கதிர்காமம்
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதிர்காமம் (Kataragama) (சிங்களம்:කතරගම) என்பது இலங்கையின் பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும், பழங்குடி வேடுவர்களுக்குமான ஒரு புனித யாத்திரை நகரமாகும். தென்னிந்தியாவிலிருந்தும் இங்கு வருகின்றனர். இந்த நகரத்தில் கதிர்காமம் கோயில் உள்ளது. இது கந்தக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயமாகும். கதிர்காமன் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறது. கதிர்காமம் இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 228 கி.மீ. தொலைவிலுள்ளது. இது இடைக்காலத்தில் ஒரு சிறிய கிராமமாக இருந்தபோதிலும், இன்று இது இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் காடுகளால் சூழப்பட்ட வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும்.
கிமு 6ஆம் நூற்றாண்டில் பிராந்திய மன்னன் மகாசேனனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் பண்டைய கிரி விகாராமும் பௌத்தத் தாது கோபுரமும் இப்பகுதியின் முக்கிய ஈர்ப்பாகும் [1] இந்த நகரம் கி.மு.வில் கடந்த நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு மதிப்புமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. உருகுணை இராச்சியத்தின் ஆட்சிக் காலங்களில் பல சிங்கள மன்னர்களின் அரசாங்க இருக்கையாக இருந்துள்ளது.[2] 1950களிலிருந்து, பொதுப் போக்குவரத்து, மருத்துவ வசதிகள், வணிக மேம்பாடு, விடுதி சேவைகளில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் முதலீடு செய்ததன் மூலம் நகரம் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இது பிரபலமான யலா தேசிய வனத்தை அடுத்துள்ளது.
Remove ads
பெயர்க்காரணம்
பொ.ச. 6ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தில் இந்தக் கிராமத்தைப் பற்றிய முதல் குறிப்பு உள்ளது. அது இந்த இடத்தை கசரகாமம் என்று குறிப்பிடுகிறது . [3] இலங்கையின் சிறீ மகாபோதி திருவிழாவிற்கு அசோகனின் மகளான சங்கமித்தை வந்தபோது கசரகாம பிரபுக்களும் பங்கேற்றார்கள் என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [4] சில அறிஞர்கள் கார்த்திகேய கிராமத்திலிருந்து கதிர்காமம் என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். அதாவது கார்த்திகேயன் கிராமம் என்று பொருள்படும். இது பாளியில் கசரகாமம் என்று மருவி பின்னர் கதிர்கிராமமாக உருவானது. [5] [6] இருப்பினும், அனைத்து அறிஞர்களும் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. [7]
கசரகாமத்தின் சிங்களப் பொருள் "பாலைவனத்திலுள்ள கிராமம்" எனப்படும். இது வறண்ட பகுதியில் அமைந்திருப்பதால், கசரம் என்ற வார்த்தைக்கு "பாலைவனம்" என்றும் காமம் என்றால் "கிராமம்" எனவும் பொருள் வந்திருக்கலாம்.[8] [9] [10] ஒரு நாட்டுப்புற சொற்பிறப்பியல் படி, கதிர்காமம் என்ற தமிழ் பெயர் "கதிர்" (ஒளியின் மகிமை ), "காமம்" (காதல்) ஆகிய இரண்டு சொற்களின் கலவையிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. இது புராணத்தின் படி "முருகனின் ஒளியானது வள்ளியுடன் கலந்தது " எனப் பொருள் தருகிறது. [11]
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியாக (கதிர்) சரவணப் பொய்கையில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் முருகப்பெருமான் அழகான முகத்தில் (காமன்) தோன்றியதால் இத்தளத்திற்கு கதிர்காமம் என்ற பெயரும் முருகனுக்கு கதிர்காமன் என்ற பெயரும் ஏற்பட்டது.
பழங்குடி வேடுவச் சமூகம் இந்த தெய்வத்தை ஓ 'வேதா அல்லது ஓய வேதா என்று குறிப்பிடுகிறது. அதாவது "நதி வேட்டைக்காரன்" என்று பொருள். [12] இந்த இடத்திற்கு வருகை தந்த இலங்கைச் சோனகர்கள் அல்-கிள்ரு என்றழைக்கப்பட்ட ஒரு முஸ்லிம் துறவிக்கு மரியாதை செலுத்தினர். அவர்கள் கூற்றுப்படி இந்த இடத்தில் இசுலாமிய சன்னதிக்கு அவரது பெயரைக் கொடுத்தனர். எனவே இந்த இடத்திற்கு அப்பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். [13]
Remove ads
வரலாறு
ஆரம்பகால வரலாறு
கதிர்காமத்தின் பொதுச் சுற்றுப்புறம் குறைந்தது 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அளித்துள்ளது. இது பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கு இடைப்பட்ட கற்கால வாழ்விடங்களுக்கான ஆதாரங்களையும் அளித்துள்ளது. [14]
வரலாற்றுக் காலம்
வரலாற்றுக் காலத்தில், பொதுப் பகுதி நீர் பாதுகாப்பும், அதனுடன் தொடர்புடைய நெல் சாகுபடிக்கான சிறிய நீர்த்தேக்கங்களால் வகைப்படுத்தப்பட்டது. 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் "கசரகாமம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 288 இல் அசோகனின் பௌரியப் பேரரசிலிருந்து அனுப்பப்பட்ட புனிதமான அரச மரக்கன்றுகளைப் பெற முக்கியமான பிரமுகர்கள் கசரகிராமம் வந்தனர் என அது நகரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
இது உருகுணை இராச்சியத்தின் மன்னர்களின் காலத்தில் தலைநகராக இருந்துள்ளது. தென்னிந்திய மன்னர்கள் வட இலங்கைக்குப் படையெடுத்தபோது இது வடக்கிலிருந்த பல மன்னர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. 13ஆம் நூற்றாண்டில் இப்பகுதி கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. [15]
Remove ads
கதிர்காமம் கோயில்

இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் தமிழ் இந்துக்கள் இந்த இடத்தை கதிர்காமம் என்று குறிப்பிடுகின்றனர். கதிர்காமன் சைவக் கடவுளான முருகனுடன் தொடர்புடைய பெயராகும். தென்னிந்தியாவின் சைவ இந்துக்கள் இவரை சுப்ரமண்யர் என்றும் அழைக்கிறார்கள். இவர் கந்தசாமி, கதிரதேவன், கதிரவேல், கார்த்திகேயன், தாரகாசிதன் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பெயர்களில் சில கதிர்காமத்திலிருந்து வேரான கதிரிலிருந்து பெறப்பட்டவை. "கதிர்" என்றால் உருவமற்ற ஒளி எனப்பொருள். தெய்வம் ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் அல்லது ஒரு முகம் மற்றும் நான்கு கைகளால் சித்தரிக்கப்பட்டுள்ளது. முருகன் மீதான அன்பின் காரணமாகவும், வினைப்பயன்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் தம் கன்னங்களிலும், நாக்கிலும் கூரிய வேல்களால் குத்திக் கொண்டு, முருகன் சிலையைச் சுமந்து செல்லும் பெரிய தேர்களை பெரிய கொக்கிகள் கொண்டு முதுகின் தோலால் துளைத்துக் கொள்வார்கள். இந்த நடைமுறை அலகு குத்துதல் (காவடி) என்று அழைக்கப்படுகிறது.
புத்த கதிர்காமம்

கதிர்காமத் தெய்வம் பௌத்த மதத்தின் பாதுகாவல் தெய்வம் என்றும் அவர் கதிர்காமக் கோவிலின் தலைமைத் தெய்வம் என்றும் இலங்கையின் பல சிங்கள பௌத்தர்கள் நம்புகின்றனர். இலங்கையில் பார்வையிட வேண்டிய பௌத்த யாத்திரைக்கான 16 முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கை வரலாற்று ஏடான மகாவம்சத்தின்படி, கௌதம புத்தர் வட இந்தியாவில் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளைக் கன்றுகளை 2,300 ஆண்டுகளுக்கு முன்பு அனுராதபுரம் நகரத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, கதிர்காமத்தைச் சேர்ந்த போர்வீரர்களோ அல்லது சத்திரியர்களோ மரியாதை செலுத்தினர்.

கதிர்காமம் கோயிலுக்குப் பின்னாலுள்ள அரசமரம் இலங்கையின் அனுராதபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட சிறீ மகாபோதியின் எட்டு மரக்கன்றுகளில் ஒன்றாகும். இந்த மரம் கிமு 3 ஆம் நூற்றாண்டில் நடப்பட்டது. [16]
மக்கள் தொகை
நகரம் கைவிடப்பட்டதிலிருந்து, 1800களில் கிராமத்தில் குறைந்த அளவே மக்கள் தொகை இருந்தது. 1950களில் இருந்து நரில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அருகிலுள்ள தஞ்சநகரத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களைத் தவிர பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சிங்களவர்கள். ஆண்டுதோறும் சூலை, ஆகத்து மாதங்களில் நடைபெறும் திருவிழாவின்போது இங்கு பல இலட்சம் மக்கள் ஒன்று கூடுகின்றனர்.
2010 கணக்கெடுப்பின்படி நகரத்தின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 20,000 ஆகும். [17]
Remove ads
போக்குவரத்து
இங்கு வருகை தரும் பலரும் வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். இன்றும், நவீன போக்குவரத்து இருந்த போதிலும், நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்புள்ள யாத்ரீகர்கள் பாதயாத்திரையாகவே பயணம் செய்யும் பழங்கால நடைமுறையிலேயே வந்து செல்கிறார்கள். [18]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads