சிவகாசி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவகாசி (Sivakasi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டம் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இந்த மாநகராட்சி தற்போது 48 வார்டுகளைக் கொண்டுள்ளது.[4] சிவகாசி சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[5]
சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு, சிவகாசி நகராட்சி 24 ஆகத்து 2021 அன்று தமிழ்நாடு மாநிலத்தின், 21-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.45°N 77.82°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது.
சிவகாசி வரலாறு

தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாகக் கட்டினர். இந்த கோயில் தற்போது காசி விஸ்வநாதசாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.[சான்று தேவை]
சிவகாசி நகராட்சி 1920 இல் நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சிவகாசி மெட்ராஸ்(தற்போது சென்னை) மாநிலத்தின் கீழ் ஒரு நகராட்சியாகவும், பின்னர் 1953, 1956 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் மொழியியல் ரீதியாக பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் தொடர்ந்தது. பின்னர் 1968 இல் மறுபெயரிடப்பட்டது. பின்னர் 1978 இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1978 இல் முதல் நிலை நகராட்சியாகவும், 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013ல் நிர்வாகத் தலைமையிட சிறப்பு நிலை நகராட்சியாகவும் , 24 ஆகஸ்ட் 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[11] சிவகாசியானது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடும் தொழில்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்துறை நகரம். இங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தீ மற்றும் வெடிவிபத்துகள் என பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சிவகாசி நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71,040 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,356 ஆண்கள், 35,684 பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்கள்தொகையின் பாலின விகிதம் 1009. அதாவது 1000 ஆண்களுக்கு, 1009 பெண்கள் இருக்கிறார்கள். சிவகாசி மக்களின் சராசரி கல்வியறிவு 88.28% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.76%, பெண்களின் கல்வியறிவு 83.84% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 6,963 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 18,952 வீடுகள் உள்ளன.[4]
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.42% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 9.21% கிருஸ்துவர்கள் 5.20%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சிவகாசி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 8.35%, பழங்குடியினர் 0.25% ஆக உள்ளனர்.[13]
தொழில்
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. 1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.
சிவகாசி நகரமானது மூன்று முக்கிய தொழில்களைச் சார்ந்துள்ளது: பட்டாசுகள், தீப்பெட்டி உற்பத்தி மற்றும் அச்சிடுதல் போன்றவையாகும். இந்த நகரத்தில் 520 பதிவு செய்யப்பட்ட அச்சிடும் தொழில்கள், 53 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 32 இரசாயன தொழிற்சாலைகள், ஏழு சோடா தொழிற்சாலைகள், நான்கு மாவு ஆலைகள் மற்றும் இரண்டு அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இந்த நகரம் தேசிய அளவில் பட்டாசு உற்பத்திக்கான ஒரு முக்கிய நகரமாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டில், இந்தத் தொழிலில் 25,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் ஆண்டு வருமானம் 5 பில்லியன் டாலர் (அமெரிக்க $ 72 மில்லியன்) ஆகும். 2011 ஆம் ஆண்டில், நகரத்தில் பட்டாசு, தீப்பெட்டி தயாரித்தல் மற்றும் அச்சிடும் துறையின் மொத்த வருவாய் சுமார் 20 பில்லியன் (அமெரிக்க $ 290 மில்லியன்) ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டிகள் ஏறத்தாழ 70% சிவகாசியிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. நகரத்தின் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில்களுக்கு உகந்ததாகும். இந்தத் தொழில்களுக்கான மூலப்பொருட்கள் முன்னதாக சத்தூரிலிருந்து வாங்கப்பட்டன, ஆனால் அதிக உற்பத்தி செலவு காரணமாக அவை நிறுத்தப்பட்டன.[14] தற்போது மூலப்பொருட்களின் கேரளா மற்றும் அந்தமான் ஆகிய நகரங்களிலிருந்து வாங்கப்படுகிறது. அச்சிடும் தொழிலுக்கான காகிதம் பல்வேறு மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. இந்த நகரம் தினக்குறிப்புப்புத்தகம் தயாரிப்பதில் முக்கின பங்கு வகிக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த தினக்குறிப்புப்புத்தகம் 30% இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இந்நகரத்தில் அச்சிடும் தொழில் ஆரம்பத்தில் பட்டாசுகளுக்கான லேபிள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் நவீன இயந்திரங்களுடன் பரிணாமம் அடைந்து அச்சிடும் மையமாக வளர்ந்தது. 2012 ஆம் ஆண்டில், அனைத்து தொழில்களும் மின் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் செலவு அதிகரிப்பதால் 15-20% உற்பத்தி இழப்பை சந்தித்தன.
Remove ads
கல்வி நிலையங்கள்
2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, இந்நகரத்தில் ஐந்து அரசுப் பள்ளிகள் உள்ளன. அதில் இரண்டு தொடக்கப் பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும். மேலும் பத்து தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு இருக்கும் சிவகாசி இந்து நாடார் உறவின் முறை விக்டோரியா பள்ளிகள் மிகவும் பழமையானதாகும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்நகரத்தில் இரண்டு பொறியியல் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் மெப்கோ பொறியியல் கல்லூரி முக்கியமானது. நகரத்தில் மூன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் மூன்று தொழிற்நுட்பக் கல்லூரிகளும் உள்ளன. மேலும் எச். எப். ஆர் என்னும் மகளிர் கல்லூரியானது, இந்நகரத்தில் பெண்கள் படிப்பதற்கு முக்கிய கல்லூரியாக உள்ளது.
Remove ads
அரசியல்
இது சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக) ஐந்து முறையும்(1980, 1984, 1991, 2011 மற்றும் 2016 தேர்தல்களில்), தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) இரண்டு முறையும்(1996, 2001), திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக) ஒரு முறையும் (1989), ஜனதா கட்சி ஒரு முறையும் (1977), மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) ஒரு முறையும் (2006) வென்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர், அதிமுகவைச் சேர்ந்த கே. டி. ராஜேந்திர பாலாஜி ஆவார்.
சிவகாசி தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இதற்கு முன்பு சிவகாசி ஒரு மக்களவைத் தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சிவகாசி மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, சிறீவில்லிப்புத்தூர், இராசபாளையம் (தனி) ஆகியவை இதற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள் ஆகும். பின்னர் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் ஆவார்.
Remove ads
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து

இந்நகரமானது சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய நகரங்களுடன் இணைகிறது. இந்நகரத்தை சுற்றி புறவழிச்சாலை இல்லை. இந்நகரத்திலிருந்து மதுரை, விருதுநகர், சென்னை, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், காரைக்குடி, திண்டுக்கல், திருச்சி, இராமநாதபுரம், தஞ்சாவூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, இராஜபாளையம், தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சாலைகள் செல்கிறது. இந்நகரம் ஒரு தொழில்துறை நகரமாக இருப்பதால், குறிப்பிடத்தக்க லாரி போக்குவரத்து உள்ளது, ஒரு நாளைக்கு சுமார் 400-450 லாரிகள் தினமும் நகரத்திற்குள் நுழைகின்றன.
தொடருந்து போக்குவரத்து

சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, சிவகாசி தொடருந்து நிலையம் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி தொடருந்து நிலையமானது மதுரை - செங்கோட்டை - கொல்லம் வழிதடத்தில் அமைந்துள்ளது. இது விருதுநகர், இராஜபாளையம் மற்றும் செங்கோட்டை, கொல்லம் வழியாக தமிழகத்தை கேரளாவுடன் இணைக்கிறது. பொதிகை அதிவிரைவு இரயிலானது சிவகாசி வழியாக செங்கோட்டை முதல் சென்னை எழும்பூர் வரை செல்கிறது. சிலம்பு, கொல்லம் விரைவு இரயில்களும் சிவகாசி வழியாக செல்லுகின்றன. மேலும் மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்துகளும் செல்கின்றன. மற்ற அனைத்து விரைவு இரயில்களும், விருதுநகர் தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
காசி விஸ்வநாதசாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயில், பத்ரகாளியம்மன் கோவில், சிவகாசி பத்ரகாளியம்மன் ஆலயம், பராசக்தி மாரியம்மன் ஆலயம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில், திருவெங்கடாசலபதி ஆலயம், ஸ்ரீ மாரியம்மன் கோயில் போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். இங்கு பங்குனி மாதம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் சித்திரை மாதம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆருத்ரா தரிசனம் திருவிழாவும் முக்கியமானதாகும். அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

