிகன் மரன்னு போயா ஸ்திரீ (1974; மலையாளம்)[7]
- மக்கள் (1974; மலையாளம்)[7]
- ராகம் (1975; மலையாளம்)[7]
- பிரயாணம் (1975; மலையாளம்)
- டூரிஸ்ட் பங்களா (1975; மலையாளம்)[7]
- சுவன்ன சந்தியாக்கல் (1975; மலையாளம்)[7]
- அனுராகாலு (1975; தெலுங்கு)
- சீனவாலா (1975; மலையாளம்)[7]
- மிசி (1976; மலையாளம்)[7]
- பொன்னி (1976; மலையாளம்)
- சென்னாயா வளர்த்திய குட்டி (1976; மலையாளம்)
- அமெரிக்க அம்மாயி (1976; தெலுங்கு)
- தாரம் மரிண்டி (1977; தெலுங்கு)[8]
- பந்துலம்மா (1977; தெலுங்கு)
- லம்பதொல்ல ராமதாசு (1978; தெலுங்கு)[9]
- முள்ளும் மலரும் (1978)
- மனவூரி பண்டவுலு (1978; தெலுங்கு)
- இரு நிலவுகள் (1979; தெலுங்கு)
- உள்கத்தல் (1979; மலையாளம்)
- சங்கராபரணம் (1980; தெலுங்கு)
- கலியுக ராவணசுருது (1980; தெலுங்கு)[9]
- எச்சில் இரவுகள் (1982)[10]
- பல்லவி அனுபல்லவி (1983; கன்னடம்)
- உறங்காத நினைவுகள் (1983)[11]
தொலைக்காட்சி
- கதை நேரம் (2000)
மறைவு
பாலு மகேந்திரா 2014 பெப்ரவரி 13 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.[12][13].
பாலு மகேந்திரா நினைவாக
- 2015 முதல், நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பாலு மகேந்திராவின் பெயரில் சிறந்த திரைக்கலைஞர்களுக்கான விருதை வழங்கிவருகிறது.
- 2018ஆம் ஆண்டு, எழுத்தாளர் அஜயன் பாலா, "பாலு மகேந்திரா நூலகம்" எனும் பெயரில் நூலகம் ஒன்றை சென்னையில் நிறுவினார்.[14]
- 2020ஆம் ஆண்டு முதல், இலங்கை கிளிநொச்சியில் திரைப்படத் துறை சார்ந்த நூலகத்திற்கு பாலு மகேந்திரா நூலகம் என்று பெயரிடப்பட்டு வருகின்றது.[15]
துணுக்குகள்
- பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.[சான்று தேவை]
- இவர் புனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார்.[சான்று தேவை] சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads