வைகோ
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் ஆவார்.[2] இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[3]
Remove ads
பிறப்பும் வளர்ப்பும்
வை கோபால்சாமி பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி - மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர்.
குடும்ப வாழ்க்கை
வை.கோ ரேணுகாதேவி என்ற பெண்ணை 14ஆம் தேதி சூன் மாதம் 1971ஆம் ஆண்டு மணந்தார், இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலட்சுமி–ராஜசேகரன் மற்றும் கண்ணகி–பாலகிருஷ்ணன் என்ற மகள்களும் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.[4]
மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.
அரசியல் பயணத்தில் 50 ஆண்டு
1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ.[5]
மக்கள் நலக் கூட்டணி
- 2016 சட்டமன்றத் தேர்தலில் வைகோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த போதிலும் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தி அவரது தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என ஆறு கட்சிகள் அங்கம் வகித்தன.
- மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊழல்வாதிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கபடுமென வைகோ வாக்குறுதி அளித்தார். இத்தேர்தல் வாக்குறுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது என்றாலும், அரசியல் தலைவர்களிடமும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
- 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் மையப் பிரச்சினை என்ன? தமிழக மக்களின் மையப் பிரச்சினை என்ன? என்று மக்களிடம் கருத்து கணிப்புகளை கைபேசி மற்றும் புலனம், முகநூல் வழியாக கருத்து கேட்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் வைகோ எடுத்த இந்த முடிவை பாராட்டி மற்ற தமிழக உள்நாட்டுகட்சி மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களும் வைகோவின் கருத்தில் உடன்பட்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தனர்.
- மக்களிடையே சரியான வரவேற்பு இருந்தும், பின்னர் ௭திர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.க மற்றும் தமாகா விலகியது.
- பின்பு வரவிருந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்ற கட்சிகளோடு உடன்பாடில்லாமல் தனித்து போட்டியிடும் ௭ன்று வைகோ 2016 திசம்பர் மாதம் 27ஆம் தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் அறிவித்தார்.
- இதன் பிறகு ஏற்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்திற்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால். பிறகு தான் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியை முடக்கினார்.
- பின்பு திமுகவில் தனது மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற மக்கள் நல கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகளோடு இணைந்து செயல்பட்டார்.
Remove ads
குற்றம் சாட்டுகிறேன்
2004-2009 யில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு எப்படி எல்லாம் உதவியது என்பதனை விளக்கி "குற்றம் சாட்டுகிறேன்" எனும் புத்தகத்தினை வைகோ எழுதியுள்ளார். 2004-2009 ஆண்டுகளில் இந்தியப் பிரதமருக்கு தான் எழுதிய கடிதங்களையும், தனக்குப் பிரதமர் எழுதிய கடிதங்களையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து உள்ளார் வைகோ. இதை ஆங்கிலத்தில் "I Accuse" என்ற தலைப்பில் வெளியிட்டும் உள்ளார்.[6]
பொதுச்சேவை
வைகோ 2015 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி இரத்ததான முகாமை தொடங்கினார். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்களை நடத்தினார். நதிநீர் இணைப்புக்காக ஒரு மாதகாலம் நடைபயணமும் மேற்கொண்டார்.
இவரின் போராட்டங்கள்
தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வருபவர் வைகோ.[7][8][9]
மதுவிலக்கு போராட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடி அதில் வெற்றி பெற்றவர். 30 முறை கைதானவர். ஐந்து ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தவர். ஒரு கோடி கல் தொலைவுகளுக்கும் மேல் பயணம் செய்தவர், தமிழகத்தில் 50000 கிராமங்களுக்கும் மேல் சென்று மக்களை சந்தித்தவர் ஆவார்.[13]
சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு
- சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்காக வழக்குத் தொடுத்து வாதாடி இருக்கின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர்வளம், நிலவளம் குன்றி வருகிறது. ௭னவே அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் திகதி கடிதம் எழுதினார். தமிழக அரசின் சார்பில் ௭வ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதே ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
- இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதியன்று மாண்பமை நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தின் 13 தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்த ஒவ்வாரு மாவட்டத்திற்கும் 5 வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைத்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட ஆணை பிறப்பிக்க கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதி அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது.[14]
முல்லைப் பெரியாறு பிரச்சினை
- முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார்.
மீத்தேன் ௭திர்ப்பு போராட்டம்
- மீத்தேனை எதிர்த்துத் தஞ்சை மண்டலத்தில் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.[15]
காவேரி பிரச்சினை
- காவிரிப் பிரச்சினையில் பத்தாயிரம் பேர்களைத் திரட்டிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கல்லணை வரையிலும் நடந்து சென்றிருக்கிறார்.
ஸ்டெர்லைட் போராட்டம்
- ஸ்டெர்லைட் பிரச்சினையில் உலகக் கோடீசுவரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபரை எதிர்த்துப் பதினெட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். இதற்காக உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தானாகவே வாதாடியிருக்கின்றார்.[16]
தனித்தமிழ் ஈழம்
- தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை, உலக அரங்கில் முதன்முதலாக முன்வைத்தது இவரே.[17][18][19][20] 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலர் வைகோ ஜெனீவா சென்றார். ஜெனீவா விமான நிலையத்தில் ஈழத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வைகோவை வரவேற்றனர்.சுவிஸின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.[21]
Remove ads
வகித்த பதவிகள்
- 1970- கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தனது 25வது அகவையில்
- குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்
- திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர்
- 1978- முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினர்
- 1984-இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்
- 1990- மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் என 18 ஆண்டுகள்
- 1994- ம.தி.மு.க நிறுவன பொதுச்செயலாளர்
- 1998- பிப்ரவரி மாதம் சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
- 1999- அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
- திமுக மாநில மாணவரணித் துணைத்தலைவர்
- திமுக தேர்தல் பணிக்குழு தலைவர்
- திமுக தொண்டர் அணித் தலைவர்
- 2019 - நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்.
எழுத்துப் பணிகள்
வை.கோ 50க்கும் அதிகமான புத்தகங்களை இயற்றியுள்ளார். அதில் குறிப்பிட்ட புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[22]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads