த. மா. தியாகராசன்
தென்னிந்திய கருநாடக இசைக்கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. எம். தியாகராஜன் (T. M. Thiagarajan; 28 மே 1923 – 27 சூன் 2007) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞராவார்.
Remove ads
குடும்பப் பின்னணி
இவர் தஞ்சாவூரில் பிரபலமான இசை நாட்டிய விற்பன்னர்களின் வழித்தோன்றலாவார். இவரது பாட்டனாரும், கொள்ளுப் பாட்டனாரும் பரோடா[கு 1] அரண்மனையின் ஆஸ்தான வித்துவான்களாக இருந்துள்ளனர். தற்போது இந்தக் குடும்ப உறுப்பினர் வதோதராவில் தஞ்சோர்கார் என்ற பெயரோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இவரது தந்தை மகாலிங்கம் பிள்ளை ஒரு மிருதங்க வித்துவான். தாயார் சீதாலட்சுமி அம்மாள்.[1]
இசைப் பயிற்சி
தியாகராஜன் முதலில் தனது தந்தையிடம் இசை பயின்றார். பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் குருகுல முறையில் மாணாக்கரானார்.[1]
இசை நிகழ்ச்சிகள்
தியாகராஜன் தனது எட்டாவது வயதில் முதலாவது இசைக் கச்சேரி செய்தார். அதனைக் கேட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை கச்சேரி முடிந்ததும் தியாகராஜனைத் தமது இரு கைகளிலே தூக்கி தமது பாராட்டைத் தெரிவித்தார்.[1]
டி. எம். தியாகராஜன் அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சி சேவைகளிலும், அரங்குகளிலும் ஏராளமான கச்சேரிகள் செய்துள்ளார். தொடக்கத்தில் அவருக்கு அவரது தந்தையார் அல்லது அவரது சகோதரர் தம்புசுவாமி மிருதங்கம் வாசித்தனர். மற்றொரு சகோதரரான பாலசுப்பிரமணியம் வயலின் வாசித்தார். சகோதரர்கள் இருவரும் ஒரே மாதத்தில் உயிரிழந்தனர். இதனால் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் என ஒரு குழுவாக அக்குடும்ப உறுப்பினர் செயற்படும் வாய்ப்பினை அக்குடும்பம் இழந்தது.
அவர் மிகக் கூடுதலான கீர்த்தனைகளை அறிந்து வைத்திருந்ததுடன் அவற்றை மிகுந்த கற்பனைகளுடன் படைக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.[1]
இசை ஆசிரியராக
சென்னையிலுள்ள தமிழ் நாடு அரசு இசைக் கல்லூரியில் ஆசிரியராகவும் உதவித் தலைவராகவும் ஈற்றில் தலைவராகவும் பணியாற்றி 1981 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பின்னர் சென்னை மியூசிக் அகாதமி நடத்திய இசை ஆசிரியர்களுக்கான கல்லூரியின் தலைவராக பணியாற்றினார்.[1]
விருதுகள்
- கலைமாமணி விருது, வழங்கியது: தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம்.[1]
- சங்கீத கலாநிதி விருது, 1981 வழங்கியது மியூசிக் அகாதமி, சென்னை[2]
- சங்கீத நாடக அகாதமி விருது, 1982 வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]
- சங்கீத கலா நிபுணா, 1988 வழங்கியது: மைசூர் ஃபைன் ஆர்ட்ஸ்[1]
- சங்கீத சூடாமணி விருது, 1974 வழங்கியது ஸ்ரீ கிருஷ்ண கான சபா சென்னை[4]
வெளியீடுகள்
- திருப்பாவையும், திருவெம்பாவையும் - இசை ஒலிக் குறிப்புக்களுடன் - 1956
- இசை மலர்க்கொத்து - கோபாலகிருஷ்ண பாரதி, இராமசுவாமி சிவன், திருவாரூர் இராமசாமிப் பிள்ளை போன்ற புலவர்களின் பாடல்கள் அடங்கிய திரட்டு. - 1975
- கீத மாலிகா, கீத சங்கம, கீத ரத்னா, முருக கானம், திருவருட்பா - 2003
- இசை முத்துக்கள் - பெரும்பாலும் சொந்த சாகித்தியங்களுடன் மற்றும் சில அடங்கியது. இவற்றுள் இரண்டு ஸ்வரஜாதி வர்ணங்கள், 27 தான வர்ணங்கள், 10 கிருதிகள், 3 தில்லானாக்கள் அடங்கும். வர்ணங்களில் ஆறு அவரது சொந்த ஆக்கங்கள். ஏனைய வர்ணங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். கிருதிகளும் தில்லானாக்களும் ஒரு வாக்கேயக்காரராக அவரே எழுதியவை.
வர்ணங்கள் கல்யாண வசந்தம், ஹிந்தோளம், சரஸ்வதி, பெஹாக், கானடா, பந்துவராளி ஆகிய இராகங்களில் அமைந்துள்ளன.
ஸ்வரஜாதி வர்ணங்கள் வசந்தா, கல்யாணி இராகங்களில் அமைந்துள்ளன. இவற்றில் ஸ்வரங்களும் ஜதிகளும் மட்டுமே உள்ளன. சாகித்தியம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தில்லானாக்கள் ரேவதி, நாட்டைக்குறிஞ்சி, காபி இராகங்களில் அமைந்துள்ளன.[1]
Remove ads
குணநலன்
டி. எம். தியாகராஜன் தனது கொள்கையில் உறுதியானவர். கச்சேரி வாய்ப்பு கேட்டு யாரிடமும் செல்ல மாட்டார். சாஸ்த்ரீய இசை கடைபிடிப்பதில் விட்டுக் கொடுக்கமாட்டார். இதனால் எல்லா இசை வித்துவான்களும் அவரை மதித்தனர். அவரிடம் இசை கற்பதற்கு பலர் விரும்பினர். அவர் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர்.[1]
மறைவு
நீண்ட கால உடல்நலக்குறைவின் பின் 2007 ஆம் ஆண்டு சூன் 27 ஆம் நாள் சென்னையில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads