இந்தியாவின் அலுவல் மொழிகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தி மொழியை இந்திய அரசின் அலுவல From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் அலுவல்மொழிகள் (official languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.[2] இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.[2] இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.[3]

மாநிலங்கள் தங்கள் அலுவல்பணிகளுக்கான மொழியை சட்டப்பேரவை மூலம் தீர்மானிக்கின்றன. ஆகையால் அலுவல்மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்பு மிக விவரமான அங்கங்களை கொண்டுள்ளது.[4] ஒன்றியத்தின் அலுவல்பணிகளுக்கான மொழியை மட்டுமன்றி [5] ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஆட்சிப்பகுதியிலும் பயன்படுத்தப்படும் அலுவல்மொழி,[6] மற்றும் ஒன்றியமும் மாநிலங்களும் அவற்றினிடையேயும் பரிமாறிக்கொள்ளும் தகவல்களுக்கான மொழி குறித்தும் [7] வரையறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலம் நடுவண் மற்றும் மாநில அளவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.[8] 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக அமையும் என எதிர்பார்த்தது;இருப்பினும் இந்திய நாடாளுமன்றத்திற்கு இதன் பின்னரும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துமாறு சட்டமியற்ற அதிகாரம் வழங்கியிருந்தது.[9] ஆனால் இந்தியை மட்டுமே ஒரே அலுவல் மொழியாக ஆக்குவதற்கு எழுந்த எதிர்ப்பின் விளைவாக ஆங்கிலம் அலுவல்மொழியாகத் தொடர்கிறது. ஆங்கிலம் இந்தி மொழியுடன் ஒன்றியப் பணிகளிலும் சில மாநிலப் பணிகளிலும் பிற மொழிகளுடன் மாநிலப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போதுள்ள அலுவல்மொழிகள் குறித்த சட்ட ஆவணங்கள், இந்திய அரசியலமைப்பு, அலுவல் மொழிகள் சட்டம்,1963, அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்கானது) விதிகள்,1976 மற்றும் மாநில மற்றும் நடுவண் அரசின் விதிகளும் கட்டுப்பாடுகளும் ஆகும்.
Remove ads
ஒன்றியத்தின் அலுவல்மொழிகள்
வரலாறு
சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபையில் இந்தியாவின் தேசிய மொழி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன. இந்தியா அல்லது உருது கலந்த இந்துஸ்தானியா என்ற விவாதம் நடைபெற்ற நிலையில் இந்த சபையில் இடம் பெற்றிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஜி.துர்காபாய், ராமலிங்க செட்டியார், என்.ஜி.ரங்கா, என். கோபாலசாமி ஐயங்கார், எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோர் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வேண்டும் என்றனர்.மூன்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு 1949ஆம் ஆண்டு முன்சி - கோபால்சாமி ஐயங்கார் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்பின் 17ஆவது பிரிவின் அடிப்படையில் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்கப்பட்டது. இதில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று எந்த இடத்திலும் இல்லை. அலுவல் மொழி குறித்து மட்டுமே இந்தப் பிரிவு பேசுகிறது.[10]
இந்திய அரசியலமைப்பு, 1950இல் , தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி ஒன்றியத்தின் அலுவல் மொழியாக அறிவித்திருந்தது.[11] நாடாளுமன்றம் மாறாக தீர்மானிக்காதவிடத்து, அரசியலமைப்பு செயலாக்கத்திற்கு வந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு,சனவரி 26, 1965, அரசுப்பணிகளுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.[12] இத்தகைய மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்பு இந்தி பேசாத பகுதிகளில், முக்கியமாக இந்தியுடன் எத்தகைய ஒற்றுமையும் இல்லாத மொழிகள் பேசும் திராவிட மாநிலங்களில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இந்தியப் பாராளுமன்றம் 1963 அலுவல் மொழிகள் சட்டத்தை நிறைவேற்றியது[13][14][15][16][17][18]; இதன்படி 1965ஆம் ஆண்டிற்கு பின்னரும் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர்ந்தது.
1964ஆம் ஆண்டு ஆங்கிலப் பயன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி. கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இவற்றில் சில வன்முறையாக மாறின.[19] இதன் விளைவாக, கொண்டுவரவிருந்த வரைவு மசோதா விடப்பட்டதுடன்,[20][21] சட்டமும் 1967ஆம் ஆண்டு திருத்தப்பட்டு இந்தியை அலுவல்மொழியாக ஏற்காத அனைத்து மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தாதிருக்க தீர்மானம் நிறைவேற்றாதவரையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான தீர்மானம் நிறைவேறாத வரையிலும் ஆங்கிலப் பயன்பாடு முடிவுக்கு வராது என்று நிறைவேற்றப்பட்டது[22]
தற்போதைய நிலவரப்படி, இந்திய அரசு இந்தியுடன் ஆங்கிலத்தையும் "துணை அலுவல் மொழியாக"[23] தொடர்ந்து தனது அலுவல்பணிகளில் பயன்படுத்தி வரும்.[24] அதே நேரம் தனது அலுவல்பணிகளில் இந்தியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் கூட்டிட ஓர் திட்டத்தினை வரைந்து அதனை செயலாக்க வேண்டும்.[25] இந்தி மற்றும் ஆங்கிலத்தின் பயன்பாடு எந்தளவு மற்றும் எப்பகுதிகளில் என்பதை அரசியலமைப்பு, அலுவல்மொழி சட்டம்,1963, அலுவல் மொழிகள் விதிகள் 1976 மற்றும் இந்தச் சட்டங்களின் கீழமைந்த அலுவல் மொழித்துறையின் சட்ட ஆவணங்களைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சட்டங்களும்
இந்திய அரசியலமைப்பு நாடாளுமன்ற அவை நடைவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் மொழிக்கும் சட்டங்கள் உருவாக்கப்படும் மொழிக்கும் வேறுபாட்டை வரையறுத்துள்ளது. நாடாளுமன்றம் தனது அவை நடைவடிக்கைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தும்.[26] ஆங்கிலத்தின் பயன்பாடு 15 ஆண்டுகளில் முடிவடைவதாக இருந்ததை[27], நாடாளுமன்றம் அலுவல் மொழிகள் சட்டம் 1963 நிறைவேற்றியதன் மூலம் நீட்டித்துள்ளது.[28] தவிரவும், இந்தி அல்லது ஆங்கிலத்தில் உரையாட இயலாத உறுப்பினர், அவைத்தலைவர் அனுமதியுடன், தனது தாய்மொழியில் பேசலாம்.[29]
மாறாக, அரசியலமைப்பு அனைத்து அதிகாரமிக்க சட்ட உரைகளும், நாடாளுமன்ற மசோதாக்களும் சட்டபூர்வ ஆவணங்களும் உட்பட, ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது; நாடாளுமன்றம் மாறாக விரும்புமானால் இதற்குத் திருத்தம் கொணரலாம்.[30] இத்தகைய திருத்தம் எதனையும் நாடாளுமன்றம் கொண்டு வரவில்லை; தொடர்பாக அனைத்துச் சட்டங்களும் ஆவணங்களும், ஆங்கிலத்தின் உரையே அதிகாரபூர்வமாக இருக்குமெனினும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.[31]
நீதிமன்றங்கள்
இந்திய அரசியலமைப்பின்படி நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் மாநில உயர் நீதிமன்றங்களிலும் ஆங்கிலமே நடைமுறை மொழியாக இருக்கும் என வரையறுத்துள்ளது.[32] இதனை மாற்றக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த அதிகாரத்தை இதுவரை பயன்படுத்த வில்லை.[33]
நிர்வாகம்
தனது அலுவல் பணிகளில் இந்தியின் பயன்பாட்டை நடுவண் அரசு கூடுதலாக்க வேண்டும்;[25] இதனை "வற்புறுத்தல்,ஊக்கத்தொகைகள் மற்றும் நம்பிக்கை" மூலம் செயலாக்க முனைந்துள்ளது.[34]
நடுவண் அரசின் பொதுமக்களுக்கு உரித்தான பெரும்பாலான நிர்வாக ஆவணங்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட வேண்டும் என்று அலுவல்மொழிச் சட்டம் குறிப்பிட்டுள்ளது.[35] அலுவல் மொழி விதிகள் மாறாக நடுவண் அரசின் அலுவலகங்களுக்குள்ளே தகவல் பரிமாற்றங்கள் கூடுதலாக இந்தியில் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளது; இந்த விதிகள் தமிழ் நாட்டிற்கு செல்லாதாகையால் அங்குள்ள அலுவலகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.[36]). நடுவண் அரசின் இரு துறை/ அமைச்சரகங்களிடையே இந்தியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; வேண்டுமானால் மற்ற மொழியில் மொழிமாற்றம் கொடுக்கலாம்.[37] ஒரே துறையின் கீழ் அலுவலகங்களிடையேயான தகவல்கள் இந்தி பேசும் மாநிலமானால் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்;[38] பிற மாநிலங்களில் இந்தி அல்லது ஆங்கிலத்திலும், பெறும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்குள்ள இந்தி அறிவின் வீதத்தின்படி கூடுதலான இந்திப் பயன்பாடும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.[39] கோப்புகளில் உள்ள குறிப்புகளும் குறிப்பாணைகளும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; விரும்பியவருக்கு மற்ற மொழியில் மொழிமாற்றம் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும்.[40]
தவிர, எந்த அரசு அலுவலகம் அல்லது அதிகாரி மீதான முறையீட்டை ஓர் இந்தியக் குடிமகன் எந்தவொரு இந்திய மொழியிலும் கொடுக்க அரசியலமைப்பின்படியான உரிமை கொண்டவராவார்.[41]
செயலாக்கம்
இந்திய அரசு இந்தி மொழியின் பயன்பாட்டை கூட்டிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மண்டல இந்தி செயல்திட்ட அலுவலகங்களை பெங்களூரு, கொச்சி, மும்பை, கொல்கத்தா, குவஹாட்டி, போபால், தில்லி மற்றும் காசியாபாத்தில் அமைத்து நடுவண் அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தி மொழியின் செயல்பாட்டை கண்காணித்து வருகிறது. ஓர் அலுவலகத்தின் கடிதப் போக்குவரத்தில் எத்தனை விழுக்காடு இந்தியில் இருத்தல் வேண்டும் என்பதற்கு அலுவல்மொழி அலுவலகம் ஆண்டு இலக்குகளை தீர்மானிக்கிறது. 1976ஆம் ஆண்டிலிருந்து அமைக்கப்படும் அலுவல்மொழி குறித்த நாடாளுமன்றக் குழு இந்த முன்னேற்றங்களை காலமுறை தோறும் மீளாய்வு செய்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்தியின் நிலை உயர்வை கண்காணித்து கொள்கை முடிவுகளை எடுக்க 1967ஆம் ஆண்டில் கேந்திரிய இந்தி சமிதி ஏற்படுதப்பட்டது. பத்து நடுவண் அரசு அலுவலகங்கள் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நகர அலுவல்மொழி செயல்திட்ட குழு ஏற்படுத்தப்பட்டு இந்தியில் கூடுதலாக அலுவல் புரியும் பணியாளர்களுக்குப் பரிசுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. அனைத்து நடுவண் அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியின் பயன்பாட்டை கூட்டிட இந்திப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.[42]
Remove ads
மாநில அலுவல் மொழிகள்

இந்திய அரசியலமைப்பு மாநிலங்களில் அரசுப்பணிகளுக்கான அலுவல்மொழியை குறிப்பிடவில்லை; அந்தந்த மாநிலங்களே, அவற்றின் சட்டபேரவைகளின் மூலம், இந்தி அல்லது தங்கள் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு மொழிகளை தங்கள் அலுவல்மொழிகளாக தீர்மானித்துக் கொள்ளலாம்.[43] இது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியாகக் கூட இருக்க வேண்டியதில்லை; காட்டாக, திரிபுராவில் கொக்பொரோக் , மிசோரமில் மிசோ , மேகாலயாவில் காசி, காரொ மற்றும் சைந்தியா, புதுச்சேரியில் பிரெஞ்சு அலுவல்மொழிகளாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள்
ஒன்றியப் பகுதிகள்
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads