From Wikipedia, the free encyclopedia
மைசூர் ஹட்டி கிருஷ்ண ஐயங்கார் (Mysore Hatti Krishna Iyengar) ( எம். எச். கிருஷ்ணா : 19 ஆகஸ்ட் 1892 - 23 டிசம்பர் 1947) ஒரு இந்திய வரலாற்றாசிரியரும், தொல்லியல் ஆராய்ச்சியாளரும்,[1] இந்திய நாணயவியல் துறையிலும் கல்வெட்டியலிலும் செல்வாக்கு பெற்றவருமாவார். இந்தியக் கலாச்சாரம், வரலாறு, இசை மற்றும் மரபுகளை ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வதன் மூலம் இந்தியவியலில் இவர் முன்னோடியாக இருந்தார். பொ.ச. 350க்கு முற்பட்ட பழமையான கன்னட கல்வெட்டுகளில் ஒன்றான ஹால்மிடி கல்வெட்டுகளை இவர் கண்டு பிடித்தார்.[2] சித்ரதுர்காவின் சந்திரவல்லியில் தனது அகழ்வாராய்ச்சியின் போது பிரம்மகிரி தொல்பொருள் தளத்தில் பிரம்மகிரிக்கு அருகிலுள்ள இசிலா நகரத்தின் எச்சங்களையும் கண்டுபிடித்தார். மைசூர் தொல்ல்லியல் துறையில் பணியாற்றிய காலத்தில் சாகாஜியின் ( மராட்டியப் பேரரசர் சிவாஜியின் தந்தை) மறந்துபோன புதைகுழியைக் கண்டுபிடித்தார். தொல்ல்லியல் துறையில் இவரது பணிபுரிந்த காலத்தில் பல அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை (2000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டவை) வெளியிடப்பட்டன. பின்னர் இவை பழைய மைசூர் பிராந்தியத்தின் கல்வெட்டு பற்றிய புத்தகங்களின் தொகுப்பான எபிகிராஃபியா கர்நாடிகாவின் அடுத்தடுத்த தொகுதிகளில் வெளியிடப்பட்டன. கிருஷ்ணா பெங்களூரில் இருந்த காலத்தில், அங்குள்ள தொல்லியல் துறையின் காப்பகங்களில் 6000 நாணயங்களை பட்டியலிடுவதில் முக்கிய பங்கு வகித்தார். ஆங்கில தொல்ல்லியல் ஆய்வாளர் எர்னஸ்ட் ஆர்தர் கார்ட்னரின் கீழ் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயிற்சி பெற்றார். பின்னர் எகிப்தில் அகழ்வாராய்ச்சியில் சர் பிளிண்டர்ஸ் பெட்ரியுடன் பணிபுரிந்தார்.[3]
எம். எச். கிருஷ்ணா | |
---|---|
பிறப்பு | மைசூர் | 19 ஆகத்து 1892
இறப்பு | 23 திசம்பர் 1947 55) மைசூர் | (அகவை
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எபிகிராஃபியா கர்நாடிகா, ஹால்மிடி கல்வெட்டு, இசிலா நகரை கண்டுபிடித்தல், பேரரசர் சிவாஜி யின் தந்தை சாகாஜியின் மறைந்துபோன புதைகுழி |
வாழ்க்கைத் துணை | இராஜம்மா, ஜெயம்மா |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | மகாராஜாவின் கல்லூரி, மைசூர் |
கல்வி நெறியாளர்கள் | இராதா குமுத் முகர்ஜி, பிரஜேந்திரநாத் சீல், சர் பிளிண்டர்ஸ் பெட்ரி, எர்னஸ்ட் ஆர்தர் கார்ட்னர் |
கல்விப் பணி | |
துறை | வரலாறு, தொல்லியல், இந்தியவியல், நாணயவியல், கல்வெட்டியல் |
கல்வி நிலையங்கள் | மைசூர் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | எஸ். சிறீகாந்த சாத்திரி, க. வெங்கடசுப்பையா, எம். சித்தானந்த மூர்த்தி, சாதுரங்கா, ஜெயச்சாமராஜா உடையார் |
வலைத்தளம் | |
M. H. Krishna |
கிருஷ்ணா, இரங்கா ஐயங்கார் மற்றும் இலட்சுமம்மா ஆகியோருக்கு மைசூரில் பிறந்தார். இரங்கா ஐயங்கார் ஒரு சமசுகிருத அறிஞராகவும், மகாராஜா நான்காம் கிருட்டிணராச உடையாரின் குழந்தைப் பருவ ஆசிரியராகவும் இருந்தார். மேலும், மைசூர் அரண்மனையின் தலைமை பொருளாளராகவும் இருந்தார். இவர்கள் கர்நாடகாவில் 'கலாலே' என்ற ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கிருஷ்ணா தனது பள்ளிப்படிப்பை ஜெயாச்சார்யா பாடசாலை மற்றும் மைசூர், வெஸ்லியன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இங்கே, இவர் மஸ்தி வெங்கடேச ஐயங்காரின் சமகாலத்தவராக இருந்தார். மைசூர், மகாராஜா கல்லூரியில் 1911இல் இளங்கலை முடித்தார். 1917 வாக்கில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலையை முடித்து அடுத்த இரண்டு ஆண்டுகள் மைசூர் மகாராஜா கல்லூரியில் வரலாற்று விரிவுரையாளராக பணியாற்றினார். 1919ஆம் ஆண்டில், கிருஷ்ணா இலண்டனின் 'பேரரசின் ஆசியச் சங்க'த்தின் உறுப்பினராக்கப்பட்டார். மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரஜேந்திரநாத் சீலும், மைசூர், மகாராஜா கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் இராதா குமுத் முகர்ஜி, இவரது நாணயவியல் மற்றும் கல்வெட்டுத் திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டார். மேலும் 6000 நாணயங்களை அவற்றின் காப்பகங்களில் (1920 -1922) பட்டியலிடுவதற்காக பெங்களூர் தொல்பொருள் அலுவலகத்திற்கு இவரை அனுப்பினார்.
1924 வாக்கில், கிருஷ்ணா இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உயர் படிப்புக்கு நிதியுதவி பெற்றார். இங்கே, எர்னஸ்ட் ஆர்தர் கார்டினரால் ஆராய்ச்சியில் வழிநடத்தப்பட்டார். கார்டினரைத் தவிர, இவர் எல்.டி. பார்னெட், சர் பிளின்டர்ஸ் பெட்ரி, எலியட் ஸ்மித், செலிக்மேன், டபிள்யூ.ஜே. பெர்ரி மற்றும் எட்வர்ட் வெஸ்டர்மார்க் ஆகியோரின் கீழும் பயிற்சி பெற்றார். தனது எகிப்திய அகழ்வாராய்ச்சிக்கு பிளிண்டர்ஸ் பெட்ரியுடன் சென்றார். பிரித்தானிய அருங்காட்சியகம், ஆஷ்மோலியன் அருங்காட்சியகம், ஆக்சுபோர்டு, பிட்ஸ்வில்லியம் சேகரிப்பு, கேம்பிரிச்சு, பாரிஸ், தேசிய அருங்காட்சியகம், பெர்லினின் கைசர் பிரீட்ரிக் அருங்காட்சியகம் ஆகியவற்றில் தென்னிந்திய ஆர்வத்தின் தொகுப்புகளைப் பார்வையிடவும் படிக்கவும் இவர் ஐரோப்பாவில் தனது நேரத்தை பயன்படுத்திக் கொண்டார். இந்த நேரத்தில் இவர் தனது ஆய்வறிக்கைகளை 'டெக்கான் நியூமிஸ்மாடிக்ஸ் ராயல்' நிறுவனத்தில் சமர்ப்பித்தார். இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் பற்றிய பொது சொற்பொழிவுகளை வழங்க கிருஷ்ணா அழைக்கப்பட்டார். இவர் 1926 இல் ஏழு விரிவுரைகளை நிகழ்த்தினார். இறுதியில் இவர் ராயல் நியூமிஸ்மாடிக்ஸ் அமைப்பு மற்றும் இலண்டனின் 'பேரரசின் மானுடவியல் நிறுவனம்' ஆகியவற்றின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தியா திரும்பியதும், மைசூர், மகாராஜா கல்லூரியின் வரலாற்றுத் துறையில் பொறுப்பேற்றார். இது தொல்லியல் துறையில் இவரது கடமைகளுக்கு கூடுதலாக இருந்தது. இந்த நேரத்தில், இவர் "பல்கலைக்கழக வரலாற்று சங்க"த்தின தலைவராக இருந்தார். கர்நாடகாவின் கர்நாடக வரலாறு மற்றும் கலாச்சார வரலாறு குறித்து கிருஷ்ணா வலியுறுத்தினார். இவர் 1932இல் துறைத் தலைவரானார். 1933இல், இவர் பல்கலைக்கழக செனட் கல்விச் சபை உறுப்பினரானார். 1939இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கிருஷ்ணா, மைசூர் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கு வருகை தரும் நேர்காணல் நிபுணராக இருந்தார்.
இவரது மாணவர்களில் எஸ். சிறீகாந்த சாத்திரி, ஜெயச்சாமராஜா உடையார், தினகர தேசாய், எம்.சேஷாத்ரி, என். அனந்தரங்காச்சார், எம். என். சீனிவாஸ், எஸ். ஆர். ராவ், பி. ஷேக் அலி, ஏ. வி. வெங்கட்ரத்தினம். சி. எம். வேதவல்லி, எம். பி. எல். சாஸ்திரி, ஈ. ஆர். சேதுராமன், ஜவரே கவுடா, க. வெங்கடசுப்பையா எ.ஸ். வி. பரமேஸ்வரர் பட்டா, சதுரங்கா ஆகியோர் அடங்குவர்.
மைசூர் அரசின் தொல்லியல் துறை, 1885இல் தொடங்கப்பட்டதிலிருந்து, நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் மற்றும் செப்புத் தகடுகளைக் கண்டுபிடிப்பதில் கருவியாக இருந்தது. பெஞ்சமின் லூயிஸ் ரைஸ் அதன் முதல் இயக்குனராக இருந்து 9000 கல்வெட்டுகளை கண்டுபிடித்து பட்டியலிடுவதற்கு பொறுப்பாக இருந்தார். அவரது வாரிசான ஆர். நரசிம்மாசார்யா சுமார் 5000 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு ஆர். சாமாசாத்திரி 1000 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார். கிருஷ்ணா மேலும் 2000 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து இந்தத் தொகுப்பில் சேர்த்துள்ளார். இவர் கண்டுபிடித்த சில கல்வெட்டுகள்:
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஹால்மிடி என்ற இடத்தில் ஒரு பழைய கன்னடக் கல்வெட்டை (பொ.ச. 350) கண்டுபிடித்தார். மேலும், சித்ரதுர்கா மாவட்டம் சந்திரவள்ளியிலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார். பிரம்மகிரிக்கு அருகிலுள்ள இழந்த நகரமான இசிலாவின் எச்சங்களை கண்டுபிடித்தார். 'சிறு கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்கள் , கற்காலம், இரும்புக் காலம், மௌரியர், சாளுக்கியர், போசளர் காலங்கள் எனப்படும் ஐந்து வெவ்வேறு கலாச்சார அடுக்குகளை இவர் அடையாளம் காட்டினார். சிறு கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களை 'ரோப்பா கலாச்சாரம்' என்று பெயரிட்டார். ஏனெனில் அது அந்தக் கிராமத்தின் அருகிலேயே காணப்பட்டது. சாகாஜி ராவின் (சிவாஜியின் தந்தை) மறந்துபோன புதைகுழியையும் இவர் கண்டுபிடித்தார்.
கிருஷ்ணா 1924இன் ஆரம்பத்தில் இராஜம்மா என்பவரை மணந்தார். அவர் பிரசவத்தின்போது இறந்த பின்னர், 1933இல் ஜெயம்மா என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். இவர் இராமகிருஷ்ணரின் பக்தராக இருந்தார். நீண்டகாலங்களாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் 1947 திசம்பர் 23இல் இறந்தார்.
தொல்ல்லியல் துறையில் தனது பதவிக்காலத்தில் இவர் பல வருடாந்திர அறிக்கைகளை தாக்கல் செய்தார். "எபிகிராஃபியா கர்நாடிகா"வில் வருடாந்திர அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். மேலும் தனது கண்டுபிடிப்புகளை பல புத்தகங்களில் வெளியிட்டார். இவர் சுமார் 15 புத்தகங்கள், பல்வேறு பத்திரிகைகளில் 100 கட்டுரைகள் மற்றும் விரிவான எழுதப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.