தயாக்கு மக்கள்
இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தனைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடியினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தயாக்கு அல்லது தயாக்கு மக்கள் அல்லது டயாக் (மலாய்: Kaum Dayak; ஆங்கிலம்: Dayak People அல்லது Dyak People) என்பவர்கள் போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். இந்தப் பழங்குடி மக்களில் 200 துணை இனக்குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஆத்திரோனேசிய மொழியை பேசுகின்றனர்.
ஒவ்வொரு துணை இனக்குழுவும், அவற்றுக்கு என சொந்தப் பேச்சுவழக்கு, பழக்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், வாழ்விடங்கள் மற்றும் கலாசார பயன்பாட்டு முறைமைகளைக் கொண்டுள்ளன. அனைத்து துணை இனக் குழுக்களிடம் பொதுவான பண்பு நலக்கூறுகளை எளிதாக அடையாளம் காண முடியும் என கூறப்படுகிறது.[2][3]
பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். இருப்பினும் இன்றும் பலர் காரிங்கான் (Kaharingan) இந்து மதத்தையும்; நாட்டுப்புற இந்து மதங்களையும் (Folk Hindus) பின்பற்றி வருகின்றனர். 19-ஆம் நூற்றாண்டில், தயாக் மக்கள் பலர் கிறித்துவம் மற்றும் இசுலாம் மதங்களைப் பின்பற்றத் தொடங்கினர். ஏறக்குறைய 46 இலட்சம் தயாக்குகள், போர்னியோ மற்றும் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றனர்.[4][4][5]
Remove ads
பொது
புரூணை மலாய் மொழி மற்றும் மெலனாவு மொழியின் சொல்லில் இருந்து இந்தப் பெயர் உருவானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. "தயாக்" என்றால் "உள்நாட்டு மக்கள்" என்று பொருள்படும்.
தயாக்கு மக்கள் ஒரு மொழியை மட்டும் பேசுவது இல்லை. இவர்களின் பூர்வீக மொழிகள்; நில தயாக்கு மொழிகள், மலாய் மொழி, சபகான் மொழி மற்றும் பாரிட்டோ மொழிகள் போன்ற மலாயா-பாலினேசிய மொழிகளின் வெவ்வேறு துணைக் குழுக்களைச் சேர்ந்தவையாக உள்ளன.[6][7]
போர்னியோவில் 170 உள்ளூர் மொழிகள்
இப்போது எல்லாம் பெரும்பாலான தயாக்குகள், அவர்களின் தாய்மொழிக்கும் கூடுதலாக, இருமொழி பேசுபவர்களாக உள்ளனர். அவர்கள் பிறந்த நாட்டைப் பொருத்து இந்தோனேசிய மொழி அல்லது மலாய் மொழிகளில் நன்றாகப் பேசக் கூடியவர்களாக உள்ளனர்.[8]
அத்துடன் போர்னியோவின் பல உள்ளூர் மொழிகள் வேறு எங்கும் பேசப்படவில்லை. போர்னியோ தீவில் சுமார் 170 உள்ளூர் மொழிகள் பேசப்படுகின்றன. அந்த உள்ளூர் மொழிகளில் சிலவற்றை சில நூறு பேர் மட்டுமே பேசுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
1954-ஆம் ஆண்டில், போர்னியோ தீவு முழுவதும் வாழும் பல்வேறு தயாக்கு குழுக்களை, அந்தக் குழுக்களின் மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்களின்படி 18 பழங்குடிகளாகவும்; 403 துணைப் பழங்குடிகளாகவும் வகைப்படுத்தி உள்ளனர்.[9]
Remove ads
மதம்

இந்து மதம்
காலனித்துவத்திற்கு முன்பு, தயாக்கு மக்கள் சிலர் இந்து மதத்தை கடைப்பிடித்தனர். மஜாபாகித் பேரரசின் (Majapahit Empire) செல்வாக்கின் காரணமாக இந்து மதம் இவர்களிடம் பரவி உள்ளது. கி.பி 960-ஆம் ஆண்டுக்கும் முந்தைய காலத்து இந்து ஆபரணங்கள் (Hindu Ornaments) சரவாக் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
தயாக்கு மக்களால் இந்து மதம் பின்பற்றப் பட்டதற்கான மேலும் சான்றுகள் உள்ளன. இந்து மதச் சிலைகளில் ஒன்றான நந்தியின் (Nandi) சில கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நந்திச் சிலையை தயாக்கு மக்கள் சேவாதா (Jewata) என்று அழைத்து இருக்கிறார்கள். இந்தச் சிலை அவர்களின் வழிப்பாட்டுச் சிலையாக இருந்து உள்ளது.
சேவாதா நந்திச் சிலை
சேவாதா எனப்படும் நந்திச் சிலை ஜாவானிய இந்து மதத்தின் (Javanese Hinduism) தெய்வமாகக் கருதப்பட்டது. நந்தி சிலை, பசுவின் புனிதத் தன்மையைப் பிரதிபலிக்கும் சின்னமாகக் கருதப்படுகிறது. இந்து மதத்திலிருந்து தயாக்கு மொழிக்குள் கடன் பெற்ற வார்த்தைகள் பல உள்ளன.
ஒரு செடிக்கு "பத்மா" (Padma) என்று தயாக்கு மக்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள். மற்றும் ஒரு விண்மீன் கூட்டத்திற்கு "சக்கரா" (Sakara) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். மற்றும் இறந்தவர்களைத் தகனம் செய்யும் அவர்களின் இந்து சமய ஈமச் சடங்கு முறையும் (Antyesti) இந்து மதத்தைப் போன்றே அமைகின்றது.[10]
தயாக்கு மக்களின் இராச்சியங்கள்

தயாக்கு மக்களின் ஆரம்பகாலத்தில், போர்னியோவில் சில இராச்சியங்களும் மாநிலங்களும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. விஜயபுரம் (Wijayapura); கூத்தாய் அரசு (Kutai); பாங்குலே சுல்தாங்காங் அரசு (Bangkule Sultankng) போன்றவை இந்து மதத்தைக் கடைப்பிடித்த அரசுகள் என அறியப்படுகிறது.[11][12][13]
இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் மிகப் பழைமையான இராச்சியமாகக் கருதப்படும், நாண் சாருனாய் இராச்சியத்தை (Nan Sarunai Kingdom) தயாக்கு மக்கள் நிறுவினார்களா என்பது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மற்றும் வரலாற்றாசிரியர்களும் இன்றுவரை ஆய்வுகள் செய்து வருகின்றனர்.[14][15]
நாண் சாருனாய் இராச்சியம் இருந்ததற்கான சான்றுகள், தயாக்கு மக்களால் செதுக்கப்பட்ட பல கல்லறைக் கற்கள் (Carved Tomb Stones) மூலமாகக் கிடைத்து உள்ளன. அத்துடன் 13 - 14-ஆம் நூற்றாண்டுகளில், நாண் சாருனாய் இராச்சியத்தை மயாபாகித்து பேரரசு கைப்பற்றியதை அடிப்படையாகக் கொண்ட தயாக்கு மொழி நாட்டுப்புற பாடலும் (Dayak Folk Song) உள்ளது. அந்தப் பாடலின் பெயர் உசாக் ஜாவா (Usak Jawa).
Remove ads
காரிங்கான்
இந்தோனேசியாவில், தயாக் பூர்வீக மக்களின் மதத்திற்கு காரிங்கான் என்று பெயர் வழங்கப்பட்டு உள்ளது. இந்தக் காரிங்கான் மதத்தில் இந்து - ஜாவானிய தாக்கங்கள் உள்ளன. மேலும் இது ஒரு வகையான ஆன்மவாதமாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. தயாக்கு மக்கள் பின்பற்றும் மதம் இந்து மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் அதனை இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.
இசுலாம்; சீர்திருத்தத் திருச்சபை; கத்தோலிக்க திருச்சபை; இந்து; பௌத்தம்; கன்பூசியம் ஆகிய ஆறு மதங்களை மட்டுமே அதிகாரத்துவ மதங்களாக இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. காரிங்கான் மதம் இன்று வரையில் அங்கீகரிக்கப் படாமல் உள்ளது.
இரான்யிங் தெய்வம்
காரிங்கான் மதத்த்தின் தலையாய குலதெய்வமாக இரான்யிங் தெய்வம் கருதப் படுகிறது. இவர்களின் வழிபாட்டுப் புனித நூலுக்கு பனாத்தூரான் (Panaturan) என்று பெயர். வழிபாட்டுத் தளத்தின் பெயர் பாலாய் பசாரா அல்லது பாலாய் காரிங்கான் (Balai Basarah - Balai Kaharingan).
காரிங்கான் என்பது பழைய டயாக் சொல் ஆகும். காரிங் எனும் சொல்லில் இருந்து உருவானது. காரிங் என்றால் டயாக் மொழியில் உயிர் அல்லது வாழ்வதாரம் என்று பொருள்.
காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம்

காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தது. ஆனாலும் நெருக்குதல் காரணமாக 1980-ஆம் ஆண்டு காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அந்த மதம் இந்து மதத்திற்கு கீழ் இயங்கும் மதமாகவே இயங்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது.
கலிமந்தான் காடுகளில் தற்சமயம் 223,349 காரிங்கான் இந்து சமயத்தவர் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 300 இந்துமதப் பூசாரிகள் உள்ளனர். காரிங்கான் இந்து சமயத்தவர்களுக்கு என்று ஓர் இந்து மாமன்றம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.
காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம் (Great Council of Hindu Religion Kaharingan). மத்திய கலிமந்தானில் இருக்கும் பாலங்கராயா எனும் இடத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
சான்றுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads