வைகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைகை அல்லது வைகையாறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று.
தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இந்நதியின் பாசனப் பரப்பு 7031 ச.கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தை ஒட்டியுள்ள மேகமலையின் விளம்பிலிருந்து இறங்கும் அம்மா கஜம் ஆறு வெள்ளிமலையாறுடன் இணைகிறது. இதனுடன் கூட்டாறு என்ற இடத்தில் உடங்கலாறும் சேர்ந்த பிறகுதான் வைகை, பெரிய ஆறாகிறது.[1] மலையில் இருந்து இறங்கிய வைகையானது, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழியாகப் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.[2]
பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும். இதன் வறட்சிக்குக் காரணமாக வெள்ளி மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும் அதிலிருந்து நீர் மேற்காக கேரள எல்லையை நோக்கி திருப்பப்பட்டு பெரியாறு நீர் தேக்கத்தில் (தேக்கடி) தேக்கப் படுவதால் மழைக்காலங்கள் தவிர பிற காலங்களில் தண்ணீர் வரத்து வராதபடி செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனலாம்.
Remove ads
வைகை ஆற்றுப்படுகை

இவ்வாற்றுப் படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு அட்ச ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்[3]
Remove ads
துணை ஆறுகள்
சுருளியாறு, கொட்டகுடியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும்.
பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
பெரியாற்று நீர் வைரவன் ஆற்றுடன் இணைந்து பின்னர் முல்லையாராக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது. பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாராக வைகை அணையைச் சென்று அடைகிறது.
மேலும் கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாக சென்று வைகை அணை முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும்.
1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது. இந்த அணை ஆங்கிலப் பொறியாளரான பென்னி குக் என்பவரால் தனது சொந்தப் பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Remove ads
அணைகள்
இதன் ஆரம்பம் கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள தேக்கடி என்னும் பெரியாறு தேக்கத்தில் தேக்கப்படுகிறது. இது கேரள தமிழ்நாடு எல்லையில் இருப்பதால் இரு மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு பிரச்சனைத் தொடர்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் ஆழம் 21.64மீ (71அடி). மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி). நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை, பார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.
நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் ஊர்கள்
பண்பாட்டு முக்கியத்துவம்
தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது."வையை என்னும் பொய்யாக் குலக்கொடி", "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை" என்பன போன்ற தொடர்கள் நிலவுகின்றன.
இந்து சமயப் புராணங்கள் சிவபெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறும்.வடமொழி நூல்கள் வைகையை ""க்ருதமாலா" நதி என்று குறிக்கின்றன.
இபின் பட்டுடாவாலும் மார்க்கோபோலோவாலும் வைகை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏராளமான தமிழ் திரைப்படப் பாடல்களிலும் வைகையாறு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் "வைகை ஆற்றில் இறங்குதல்" பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது.
தனிநபர்களின் இயற்பெயர்களிலும், புனைபெயர்களிலும் மேலும் அங்காடிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்களிலும் "வைகை" என்கிற பெயர் பரவலாகக் காணப்படுகிறது.
Remove ads
சித்திரைத் திருவிழா
மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவிற்கும், வைகை ஆற்றிற்கும் மிகுந்த தொடர்புண்டு. மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண வரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும்போது திருமணம் முடிந்துவிட்டது எனக் கேட்டு வைகை ஆற்றிலிருந்த படியே மீண்டும் தன் இருப்பிடம் சென்று விடுவார். அப்போது அங்கே அவருக்கு பல்வேறு ஆராதனைகளும், பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறும். அதே மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு, உணவு உண்ண வந்த குண்டோதரனின் தாகத்தை அடக்க, சிவபெருமான் வைகை யைப்ப யன்படுத்தியதாகவும் கூறுவர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

