இயேசு
கிறித்தவ சமயத்தின் மைய நபர் / From Wikipedia, the free encyclopedia
இயேசு (Jesus[lower-alpha 5]; அண். 6 - 4 பொ. ஊ. மு. – பொ. ஊ. 30 - 33, மேலும் நசரேத்தின் இயேசு அல்லது இயேசு கிறிஸ்து எனவும் வேறு பெயர்களாலும் தலைப்புக்களாலும் அறியப்படுகிறார்)[lower-alpha 6] என்பவர் முதலாம் நூற்றாண்டு யூத போதகரும், சமயத் தலைவரும் ஆவார்.[12] இவர் உலகின் மிகப்பெரிய சமயமான கிறிஸ்தவத்தின் மைய நபரும் ஆவார். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவர் கடவுளின் மகனாக அவதரித்தார் என்றும், எபிரேய வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்ட மெசியா (கிறிஸ்து) என்றும் நம்புகிறார்கள்.
இயேசு Jesus | |
---|---|
சிசிலியில் செஃபலு நகரின் பேராலயத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஓவியம். கலை: பதிப்புக்கல் பாணி. காலம்: 12-ஆம் நூற்றாண்டு. | |
பிறப்பு | அண். பொ. ஊ. மு. 6 - 4 [lower-alpha 1] எரோதிய இராச்சியம், உரோமைப் பேரரசு[5] |
இறப்பு | பொ. ஊ. 30 – 33[lower-alpha 2] எருசலேம், யூதேயா, உரோமைப் பேரரசு |
இறப்பிற்கான காரணம் | சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்[lower-alpha 3] |
கல்லறை | காண்க: இயேசுவின் உயிர்த்தெழுதல் |
இனம் | யூதர் |
சொந்த ஊர் | நாசரேத், கலிலேயா[11] |
பெற்றோர் | தாய்: மரியாள் வளர்ப்புத் தந்தை: யோசேப்பு |
பண்டைக் காலத்தை ஆய்வு செய்யும் கிட்டத்தட்ட அனைத்து நவீன அறிஞர்களும் இயேசுவின் வரலாற்றுத் தன்மையை ஒப்புக் கொள்கின்றனர்.[lower-alpha 7] இயேசுவின் வாழ்வு குறித்த விவரங்கள் நற்செய்திகளில், குறிப்பாக புதிய ஏற்பாட்டின் நான்கு திருமுறை நற்செய்திகளில் உள்ளடங்கியுள்ளன. கல்வி சார்ந்த ஆய்வானது நற்செய்திகளின் வரலாற்று நம்பகத் தன்மை மற்றும் அவை வரலாற்று நபராக இயேசுவை எந்த அளவுக்கு நெருக்கமாக பிரதிபலிக்கின்றன என்பது குறித்து பரவலான பார்வைகளைக் கொடுக்கிறது.[20][lower-alpha 8][23][24] பிறந்து எட்டாம் நாளில் இவருக்கு விருத்தசேதனம் செயப்பட்டது. இவர் இளைஞராக திருமுழுக்கு யோவான் என்பவரிடம் திருமுழுக்கு பெற்றார். 40 பகல்கள் மற்றும் இரவுகள் யூதேயா பாலைவனத்தில் நோன்பிருந்த பிறகு நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தைத் தொடங்கினார். இடம் விட்டு இடம் பெயர்ந்து போதித்த ஆசிரியர் என்பதால் இவர் பெரும்பாலும் "ரபி" என்று அழைக்கப்பட்டார்.[25] கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இயேசு தன் சக யூதர்களுடன் விவாதித்தார். மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; உவமைகள் மூலம் போதித்தார். பின்பற்றுவோரைப் பெற்றார். இவரைப் பின்பற்றியவர்களில் பனிரெண்டு பேர் இவரது முதன்மையான சீடர்கள் ஆவர். இவர் தன்னை கடவுள் எனக்கூறி கடவுள் மட்டும் செய்யக்கூடிய பாவ மன்னிப்பைப் பிறருக்கு வழங்கியது போன்ற விடயங்கள் மூலம் யூத அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளானார்.[26] எருசலேத்தில் கைது செய்யப்பட்டார். யூத தலைமைச் சங்கத்தால் விசாரிக்கப்பட்டார்.[26] உரோமை அரசின் முன் நிறுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து யூதேயாவின் உரோமை ஆளுநர் பொந்தியு பிலாத்து என்பவரின் கட்டளைப்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.[27] இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக பார்த்து நம்பி இவரது சீடர்கள் இணைந்து தோற்றுவித்த சமுதாயம் பிறகு தொடக்க கால கிறித்தவமாக வளர்ந்தது.[28] இவரது போதனைகள் மற்றும் வாழ்வு குறித்த விவரங்களானவை தொடக்கத்தில் வாய் வழிச் செய்திகளாக பகிரப்பட்டன. இவையே பின்னர் எழுதப்பட்ட நற்செய்திகளுக்கு ஆதாரங்களாக விளங்கின.[29]
தூய ஆவியின் மூலம் கன்னி மரியா கருவுற்று இயேசுவை ஈன்றெடுத்தார், இயேசு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார், கிறித்தவத் திருச்சபையைத் தோற்றுவித்தார், மக்களின் பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், இறந்த நாளில் இருந்து அடுத்த மூன்றாம் நாள் சாவினின்று உயிர்த்தெழுந்து விண்ணேற்றம் அடைந்தார், மேலும், பூமிக்கு மீண்டும் வருவார் முதலிய நம்பிக்கைகள் கிறித்தவ இறையியலில் உள்ளடங்கியுள்ளன. கடவுளுடன் சமரசமடைந்தவர்களாக மக்களை இயேசு ஆக்குவதாக கிறித்தவர்கள் நம்புகின்றனர். மக்கள் உயிர்த்தெழுவதற்கு முன்னரோ அல்லது பிறகோ வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் இயேசு தீர்ப்பு வழங்குவார் என நைசின் விசுவாச அறிக்கை குறிப்பிடுகிறது. கிறிஸ்தவ அறுதிவிளைவியலில் இயேசுவின் இரண்டாம் வருகையுடன் இந்நிகழ்வு தொடர்புடையதாகும். மகனாகிய கடவுளின் பிறப்பாக, திரித்துவத்தின் மூவரில் இரண்டாமவராக இயேசுவை பெரும்பாலான கிறித்தவர்கள் வழிபடுகின்றனர்.[lower-alpha 9] இயேசுவின் பிறப்பானது ஆண்டு தோறும், பொதுவாக 25 திசம்பர்[lower-alpha 10] அன்று கிறிஸ்துமஸாகக் கொண்டாடப்படுகிறது. இவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக போற்றப்படுகிறது. உயிர்தெழுந்த நாள் உயிர்ப்பு ஞாயிறுவாக கொண்டாடப்படுகிறது. உலகின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாட்காட்டி சகாப்தமானது - இதில் தற்போதைய ஆண்டு பொ. ஊ. 2024 - இயேசுவின் தோராயமான பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டதாகும்.[30]
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். இசுலாமிய சமயத்தில் இயேசு முக்கியமான இறைத்தூதர்களில் ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் கன்னி மரியாளிடம் பிறந்தவர் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை.[31] மெசியா குறித்த இறைவாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் இயேசு மெசியா இல்லை என்று யூத மதத்தினர் வாதிடுகின்றனர்.