கிளாந்தான்
மலேசிய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிளாந்தான் (ஆங்கிலம்: Kelantan; மலாய் மொழி: Kelantan Darul Naim; சீனம்: 吉蘭丹; சாவி: کلنتن دار النعيم தாய் மொழி: รัฐกลันตัน) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் வடக்கே தாய்லாந்து நாடு உள்ளது. கிளாந்தான் மாநிலத்திற்கு மேற்கே பேராக், கெடா, பெர்லிஸ் மாநிலங்கள் உள்ளன. தெற்கே திராங்கானு, பகாங் மாநிலங்கள் உள்ளன. கிழக்கே தென் சீனக் கடல் உள்ளது. பகாங் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 474 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.
கோத்தா பாரு நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமாகவும், தலைநகரமாகவும் விளங்குகின்றது. கிளாந்தான் மாநிலத்திற்கு ‘டாருல் நாயிம்’ எனும் நன்மதிப்பு அரபு அடைமொழியும் உண்டு. ’டாருல் நாயிம்’ என்றால் ‘மகிழ்ச்சியான இருப்பிடம்’ என்று பொருள். [4]
கிளாந்தான் ஒரு விவசாய மாநிலம் ஆகும். இங்கு நெல் வயல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கடற்கரைகளில் நிறைய மீனவக் கிராமங்கள் உள்ளன.[5] பல ஆயிரம் ஆண்டுகளாகப் பூர்வீகக் குடிமக்கள், இந்த மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
Remove ads
வரலாறு
கிளாந்தான் எனும் பெயர் Melaleuca leucadendron [6] எனும் சதுப்பு நில தேயிலை மரத்தின் பெயரில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.[7] ‘கோலாம் தானா’ எனும் நிலக்குளத்தின் பெயரில் இருந்து வந்ததாகவும் ஒரு சாரார் சொல்கின்றனர். கிளாந்தானை சயாமியர்கள் ஆட்சி செய்த போது ‘கெலாந்தான்’ (தாய் மொழி: กลันตัน) என்று அழைத்தனர்.
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனித குடியிருப்புகள் கிளாந்தான் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு வாழ்ந்த மக்கள் சீனாவின் பூனான் பேரரசு, கெமர் பேரரசு, ஸ்ரீ விஜயா பேரரசு, மஜாபாகித் அரசு போன்ற மாபெரும் பேரரசுகளுடன் தொடர்பு வைத்து இருந்தனர்.
ராஜா குமார்
1411இல் கிளாந்தான் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ராஜா குமார், சயாமிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றார். அதன் பின்னர், 15ஆம் நூற்றாண்டு இறுதி வாக்கில், கிளாந்தான் முக்கிய வணிகத் தளமாக மாற்றம் கண்டது. 1499இல் கிளாந்தான் மாநிலத்தின் ஆளுமை, மலாக்கா பேரரசின் கீழ் வந்தது.
1511இல் மலாக்கா வீழ்ச்சி அடைந்ததும், கிளாந்தான் அரசு சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அந்தப் பிரிவுகளை குழுத் தலைவர்கள் நிர்வாகம் செய்தனர். அந்தக் காலகட்டத்தில் தென் தாய்லாந்தில் இருந்த பட்டாணி அரசுக்கு கிளந்தான் குழுத்தலைவர்கள் கப்பம் கட்டினர். 17ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பெரும்பாலான குழுத்தலைவர்கள் பட்டாணி அரசின் குடிமக்களாக மாறினர்.
ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை
1760இல் குபாங் லாபு எனும் ஓர் இராணுவத் தலைவர், கிளாந்தான் மாநிலத்தில் பிரிந்து கிடந்த சிற்றரசுகளை ஐக்கியப் படுத்துவதில் வெற்றி கண்டார்.[8] 1909ஆம் ஆண்டில் ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின் படி கிளாந்தான், திரங்கானு, கெடா, பெர்லிஸ் மாநிலங்கள் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. கிளாந்தான் மாநிலத்திற்கு ஜே.எஸ்.மாஸ்கோன் என்பவர்ஒரு பிரித்தானிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[9]
ஜப்பானியர் ஆட்சி
1941 டிசம்பர் 8ஆம் தேதி ஜப்பானியர்கள் கிளாந்தானில் தரையிறங்கினர். டிசம்பர் 22ஆம் தேதி, கிளாந்தான் ஜப்பானியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. எனினும் 1943இல் ஜப்பானியர்கள் கிளந்தானை சயாமியர்களிடம் ஒப்படைத்தனர். 1945 செப்டம்பர் 8ஆம் தேதி ஜப்பானியர்கள் சரண் அடையும் வரையில், கிளாந்தான் சயாமியர்களின் வசம் இருந்தது.[10]
1948இல் மலாயா கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டதும், அதில் கிளாந்தான் இணைந்தது. 1957இல் மலாயா சுதந்திரம் பெற்றது. 1963இல் மலேசியா உருவானதும் அதில் ஒரு மாநிலமாக கிளாந்தான் பிரகடனம் செய்யப்பட்டது.
Remove ads
புவியியல்
பல நூற்றாண்டுகளாக, கிளாந்தான் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலமாகவே இருந்து வந்துள்ளது. கிளாந்தான் மாநிலம் மட்டும் அல்ல. தீபகற்ப மலேசியாவின் மற்ற கிழக்குக்கரை மாநிலங்களான பகாங், திரங்கானு மாநிலங்களும் பின்தங்கிய மாநிலங்களாகவே இருந்து வந்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் மத்தியமலைத் தொடரான தித்திவாங்சா மலைகள் ஆகும்.[11]
தீபகற்ப மலேசியாவை தித்திவாங்சா மலைத்தொடர் இரண்டாகப் பிரிக்கின்றது. மத்தியமலைத் தொடரைக் கடந்து மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குக்கரைக்குச் செல்ல பல வாரங்கள் பிடிக்கும். மத்தியமலைத் தொடரில் உள்ள மலைகள் அனைத்தும் மிகவும் உயரமான மலைகள் ஆகும். குனோங் கொர்பு போன்ற உயரமான மலைகள் இங்கு உள்ளன. ஆகவே, அவற்றைக் கடந்து செல்வது என்பது எளிதான காரியம் அல்ல.
கிளாந்தான் வரலாற்றில் கடல்களும், கப்பல்களும்
முன்பு காலங்களில் கிளாந்தானுக்குச் செல்ல வேண்டும் என்றால் கடல் வழியாகச் செல்ல வேண்டிய ஒரு நிலை இருந்தது. பிரித்தானியர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜொகூர் மாநிலத்தில் உள்ள கிம்மாஸ் நகரில் இருந்து கிளாந்தானுக்கு இரயில் பாதை அமைத்தனர். போக்குவரத்து சற்றே இலகுவானது.
கடல் வழியாகச் செல்லும் போது தென்சீனக்கடலின் இராட்சச அலைகளையும், கடல் கொள்ளையர்களையும் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அதனால்தான் கிளாந்தான் மாநில வரலாற்றில் கடல்களும், கப்பல்களும் பிணைந்து போய்க் காணப்படுகின்றன.
நவீனமான நெடுஞ்சாலைகள்
1980களில் தலைநெடுஞ்சாலைகள் அல்லது பெருவழிகள் அமைக்கப்பட்டன. இந்தச் சாலைகள் கிளாந்தான் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்க பெரிதும் உதவுகின்றன. தவிர மிக நவீனமான நான்குவழி நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகள் மத்தியமலைத் தொடரைப் பிளந்து செல்கின்றன.
இப்போது, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஒருவர் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தாபாருவிற்கு ஐந்து மணி நேரத்தில் சென்று அடைய முடியும். அந்த அளவிற்கு நவீனமான சாலைகள் அமைக்கப்பட்டு விட்டன.
Remove ads
கிளாந்தான் மாவட்டங்கள்
கிளாந்தான் மாநிலத்தில் 10 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் பட்டியல்:
- பாச்சோக் மாவட்டம்
- குவா மூசாங் மாவட்டம்
- ஜெலி மாவட்டம்
- கோத்தா பாரு மாவட்டம்
- கோலா கிராய் மாவட்டம்
- மாச்சாங் மாவட்டம்
- பாசீர் மாஸ் மாவட்டம்
- பாசீர் பூத்தே மாவட்டம்
- தானா மேரா மாவட்டம்
- தும்பாட் மாவட்டம்
கிளாந்தானில் உள்ள முக்கிய நகரங்கள்
கிளாந்தான் மாவட்டங்களின் மக்கள் தொகை
பொருளியல்
கிளாந்தான் ஒரு விவசாய மாநிலம் ஆகும். இங்கு நெல், ரப்பர், புகையிலை போன்றவை முக்கிய விவசாயப் பொருட்கள். கிளாந்தானின் 96 கி.மீ. நீள கடல்கரைகளில் மீன்பிடிப்புத் தொழில் மிக முக்கியத் தொழிலாக விளங்குகிறது. கைவினைப்பொருள்கள் தயாரித்தல், மரச்சாமான்கள் தயாரித்தல், பாத்திக் துணி நெய்தல் போன்றவை பிரதான குடிசைத் தொழில்கள் ஆகும்.
காட்டு மரங்களும் அதிகமாக வெட்டப்பட்டன. ஆனால், இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அரசாங்கம் அனுமதித்த காடுகளில் மட்டுமே காட்டு மரங்கள் வெட்டப்படுகின்றன. கிளாந்தான் மாநிலத்தின் தொலைகடல் தீவுகளில் சுற்றுலாத் துறை தீவிரம் அடைந்து வருகிறது.
சுற்றுலா தளங்கள்
சஹாயா பூலான் (Cahaya Bulan Beach),[12] இராமா கடல்கரை (Irama Beach), பிசிக்கான் பாயு (Pantai Bisikan Bayu),[13] பந்தாய் சாபாக் (Pantai Sabak), ஸ்ரீ தூஜோ கடல்கரை (Sri Tujuh Beach) போன்றவை புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் ஆகும். மலாய்க்காரர்களின் கலாசாரத் தொட்டில் (Cradle of Malay Culture) என்று கிளாந்தான் மாநிலம் மலேசியா வாழ் மக்களால் புகழப்படுகிறது.[14]
வாயாங் கூலிட் (Wayang Kulit)[15] எனும் நிழல் பொம்மலாட்டம், டிக்கிர் பாராட் (Dikir Barat)[16] நடனம், மாக் யோங் (Mak Yong) [17] ஆட்டம், ரெபானா உபி (Rebana Ubi)[18] இசை நடனம் போன்றவை கிளாந்தான் மாநிலத்திற்கே உரிய சிறப்பு கலை அம்சங்களாகும். அதைத் தவிர, பெரும் பட்டம் விடுதல், பெரும் பம்பரம் விடுதல் போன்றவை உலகப் புகழ் பெற்ற விளையாட்டு நிகழ்ச்சிகளில் சேர்க்கப்படுகின்றன.
தங்க வெள்ளி டினார் நாணயங்கள்
கோத்தா பாரு தலைநகரமாகவும் முக்கியமான வணிக மையமாகவும் விளங்குகின்றது. 2010இல் கிளாந்தான் மாநிலத்தின், உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியின் தனிநபர் வருமானம் 10,004 ரிங்கிட்டாக இருக்கிறது. இது மற்ற சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவானது ஆகும். மலேசியாவில் தங்க டினார், வெள்ளி டினார் நாணயங்களை வெளியிட்ட முதல் மாநிலமாக கிளந்தான் சிறப்பு பெறுகிறது.
Remove ads
பருவநிலை
கிளாந்தான் மாநிலம் அயனமண்டல பருவநிலையைக் கொண்ட மாநிலம். அதன் வெப்ப நிலை 21 to 32 °செல்சியஸ். வருடம் முழுமையும் விட்டு விட்டு மழை பெய்யும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரையில் மழைப்பருவ காலம்.
அரசியல் நிர்வாகம்
1949ஆம் ஆண்டு கிளாந்தான் அரசியலமைப்பு அமலுக்கு வந்தது. கிளாந்தான் அரசியலமைப்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
- முதலாவது பிரிவு: சட்டப்பிரிவுகள்.
- இரண்டாவது பிரிவு: பொதுமக்களுக்கான சட்ட அமைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads