வராகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவன் பக்தர்கள்), பிராமணியம் (பிரம்மன் பக்தர்கள்), வைணவம் (விஷ்ணு பக்தர்கள்), சாக்தம் (முப்பெரும் தேவியர்கள் பக்தர்கள்) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமமார்க தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராகியை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் பார்வதியின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். பௌத்த தெய்வங்களான வஜ்ரயோகினி மற்றும் மாரிச்சி ஆகியவை இந்து தெய்வமான வராகியிலிருந்து தோன்றியவை ஆகும்.
Remove ads
தோற்றம்
வராகி விஷ்ணுவின் வராக அவதாரத்தின் அம்சமாவார். இவர் வராகமெனும் காட்டுப்பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருக்கிறார்.
எட்டு வராகிகள்
மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்ன வராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அஷ்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்ட வராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்துத் தொன்மவியல்
மார்க்கண்டேய புராணத்தில் காணப்படும், தேவி மகாத்மியத்திலுள்ள சும்பன் - நிசும்பன் புராணத்தின் படி, சப்தகன்னியர்கள் போன்ற பெண் கடவுளர்களின் தோற்றம் சக்தியின் வடிவமாக, கடவுளர்களின் உடல்களிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது (பெண்பால் சக்திகள்). வராகி வராகாவிலிருந்து உருவாக்கப்பட்டது என்று வேதங்கள் கூறுகின்றன. இப் பெண் தெய்வம் ஒரு பன்றியின் முகத்தையும், ஒரு சக்கரத்தை கையில் ஏந்தியவாறும் காணப்படுகிறது. மேலும், மற்றொரு கையில் இருக்கும் வாளால் போரிடுவதைக் காண முடிகிறது.[1][2] வேதத்தில் விவரிக்கப்பட்ட போருக்குப் பிறகு, சப்த கன்னியர்களில் ஒருவரான வராகி அம்மன் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.[3]

ரக்தாபிஜா என்ற அரக்கனைக் கொன்றது குறித்து தேவி மகாத்மியத்தின் பிந்தைய அத்தியாயத்தின்படி, முக்கிய போர்வீரர்-தெய்வமாகிய துர்க்கை, சக்திகளை தன்னிடமிருந்து உருவாக்கி, அவர்களின் உதவியுடன் அரக்கனை படுகொலை செய்கிறார். சும்பா என்ற அரக்கன் துர்காவை நேருக்குநேரான போருக்கு சவால் விடும்போது, அவள் சப்த கன்னியர்களை தனக்குள் உள்வாங்கிக் கொள்கிறாள்.[4] வாமன புராணத்தில், தெய்வீக தாய் எனப் போற்றப்படும், சண்டிகாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இந்த சக்திகள் தோன்றுகின்றன என்று கூறப்பட்டுள்ளது; இந்த சக்திகளில் ஒருவரான வராகி, சண்டிகாவின் முதுகில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.[2][5]
மார்கண்டேய புராணம் வராகியை வரங்களை அள்ளித் தருபவராகவும், வடக்கு திசையின் அதிபதியாகவும் புகழ்ந்துரைக்கிறது. ஒரு பாடலில், இந்த சக்திகள், திசைகளின் பாதுகாவலர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அதே புராணத்தில் மற்றொரு சந்தர்ப்பத்தில், வராகி, ஒரு எருமையின் மீது சவாரி செய்பவள் என்று விவரிக்கப்படுகிறாள்.[6] தேவி பகவத புராணத்தில் வராகி, மற்ற சக்திகளுடன், துர்கா எனப்படும் ஆதிபராசக்தியால் உருவாக்கப்பட்டது என்று விவரிக்கிறது. தேவைப்படும்போது இந்த சக்திகள், பேய்களுடன் போராடுவார்கள் என்று தாயான ஆதிபராசக்தி தெய்வங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ரக்தாபிஜா அரக்கனை வதம் செய்யும் புராணத்தில், வராகி ஒரு பன்றி முகவடிவம் கொண்டவர், மேலும், ஒரு சடலத்தின் மீது அமர்ந்திருக்கும்போது பேய்களை தனது தந்தங்களைப் பயன்படுத்தி சண்டையிடுவதாக விவரிக்கப்படுகிறார்.[7]
வராக புராணத்தில், ரக்தாபிஜாவின் கதை மீண்டும் சொல்லப்படுகிறது, ஆனால் இங்கே ஒவ்வொரு சக்தியும் மற்றொரு சக்தியின் உடலில் இருந்து தோன்றும். விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியின் பின்புறத்திலிருந்து சேசன் - நாகா ( விஷ்ணு தூங்கும் பாம்புப் படுக்கை) வராகி தோன்றியதாக கூறப்படுகிறது.[8] வராகி அதே புராணத்தில் பொறாமையைக் (அசூயா) குறிப்பதாகக் கூறப்படுகிறது.[9]
மச்ச புராணம் வராஹியின் தோற்றத்தைப் பற்றி, வித்தியாசமான கதையைச் சொல்கிறது. வராகி, மற்றும் பிற சக்திகள் சிவனால் உருவாக்கப்பட்டு உள்ளது. சிவன் அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக இவர்களை தோற்றுவித்தார் என்று இந்த புராணத்தில் கூறப்படுகிறது. அந்தகாசுரன் எனப்படும் அரக்கன், ரக்தாபிஜா அரக்கனைப் போல அவனுடைய ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் வலிமையை உடையவன். ஆதலால், அந்தகாசுரனை அழிப்பதற்கு சிவன் வராகியின் உதவியைப் பெற்றார் எனக் கதையில் சொல்லப்படுகிறது.[8]
Remove ads
வராகி அம்மன் கோயில்கள்

சப்த கன்னியர்களில் ஒரு பகுதியாக வராகி அம்மனை வழிபடும் கோயில்களைத் தவிர, வராகி அம்மனை பிரதான தெய்வமாக வணங்கப்படும் குறிப்பிடத்தக்க கோயில்களும் உள்ளன.
- தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியாக உள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியில் அருள்மிகு செரைக்கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்ட வராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.[10]
- நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது.[11]
- கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.
- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது.
- திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சப்தமாதா தனி சன்னதியாக சப்தமாதாகள் உடன் வாரஹி அம்மன் உள்ளார்.
- இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற ஊரில் உத்தரகோசமங்கை மங்கலநாதர் திருக்கோயிலுக்கு 200மீ தொலைவில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.
- இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், கொக்குவில் மேற்கு, கொக்குவில் என்ற ஊரில் வாராகி அம்மனுக்குத் தனிக் கோவில் உள்ளது.
- திருச்சி எழில்நகர் அருள்மிகு லெட்சுமி கணபதி ஆலயத்தில், வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.
- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பிரெட்டிபட்டியில் ஸ்ரீ சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது .
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads